சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை: வைகோ

தமிழகத்தில் அமையப்போவது ஸ்டாலின் ஆட்சி. கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என வைகோ பேசியது...

News image

உறையூா் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலா் வைகோ. - டிஎன்எஸ்

Updated On :13 ஏப்ரல் 2026, 4:34 am

திருச்சி: தமிழகத்தில் அமையப்போவது ஸ்டாலின் ஆட்சி. கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை; அந்த நிலையை மக்கள் ஏற்படுத்த மாட்டார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கே.என்.நேருவை ஆதரித்து, திருச்சி உறையூா் பாண்டமங்கலம் பகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

சுயமரியாதை, சமூகநீதி சமத்துவம், சகோதரத்துவ மதச்சார்பின்மை, கூட்டாட்சி கருத்தியல் கொண்ட இயக்கம் திராவிட மாடல் ஆட்சி நடத்துகிற இயக்கம். கடந்த ஐந்தாண்டு காலத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம், கட்டணம் இல்லா விடியல் பயணம், முதல்வர் காலை உணவு திட்டம், புதுமைப் பெண், தமிழ் புதல்வன், நான் முதல்வன், மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்த நமது முதல்வரை, பிற மாநிலங்களில் இருக்கக்கூடிய முதல்வர்கள், தலைவர்கள் பின்பற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

இதில், திருச்சி மேற்கு தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை அமைச்சர் கே.என்.நேரு செய்து கொடுத்துள்ளார். சிங்கப்பூருக்கு நிகராக, ஆசிய கண்டத்திலேயே எங்கும் இல்லாத பேருந்து முனையம், காய்கறி சந்தை, டைடல் பார்க் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை ஏற்படுத்தி உள்ளார்.

ஸ்டொ்லைட் துப்பாக்கி சூட்டுக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம்

நான் செந்தமிழ் நாட்டின் உரிமைகளை காப்பதற்காக என் வாழ்நாளை அர்ப்பணித்தவன். ஐந்தரை ஆண்டு காலம் சிறையில் இருந்தவன். 6500 கிலோமீட்டர் நடை பயணம் சென்றவன். ஸ்டெர்லைட்காக போராடியவன். 13 உயிர்களை காவு வாங்கியவர் எடப்பாடி பழனிசாமி. ஸ்டெர்லைட் ஆலையின் எடுபிடி ஏஜெண்டாக, புரோக்கராக எடப்பாடி மாறியதால் அந்த துப்பாக்கி சூடு நடந்தது. அதேபோல சாத்தான்குளத்தில் தந்தை - மகன் அடித்துக் கொல்லப்பட்டதற்கும் அப்போதைய எடப்பாடி பழனிசாமி அரசுதான் பொறுப்பு.

ஆணவத்தோடு பேசுகிறார் அமித்ஷா

உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆணவத்தோடு திமுகவை வேருடன் பிடுங்கி எறிவேன் என்றாா். இதேபோல, அண்ணாமலையும் கூறியுள்ளாா். யாராலும் அதை செய்ய முடியாது. திமுக தியாகத்தால் கட்டப்பட்ட கோட்டை. 75 ஆண்டுகால பாரம்பரிய திமுகவை தோற்கடிப்போம் எனப் பேசினால், அது ஜனநாயக உரிமை. ஆனால், மண்ணுடன் கலந்திருக்கக் கூடிய இயக்கத்தை அழிப்போம் என்கின்றனா்.

நான் கலைஞருக்கு எவ்வாறு பக்க பலமாக, உற்ற துணையாக இருந்தேனோ அதேபோல, ஸ்டாலினுக்கும் இருப்பேன் என கலைஞர் இடத்தில் உறுதியளித்துள்ளேன். திராவிட இயக்கத்தை நெஞ்சில் சுமப்பவன் நான்.

இந்த இயக்கத்தை சாய்ப்பதற்கு சனாதன சக்திகளும், அதன் வெறிபிடித்த கூட்டமும் இங்கே நுழைந்து விடக்கூடாது. அமைதி பூங்காவாக திகழ்கிறது தமிழ்நாடு. தளபதி ஸ்டாலின் நிர்வாகத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் சகோதரர்களாக வாழக்கூடிய சூழ்நிலை உள்ளது. வடநாட்டில் ரத்தக் களறிகள் ஏற்படுவதைப் போல, தமிழ்நாட்டிலும் ஏற்படுத்திவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு வருகிற கூட்டத்தை தடுத்து, தகர்த்து தவிடுபொடி ஆக்க வேண்டிய கடமை எனக்கும் உண்டு.

பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் கே.என்.நேரு வெற்றி பெறுவார். தோ்தலில் வெற்றி பெற்று, அடுத்து தமிழகத்தில் அமையப்போவது ஸ்டாலினின் திமுக ஆட்சிதான்; கூட்டணி ஆட்சியல்ல. அந்த நிலையை மக்கள் ஏற்படுத்த மாட்டார்கள்.

தமிழ்நாட்டிற்கு எந்த மாநிலங்களிலும் இல்லாத திட்டங்களை கொண்டு வந்தது ஸ்டாலின் அரசு நீடிப்பதற்கான தீர்ப்பை தமிழக மக்கள் வழங்குவார்கள். எங்கு திரும்பினாலும் உதயசூரியன் என்ற குரல் தான் கேட்கிறது. மீண்டும் ஸ்டாலின் தான் முதல்வராக பொறுப்பேற்பார் என கூறினார்.

Summary

It will be Stalin's rule that is established in Tamil Nadu; there is absolutely no room for any talk of a coalition government this was what Vaiko stated.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.