மாற்றுத்திறனாளி மாணவிக்காக ரூ 14 லட்சம் செலவில் லிஃப்ட் வசதி அமைத்துத் தந்த பள்ளி!

சிபிஎஸ்இ பள்ளிக் கொள்கைகளில் ஒன்று மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்காக லிஃப்ட் அல்லது ராம்ப் வசதி செய்து தரப்பட வேண்டும் என்பது.
மாற்றுத்திறனாளி மாணவிக்காக ரூ 14 லட்சம் செலவில் லிஃப்ட் வசதி அமைத்துத் தந்த பள்ளி!

வாசு பன்சால் மொஹாலியில் ஒரு தனியார் சிபிஎஸ்இ பள்ளியின் 8 ஆம் வகுப்பு மாணவி. 

வாசுவுக்கு இளமையில் போலியோ தாக்கியதில் கால்கள் செயலிழந்து விட்டன. எனவே பள்ளி செல்லத் தொடங்கிய ஆரம்ப நாட்கள் முதலே அவருக்கு சக்கர நாற்காலியும் உடலோடு இணைந்த பிற உறுப்புகளில் ஒன்றென ஆனது. தொடக்கப்பள்ளி வகுப்புகளில் பயிலும் வரை வாசுவுக்கு தனது சக்கர நாற்காலிப் பயணம் ஒரு பெரும் சுமையாகத் தோன்றியதில்லை. அப்படியே கழிப்பிடங்களுக்கோ அல்லது சக்கர் நாற்காலியற்று நடந்து கடக்க வேண்டிய வேறு சில இடங்களுக்கோ செல்வதாக இருந்தாலும் கூட அம்மாவோ அல்லது பள்ளியின் பெண் துப்புரவுப் பணியாளர்களில் ஒருவரோ வாசுவை தூக்கிச் சென்று உதவியதால் அப்போதெல்லாம் ஓரிடத்திலிருந்து பிறிதொரு இடத்துக்குச் செல்வது என்பது வாசுவுக்கு கடினமான காரியமாகத் தோன்றவில்லை. 

ஆனால் 8 ஆம் வகுப்பு வந்ததும் வாசுவுக்கு உடல் ரீதியான தர்ம சங்கடங்கள் ஆரம்பமாயின. முதலாவதாக சிறுமி வளர வளர அவரது உடல் எடை அதிகரித்தது. அதனால் அம்மாவாலோ, பணியாளர்களாலோ அவரை தூக்கிச் சென்று விடுவது சற்றுக் கடினமான காரியமாக மாறியது. அது மட்டுமல்ல வாசு படித்த பள்ளியில் சோதனைச் சாலைகள் அனைத்துமே மேல்மாடிகளில் இருந்தன. அறிவியல் சோதனை வகுப்புகளின் போது மட்டுமல்ல மொத்தப் பள்ளியும் சேர்ந்து ஈடுபடும் சில இண்டோர் விழாக்களும் கூட மேல்மடியின் விஸ்தாரமார கூடத்தில் நடத்தப் பட்டதால் வாசுவை அங்கே அழைத்துச் செல்வது என்பது கடினமான காரியமாக இருந்தது. இந்தக் காரணங்களை எல்லாம் முன்னிட்டு பள்ளி நிர்வாகம் இதற்கென்ன தீர்வு என ஆலோசிக்கத் தொடங்கியது.

சிபிஎஸ்இ பள்ளிக் கொள்கைகளில் ஒன்று மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்காக லிஃப்ட் அல்லது ராம்ப் வசதி செய்து தரப்பட வேண்டும் என்பது. வாசுவின் பள்ளியில் ராம்ப் வசதி செய்து தர இடப்பற்றாக்குறை இருந்த காரணத்தால் அப்பள்ளி நிர்வாகத்தார் ரூ 14 லட்சம் ஒதுக்கி வாசு மாதிரியான மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு உதவும் நோக்கில் தற்போது லிஃப்ட் வசதி செய்து கொடுத்துள்ளனர். இது வாசுவுக்காக மட்டும் அல்ல. சிபிஎஸ்இ பள்ளி விதிமுறைகளில் இதுவும் ஒன்றாக இருப்பதால் வாசு அதற்கு முன்னதி ஏர் ஆகி இருக்கிறார். வாசு மூலமாக உண்டான லிஃப்ட் வசதி பிற்காலத்தில் அப்பள்ளியில் பயிலும் பிற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கும் மிகப் பயனுடையதாக விளங்கலாம்.

மாற்றுத் திறனாளி மாணவியின் தர்ம சங்கடங்களை உணர்ந்து பள்ளி நிர்வாகம் லிஃப்ட் அமைத்துக் கொடுத்தது பள்ளி விதிகளில் ஒன்று என்றாலும் காலத்தில் அந்த உதவியை நடைமுறைப்படுத்தியமைக்காக அந்தப் பள்ளியைப் பாராட்டினால் தவறில்லை!

Image courtesy: Hindusthan times.

Article concept: Uc news.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com