கோயம்பேட்டில் காய்கறிகள்-பூக்கள் விலை கடும் வீழ்ச்சி: பருவ மழை எதிரொலி

பருவ மழை காரணமாக உற்பத்தி அதிகரித்துள்ளதால் சென்னையில் காய்கறிகள் மற்றும் பூக்களின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைந்து உள்ளது.
கோயம்பேட்டில் காய்கறிகள்-பூக்கள் விலை கடும் வீழ்ச்சி: பருவ மழை எதிரொலி

பருவ மழை காரணமாக உற்பத்தி அதிகரித்துள்ளதால் சென்னையில் காய்கறிகள் மற்றும் பூக்களின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைந்து உள்ளது.
 

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் 1,889 காய்கறிக் கடைகள், 470 பூக்கடைகள்உள்ளன. இதில், காய்கறி சந்தைக்கு தமிழகத்தின் மதுரை, ஒட்டன்சத்திரம், கோவை, நீலகிரி ஆகிய பகுதிகளில் இருந்தும், கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், மகாராஷ்டிரம், வடமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன.
 

இதே போன்று பூக்கடைகளுக்கு சென்னை மாநகர் மட்டுமன்றி புறநகர் பகுதிகளில் இருந்து நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.
 

திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மதுரை, திண்டுக்கல், செங்கல்பட்டு, சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களில் இருந்தும், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மல்லிகை, முல்லை பூக்கள், கனகாம்பரம் உள்ளிட்ட பூக்கள் சுமார் 50 டன் கொண்டு வரப்படுகின்றன.
 கோடை காலம் என்பதாலும் உற்பத்தி குறைவு காரணமாகவும் கடந்த ஜூலை மாதம் முற்பாதி வரை சென்னையில் காய்கறிகள் விலை அதிகரித்து காணப்பட்டது. தற்போது, தென் மாவட்டங்களில் மழை பெய்து உற்பத்தி அதிகரித்துள்ளதால் காய்கறிகளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
 

இதுகுறித்து கோயம்பேடு காய்கனிச் சந்தை வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், "காய்கறிகளின் வரத்து அதிகமாக இருப்பதாலும், தேவை குறைந்து காணப்படுவதாலும் காய்கறிகளின் விலை 50 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்து உள்ளது.
 

அதன்படி, கடும் வீழ்ச்சி அடைந்த காய்கறிகளின் விலை: பட்டாணி கிலோ ரூ.60-க்கும், பீன்ஸ் ரூ. 35-40 க்கும், கேரட் ரூ. 30-40 க்கும், வெண்டை ரூ. 20 க்கும், சுரைக்காய் ரூ. 8 க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. பெரிய வெங்காயம் ரூ.25 க்கும், இஞ்சி (புதியது) ரூ. 70, பழையவை ரூ.200 க்கும் சற்று அதிகமான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வரும் நாள்களில் காய்கறிகளின் விலை உயர வாய்ப்புள்ளது' என்றார்.
 

காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்): சாம்பார் வெங்காயம் ரூ.40, தக்காளி ரூ.20, அவரை ரூ. 30, கேரட் ரூ.30-40, பீட்ரூட் ரூ.20, நூக்கல் ரூ. 20, முள்ளங்கி ரூ. 10, கத்திரிக்காய் ரூ.20, புடலங்காய் ரூ.15, கோவைக்காய் ரூ.15, சேனைக்கிழங்கு ரூ. 25, உருளைக்கிழங்கு ரூ. 15, காலி பிளவர் ரூ. 20.
 

இதே போல் சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரித்துள்ளதால் பூக்களின் விலை குறைந்துள்ளது.
 

இதன்படி பூக்களின் விலை நிலவரம் (கிலோவில்): சாமந்தி - ரூ. 80 க்கும், ரோஜா - ரூ.60 - 70 க்கும், அரளி - ரூ.100 க்கும், சம்பங்கி - ரூ. 50 க்கும், மல்லி ரூ.150- 200 க்கும், செண்டு ரூ.20 க்கும், பிச்சி - ரூ.200க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
 

விலை அதிகரிக்க வாய்ப்பு:
 

இதுகுறித்து, பூ வியாபாரிகள் கூறியதாவது: தென்மேற்குப் பருவமழை காரணமாக பூக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. விரைவில் விநாயகர் சதுர்த்தி வர உள்ளதால் பூக்களின் விலை உயர வாய்ப்புள்ளது என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com