வைட்டமின்-டி மாத்திரைகளை உண்பதால் மனச்சோர்வு குறைய வாய்ப்பில்லை என ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
நடுத்தர வயது மற்றும் முதியவர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு குறித்தும் அதற்கு வைட்டமின்-டி உதவுமா என்பது குறித்தும் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஜமா என்ற இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில் 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட 18,000 ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர். பங்கேற்பாளர்களில் 50 சதவிகிதம் பேர் வைட்டமின் டி3 (கோலேகால்சிஃபெரால்) சராசரியாக ஐந்து வருடங்களுக்கு மேலாக எடுத்துக்கொண்டனர். மற்றவர்கள் அதற்கு இணையான வேறு உணவுகளை உட்கொண்டனர்.
இதில், மனச்சோர்வைத் தடுக்கவோ, மனநிலையை மேம்படுத்தவோ வைட்டமின் டி ஒருபோதும் உதவவில்லை என்று மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையின் மனநலத் துறையைச் சேர்ந்த ஒலிவியா ஐ ஓகேரேகே தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், 'வைட்டமின் டி, சில நேரங்களில் 'சூரிய ஒளி வைட்டமின்' என்று கூறப்படுகிறது. ஏனெனில் சூரிய ஒளியில் இருக்கும்போது சருமம் இயற்கையாகவே அதை எடுத்துக்கொள்ளும். ஆனால், வைட்டமின் டி (25-ஹைட்ராக்ஸி வைட்டமின் டி) எடுத்துக்கொள்வது ஆபத்தானது என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், இதுகுறித்த காரணம் எதுவும் ஆய்வுகளில் தெளிவாக விளக்கப்படவில்லை.
எனவே, மனச்சோர்வைக் குறைக்க ஒரு சிகிச்சை உதவுகிறதா? இல்லையா? என்பது குறித்து ஒரு ஆய்வு தேவைப்பட்டது. அதன்படி, முன்னதாக அமெரிக்காவில் இருதய நோய் மற்றும் புற்றுநோய் தடுப்பு பற்றிய ஆய்வில் பங்கேற்ற 26,000 பேரில் இருந்து 18,353 பேர் தேர்வு செய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதில் வைட்டமின் டி-யை எடுத்துக் கொண்டவர்களுக்கும், வேறு மருந்து எடுத்தவர்களுக்கும் இடையே உள்ள மன அழுத்தம் / மனச் சோர்வு பெரிதாக மாறுபடவில்லை என்று ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.
ஆனால், மனநிலையை மேம்படுத்த, மனச்சோர்வை நீக்க பலர் வைட்டமின் டி மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், மனச்சோர்வுக்காக அன்றி, எலும்பு மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி இன்றியமையாதது என்றும் ஆய்வாளர் கூறினார்.