இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக விடுவிக்கவும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருப்பது குறித்து...

News image
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்- கோப்புப்படம்
Updated On :13 மார்ச் 2026, 5:49 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கவும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு (கட்டம்-3) ஒப்புதலையும், நிதியுதவியையும் வழங்கிட வேண்டுமென்றும் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான குடிநீர் வழங்குவதில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் உள்ளது எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ள முதல்வர், கிராமப் பகுதிகளிலுள்ள 1.25 கோடி வீடுகளில், 1.12 கோடி வீடுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும் குழாய்கள் மூலம் இணைப்புகளை வழங்கி, ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழ்நாடு பெருத்த முன்னேற்றத்தைச் சாதித்துள்ளதாகவும், இதற்கிடையில் இந்த இயக்கத்தினை மேலும் விரிவாக்க ஒன்றிய அரசு எடுத்துள்ள முடிவினை தாம் வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜல் ஜீவன் மிஷன் இயக்கத்தின் முதல் கட்டத்தில், தமிழ்நாடு 45 புதிய பல கிராமங்களை உள்ளடக்கிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களையும், 56 பழைய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களையும் மற்றும் 21,258 ஒற்றை கிராமத் திட்டங்களையும் மொத்தமாக ரூ.18,123 கோடி செலவில் எடுத்துள்ளதாகவும், அவற்றில் அனைத்து ஒற்றை கிராம குடிநீர்த் திட்டங்கள், பல கிராமங்களை அடக்கிய 101 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மற்றும் பழைய குடிநீர்த் திட்டங்களில் புனரமைப்புத் திட்டங்களாக 92 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் மகிழ்ச்சியோடு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மீதமுள்ள 9 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் நடைமுறையில் முன்னேற்றத்தில் உள்ளன என்று தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், ஆனால், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் பங்கு என ரூ. 5,914 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், ரூ. 3,112 கோடி நிலுவையில் உள்ளதாகவும், 2024–25 ஆண்டுக்காக தமிழ்நாட்டிற்கு ரூ. 2,434 கோடி ஒதுக்கப்பட்ட போதிலும், ரூ.732 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 2024 செப்டம்பர் முதல் எந்த நிதியையும் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு பெறவில்லை என்றும் தனது கடிதத்தில் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர்த் திட்டங்களில் பணிகளின் முன்னேற்றத்தை நிலைநாட்டுவதற்கும், உரிய காலத்தில் இந்தத் திட்டத்தினை நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்கும் தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து ரூ.2,550 கோடியை விடுவித்துள்ளதாகத் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், நடைமுறையில் உள்ள ஜல் ஜீவன் மிஷன் திட்டங்களின் நிறைவேற்றத்தை உறுதி செய்திட ஏதுவாக நிலுவைத் தொகையான ரூ. 3,112 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க, தாமதமின்றி பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், ஜப்பான் பன்னாட்டு நிதியுதவியுடன் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்ட ஒகேனக்கல் (கட்டம்-3) கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடர்பாக மாண்புமிகு இந்தியப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ள முதல்வர் ஸ்டாலின், இந்தத் திட்டம் ரூ.8,428 கோடி செலவில் செயல்படுத்திட ஜல் சக்தி அமைச்சகத்தின் மாநிலத் திட்ட அனுமதி குழுவில் 15.6.2023 இல் அனுமதிக்கப்பட்டதாகவும், அதில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் பங்காக ரூ.2,283 கோடி அனுமதிக்கப்பட்டது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மத்திய அரசால் வழங்கப்பட்ட உறுதியின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு இத்திட்டத்தில் முன்னெடுப்புப் பணிகளை தொடங்கியதாகவும், ஆனால் மத்திய குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்புத் துறை, இத்திட்டத்தினை நீட்டிக்க அனுமதி பெறும் வரை, மத்திய அரசின் உதவியை தற்போது வழங்க இயலாது எனக் குறிப்பிட்டுள்ளதாகவும், இந்த முக்கியமான திட்டத்திற்கு இந்தக் கட்டத்தில் மத்திய அரசு தனது ஆதரவிலிருந்து பின்வாங்குவது என்பது, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் மக்களுக்குப் போதுமான குடிநீர் வழங்குவதை பாதிக்கும் என வருத்தத்துடன் முதல்வர் தனது கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் சமீபத்திய ஜல் ஜீவன் திட்டத்தினை விரிவாக்கம் செய்யும் முடிவினைக் கருத்தில் கொண்டு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு (கட்டம்-3) ஒப்புதலையும், நிதியுதவியையும் வழங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ள முதல்வர், அப்போதுதான் தமிழ்நாடு அரசு ஜப்பான் பன்னாட்டு முகமையுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தினை தொடர இயலும் என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். அதோடு, கூடுதலாக 10 புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை சுமார் ரூ.7,590 கோடி செலவில் செயல்படுத்திட திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள முதல்வர், இதில் திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, கரூர், திருவள்ளூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தென்காசி, தூத்துக்குடி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் உள்ளடக்கியுள்ளதாகவும், இந்தப் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கு ஜல் ஜீவன் 2.0 திட்டத்திற்கு நிதி ஒப்பளிப்பு செய்திட வேண்டுமென்று கோரியுள்ளார்.

தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட ஏதுவாக, மத்திய அரசு தனது ஆதரவை தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆதரவினையும், விரைவான தலையீட்டினையும் எதிர்பார்ப்பதாக தனது கடிதத்தில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Letter of the Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru. M.K.Stalin to Hon’ble Prime Minister of India Thiru Narendra Modi regarding Jal Jeevan Mission

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.