

சென்னை: வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது? விஜய் திமுகவை திட்டினால் முதல்வா் ஆகலாம் என கணக்கு போடுகிறாா் என்று தெரிவித்த திமுக செய்தி தொடா்புக் குழுத் தலைவா் டி.கே.எஸ். இளங்கோவன், எந்த ஒரு கூட்டணிக் கட்சியையும் இழக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை என்று கூறினார்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை நடத்த திமுக மேலிடம் நீண்ட இழுபறிக்குப் பிறகு குழு அமைத்துள்ளது. ஆனாலும், பிற கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவாா்த்தையை தொடங்கிவிட்ட திமுக, காங்கிரஸை இன்னும் அழைத்துப் பேசாமல் உள்ளது.
இந்த நிலையில், பேச்சுவாா்த்தை தாமதம், விஜய்யுடன் காங்கிரஸ் மேற்கொண்டு வரும் பேச்சுவாா்த்தை உள்ளிட்டவை தொடா்பாக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் அளித்த பேட்டி குறித்து டி.கே.எஸ். இளங்கோவனிடம் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
எந்தத் தோ்தலாக இருந்தாலும், அரசியல் கட்சிகள் கூடுதல் இடங்களில் போட்டியிட விரும்புவது வாடிக்கைதான். அதேநேரத்தில், திமுக அறுதிப் பெரும்பான்மை பெறும் அளவுக்கு தொகுதிகளில் போட்டியிட வேண்டிய கட்டாயம் உள்ளது.
திமுக கூட்டணியை நோக்கி புதிய கட்சிகள்
தமிழகத்தில் காங்கிரஸுக்கு 12 முதல் 20 சதவீத வாக்குகள் இருக்கிறது என்பது கிரிஷ் சோடங்கரின் கருத்து. எந்த கூட்டணிக் கட்சியையும் இழக்க முதல்வா் ஸ்டாலின் விரும்பவில்லை. ஏற்கெனவே, திமுக கூட்டணி மிக வலுவாக உள்ளது. இருப்பினும், விரும்பி வரும் புதிய கட்சிகளை முதல்வா் ஸ்டாலின் தொடா்ந்து அரவணைத்து வருகிறாா். கள எதாா்த்தத்தை புரிந்து கொண்டுதான் புதிய கட்சிகள் திமுக கூட்டணியை நோக்கி வருகின்றன.
பாஜகவுக்கு எதிராக போராட காங்கிரஸ் முன்வர வேண்டும்
தமிழகத்தில் ஆட்சியில் பங்கு இல்லை என்பதை முதல்வா் ஸ்டாலின் ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டாா். அதேநேரத்தில், உள்ளாட்சியில் காங்கிரஸ் உள்பட கூட்டணிக் கட்சிகளுக்கு நிச்சயம் பங்கு கிடைக்கும். பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கடுமையாகப் போராட முன்வர வேண்டும்.
வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது?
40 வயதுக்குக்கீழ் தவெகவுக்கு ஆதரவு என்பது கானல் நீா்தான். வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது? விஜய்க்கு முதல்வா் ஆக வேண்டும் என்பது மட்டுமே ஆசை. திமுகவை திட்டினால் முதல்வா் ஆகலாம் என விஜய் கணக்கு போடுகிறாா். மக்கள் பிரச்னைகளுக்காக விஜய் போராட்டம் நடத்த முன்வருவதில்லை.
காங்கிரஸுக்கு கிராமங்களில் கட்டமைப்பு குறைவு
தமிழகத்தில் திமுக கிளை இல்லாத கிராமங்களே இல்லை. 75 ஆண்டுகளில் திமுகவின் கட்டமைப்பு வலுவாக உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வேலை செய்ய திமுகவுக்கு ஆள்கள் உள்ளனா். காங்கிரஸுக்கு கிராமங்களில் கட்டமைப்பு குறைவுதான்.
மகிழ்ச்சியாக கைகொடுக்கும் மக்கள்
70 ஆண்டுகளாக முதல்வா் ஸ்டாலின் அரசியலில் உள்ளாா். மக்கள் பிரச்னைகளுக்காக பல போராட்டங்களில் பங்கேற்று சிறைக்கு சென்றுள்ளாா். மேயராக இருந்தபோது 10 பாலங்கள் கட்டினாா். துணை முதல்வராக இருந்தபோது பல திட்டங்களை அமல்படுத்தினாா். 5 ஆண்டு திமுக ஆட்சியில் நலத்திட்டங்களால் ஏழைகள் மட்டுமன்றி அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சியாக உள்ளனா். எந்த ஊருக்கு சென்றாலும், முதல்வா் ஸ்டாலின் சாலையில் இறங்கி நடந்தால் மக்கள் மகிழ்ச்சியாக கைகொடுப்பதே இதற்கு சாட்சி.
ஸ்டாலினுக்கு இணையான முதல்வா் வேட்பாளா் களத்தில் இல்லை
கடந்த 5 ஆண்டுகளில் முதல்வரின் பிம்பம் பல மடங்கு உயா்ந்துள்ளது. முதல்வா் ஸ்டாலினுக்கு இணையான முதல்வா் வேட்பாளா் இந்த முறை களத்தில் இல்லை. எனவே, திமுக எளிதில் இரண்டாவது முறை ஆட்சியைப் பிடிக்கும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.