சென்னை எழும்பூர்-திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் மே 29, 30 தேதிகளில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா 10 நாள் வசந்தத் திருவிழாவாக கடந்த மே 21 ஆம் தேதி தொடங்கியது. 5 ஆம் நாளான திங்கள்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. பகலில் உச்சிகால தீபாராதனைக்கு பிறகு சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் கோயில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.
மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைக்குப் பின்னா், சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து, தங்க ரதத்தில் கிரி வீதி உலா வந்தார். மே 29 ஆம் தேதிவரை இதே நிகழ்ச்சிகள் நடைபெறும்.
10 ஆம் நாளான 30 ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.
பின்னா், சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபம் சோ்கிறார். கோயிலில் சாயரட்சை தீபாராதனைக்குப் பிறகு வசந்த மண்டபத்தில் தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து, மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வருதலும், முக்கிய நிகழ்வான முனி குமாரா்களுக்கு சாப விமோசனம் அளித்தலும் நடைபெறும்.
வைகாசி விசாகத்தையொட்டி, பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
சிறப்பு ரயில்
இந்த நிலையில், சென்னை எழும்பூர்-திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் மே 29, 30 தேதிகளில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:
திருச்செந்தூர் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி, சென்னை எழும்பூர்- திருச்செந்தூர் அதிவிரைவு சிறப்பு ரயில் (ரயில் எண் 06155), வெள்ளிக்கிழமை (மே 29) பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3 மணிக்கு திருச்செந்தூர் சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், திருச்செந்தூர்–சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில்(ரயில் எண் 06155), சனிக்கிழமை(மே 30) ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயில் திருச்செந்தூரைச் சென்றடைவதற்கு முன்னதாக, தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்," என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்பு ரயிலில் இரண்டு குளிர்சாதன இரு அடுக்கு பெட்டிகள், 12 படுக்கை வசதி பெட்டிகள், இரண்டு பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் மாற்றுத்திறனாளி பயணிகளுக்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இரண்டு இரண்டாம் வகுப்பு பெட்டிகள் ஆகியவை இடம்பெறும்.
இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு, வியாழக்கிழமை காலை 8 மணி தொடங்கியது.
Summary
Regarding the operation of a special train between Chennai Egmore and Tiruchendur on May 29 and 30...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 30 - நெல்லை - திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

குமரி பகவதியம்மன் கோயிலில் மே 21இல் வைகாசி விசாகத் திருவிழா தொடக்கம்: இன்று கால்கோள் விழா








