சமூக ஊடகங்களில் சிறுவர் ஆபாசப் பட பரிவர்த்தனையில் ஈடுபட்டு வந்த 12 பேர் கைது!

இதே போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் பல வாட்ஸ் அப், டெலிகிராம் மற்றும் பேஸ்புக் குழுக்களையும் CCSE உன்னிப்பாக கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
arrested for child pornography
arrested for child pornography

குழந்தைகளை அடிப்படையாகக் கொண்டு ‘சைல்டு போர்னோகிராபி’ என்று சொல்லப்படக்கூடிய ஆபாசப் பட பரிவர்த்தனைகளில் ஈடுபட்டு வந்த 12 பேர் கைது.

கேரளாவில் குழந்தைகளிடையேயான பாலியல் சுரண்டல் தடுப்புப் பிரிவு (Counter Child Sexual Exploitation Unit (CCSE)) போலீஸார் நடத்திய சோதனையொன்றில் குழந்தைகளை வைத்து ஆபாசம் படம் எடுக்கும் 12 நபர்கள் சிக்கினர்.  ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 21 இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் சிக்கிய இந்த 12 பேரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள போலீஸின் CCSE காவல் பிரிவானது இண்டர்போலுடன் இணைந்து செயல்பட்டு காணாமல் போன குழந்தைகள் மற்றும் பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தப்பட்டு அரசு முகாம்களில் அடைக்கலமாகியுள்ள குழந்தைகளை அடிப்படையாகக் கொண்டு சோதனை மேற்கொண்டதில் இந்தக்குற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அக்டோபர் 12 ஆம் தேதி காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனைகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில் முடிவடைந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இணையத்தில் சிறுவர் ஆபாசப் படங்களை வைத்திருப்பவர்கள், தரவிறக்கம் செய்பவர்கள் மற்றும் விநியோகிப்பவர்களை குறிவைத்து இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் மேலும் அந்த அதிகாரி  தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மடிக்கணினிகள், மொபைல் போன்கள், மோடம்கள், ஹார்ட் டிஸ்க்குகள், மெமரி கார்டுகள், கணினிகள் மற்றும் பிற மின்னணு உபகரணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக கேரள போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சோதனையில் சிறுவர் ஆபாச காணொலிகள் மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வரும் சில வாட்ஸ்அப் குழுக்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதே போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் பல வாட்ஸ் அப், டெலிகிராம் மற்றும் பேஸ்புக் குழுக்களையும் CCSE உன்னிப்பாக கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த கண்காணிப்புகள் அனைத்துமே மாநில அளவில் ஒரே நேரத்தில் மாவட்ட காவல்துறை தலைமை அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டன, இதில் நிழல் குழுக்கள் மற்றும் சிறப்பு பயிற்சி பெற்ற சைபர் குழுக்களின் உதவியை மறக்க முடியாது என்றும் அந்த அந்த மூத்த அதிகாரி கூறினார்.

இண்டர்போலின் உதவியுடன் காவல்துறையினர் நடத்திய மூன்றாவது சிறப்புத் தேடல் இதுவாகும், இதற்கு முந்தைய தேடல்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் நடத்தப்பட்டன.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இதுபோன்ற மேலும் பல சமூக ஊடகக் குழுக்களையும் அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர், அவற்றின் மூலமாக சுமார் 126 பேர் சிறுவர் ஆபாசப்படங்களை விநியோகிப்பதில் பெருமளவில் ஈடுபட்டு வருவதாக சந்தேகிக்கப்படுகிறது.

இது போன்ற சோதனைகளை அடிக்கடி மேற்கொண்டு இத்தகைய ஈனச்செயல்களில் ஈடுபடுபவர்களை மேலும் மேலு களையெடுப்பதென கேரள அரசின் குழந்தைகளிடையேயான பாலியல் சுரண்டல் தடுப்புப் பிரிவு (Counter Child Sexual Exploitation Unit (CCSE)) போலீஸார் முடிவெடுத்துள்ளமை வரவேற்கத் தக்கது மட்டுமல்ல பிற மாநில போலீஸாராரும் கட்டாயமாகப் பின்பற்றத் தகுந்த நடவடிக்கைகளில் ஒன்றாகவும் கருதப்பட வேண்டும்.

குழந்தைகளை மையமாகக் கொண்டு வெளிவரும் எந்தவொரு ஆபாச உள்ளடக்கத்தையும் பார்ப்பது, விநியோகிப்பது அல்லது சேமிப்பது என்பது இந்தியாவைப் பொருத்தவரை ஒரு கிரிமினல் குற்றமாகும், இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு  ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ .10 லட்சம் வரை அபராதமும் விதிக்கக்கூடும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com