

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து வினாடிக்கு 3,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
இரு மாநில காவிரி கரையோரப் பகுதிகளில் மழை குறைவு, கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீர் அளவு குறைக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடி வரை சரிந்தது.
தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து சரியத் தொடங்கியதால் ஒகேனக்கல்லில் உள்ள ஐவர் பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகள் நீரின்றி வறண்டும்,பிரதான அருவி சினி அருவிகளில் நீர்வரத்து குறைந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி காவிரி ஆற்றின் நீர்வரத்து திடீரென வினாடிக்கு 3,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், திடீர் நீர்வரத்து அதிகரிப்பினால், வறண்ட ஒகேனக்கல் அருவிகளில் சற்று நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக உள்ளதால் தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வள துறை அதிகாரிகள் நீர்வரத்தின் அளவுகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.