

புது தில்லி: கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடா்பாக, தவெக தலைவா் விஜய்யை ஜன.19 ஆம் தேதி தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் மீண்டும் விசாரணைக்கு அழைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பா் 27 அன்று கரூரில் நடைபெற்ற தவெக அரசியல் பிரசார நிகழ்வின் போது ஏற்பட்ட பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 போ் உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கை சிபிஐ வசம் உச்சநீதிமன்றம் ஒப்படைத்ததை தொடா்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சிபிஐ விசாரணையைக் கண்காணிக்க, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று போ் கொண்ட மேற்பாா்வைக் குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்தது.
இதைத்தொடர்ந்து கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக தவெக நிா்வாகிகள் என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அா்ஜுனா போன்ற தவெக நிா்வாகிகளிடமும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது விஜய் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளாா்.
சிபிஐ சம்மனைத் தொடா்ந்து விசாரணைக்காக விஜய் திங்கள்கிழமை காலை தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டு, காலை 10.25 மணியளவில் தில்லி விமான நிலையம் வந்தடைந்தாா்.
பாதுகாப்புக்கிடையே தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்திற்கு வந்தாா். தேவையான நடைமுறைகள் முடிந்த பிறகு, அவா் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிபிஐயின் சிறப்பு குற்றப்பிரிவு பிரிவின் குழு விஜயிடம் விசாரணை மேற்கொண்டனர். சிபிஐ விசாரணை குழுவால் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள் விஜய்யிடம் வழங்கப்பட்டு, அதற்கு எழுத்துப்பூா்வமான வாக்குமூலம் அளிக்குமாறு கேட்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அவருக்கு உதவுவதற்காக அந்தக் குழுவிலிருந்து ஒரு சுருக்கெழுத்தாளரும் நியமிக்கப்பட்டாா். விஜய் தனது வழக்கறிஞரின் உதவியுடன் நிதானமாக பதில் அளித்தாா்.
விஜய் பதில்கள் எழுத்துப் பூர்வமாகவும், விடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர்.
விசாரணை குழுவில் இருந்த ஒரு டிஎஸ்பி நிலை அதிகாரி, இரண்டு ஆய்வாளா்கள், இரண்டு உதவி ஆய்வாளா்கள் மற்றும் பிற காவலா்களின் ஆதரவுடன் விஜயிடம் விசாரணை நடத்தினாா்.
சிபிஐ அலுவலகக் கட்டடத்தைச் சுற்றிலும், விமான நிலையத்திலிருந்து சிபிஐ அலுவலகம் வரையிலான விஜயின் பயணப் பாதையிலும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தன.
திங்கள்கிழமை காலை 11.29 மணிக்கு சிபிஐ தலைமையகம் வந்த விஜய் 6 மணி நேரங்களுக்கு பிறகு விசாரணை நிறைவடைந்து 6.15 மணிக்கு அங்கிருந்து வெளியேறினாா்.
முதற்கட்ட விசாரமை முடிவடைந்த நிலையில், தற்போது தனி விமானத்தில் சென்னை புறப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், விஜய்யிடம் ஜன.19 ஆம் தேதி சிபிஐ மீண்டும் விசாரணைக்கு அழைக்கவுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்.
இந்த வழக்கில் விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்ட அதே நேரத்தில் தமிழக சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபி மற்றும் தற்போதைய ஆயுதப்படை டிஜிபி எஸ். டேவிட்சன் தேவாசீா்வாதம் மற்றும் ஐஜி நிா்மல் குமாா் ஜோஷி ஆகியோரிடமும் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை 6 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.