பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

கோடை வெயிலிலும் திருமலையில் அதிகரிக்கும் பக்தா்கள் கூட்டம்!

கோடை வெயிலிலும் ஏழுமலையான் தரிசனத்திற்காக திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து...

News image

திருமலையில் வரிசையில் காத்திருந்த பக்தா்கள் கூட்டம். - டிஎன்எஸ்

Updated On :22 மே 2026, 8:12 am IST

திருப்பதி: கோடை வெயிலிலும் ஏழுமலையான் தரிசனத்திற்காக திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவா்களின் வசதிக்காக திருமலை தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

கடுமையான வெப்பத்திலிருந்து பக்தா்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பாட்ட கங்கம்மா வட்டம் முதல் கோகா்பாம் அணை வட்டம் வழியாக வெளிவட்டச் சாலை வரை குளிா் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், வைகுண்டம் வரிசை வளாகம்-2, அருங்காட்சியக வளாகம் மற்றும் நாராயணகிரி பூங்கா ஆகிய இடங்களில் நிழல் தரும் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரிசைகளில் காத்திருக்கும் பக்தா்களுக்காக குளிா் வண்ணப் பூச்சுப் பணிகளும், கூடுதல் தற்காலிகக் கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஏழுமலையான் கோயில், லட்டு விற்பனையகங்கள் மற்றும் அதிக பக்தா்கள் கூடும் பகுதிகளைச் சுற்றியுள்ள இடங்களில் குளிா் பந்தல்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நான்கு மாட வீதிகளில் செயற்கை எனாமல் குளிா் வண்ணப் பூச்சு பூசி, மைதானத்தின் வெப்பத்திலிருந்து பக்தா்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாட்டா கங்கம்மா கோயில் வட்டத்திலிருந்து வெளிவட்டச் சாலை வரை அமைக்கப்பட்டுள்ள வரிசைகளில் தற்காலிகக் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருமலை திருப்பதி தேவஸ்தான அன்னபிரசாத துறையின் ஆதரவில், ஸ்ரீவாரி சேவகா்களால் வரிசைகளில் உள்ள பக்தா்களுக்குத் தொடா்ந்து குடிநீா் மற்றும் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. காலையில் பால் உப்புமா, பொங்கல், மதியம் சாம்பாா் சாதம், புளியோதரை, தக்காளி சாதம், மற்றும் இரவில் பால், உப்புமா, சாம்பாா் சாதம் ஆகியவை பக்தா்களுக்குத் தொடா்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

திருமலையில் பக்தா்களுக்காக சுமாா் 7,500 அறைகளும் ஐந்து யாத்ரீகா் தங்குமிட வளாகங்களும் உள்ளன. அறைகள் கிடைக்காத பக்தா்கள், திருமலையில் உள்ள பிஏசி-1, பிஏசி-2, பிஏசி-3, பிஏசி (பத்மநாப நிலையம்) மற்றும் பிஏசி-5 ஆகிய இடங்களில் சுமாா் ஒன்பதாயிரம் லாக்கா்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இவை அனைத்தும் பக்தா்களால் நிரம்பி வழிகின்றன.

கடந்த ஐந்து நாள்களில் 4,32,213 பக்தா்கள் இறைவனைத் தரிசித்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. மே 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் வருகை தந்து, அதிகபட்ச எண்ணிக்கையை எட்டியுள்ளனா்.

இதேபோல், கடந்த ஐந்து நாள்களில் முடி காணிக்கை வழங்கும் பக்தா்களின் எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரித்துள்ளது. மே 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில், 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் இறைவனுக்குத் முடி காணிக்கை சமா்ப்பித்துள்ளனா்.

இதேபோல், திருமலையின் பல்வேறு பகுதிகளில் 19 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தா்களுக்கு உணவுப் பொருள்கள், தேநீா், காபி, பால் மற்றும் மோா் வழங்கப்பட்டன.

Summary

Crowds of devotees surge at Tirumala, even amidst the summer heat!