கடந்த ஆண்டு உலக மக்களுக்கு அறிமுகமானவை முகக்கவசங்கள். உலக மக்கள் இதுவரை கண்டிராத ஒரு பேரிடர் காலம். உலகுக்கு புதிதாக அறிமுகமான கரோனா எனும் வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசங்கள் அறிமுகமாகின.
தடுப்பூசிக்கு முன்னதாக நோய்த்தொற்றில் இருந்து காக்கும் பெரும் ஆயுதமாக முகக்கவசங்களே இருந்தன, இருந்தும் வருகின்றன. தொற்று பரவாமல் தடுக்க அரணாக உள்ளன.
கரோனா வைரஸ் தொற்று அறிமுகமான நாளில் இருந்தே முகக்கவசம் அணிவதன் அவசியத்தை சுகாதார அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
மேலும் எந்த முகக்கவசங்களை பயன்படுத்த வேண்டும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
சர்ஜிக்கல் முகக்கவசங்கள், துணியால் ஆன முகக்கவசங்கள் என பலவகையான முகக்கவசங்கள் பயன்பாட்டில் இருந்து வருகன்றன. சமீபத்தில் 'ஒரு முகக்கவசம்' இன்றி 'இரண்டு முகக்கவசங்கள்' அணிவதுதான் பாதுகாப்பானது என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்தது. எந்த முகக்கவசம் எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், துணியால் ஆன முகக்கவசங்கள் தான் மிகவும் பாதுகாப்பானவை என்று அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி (ஏசிஎஸ்) பயோ மெட்டீரியல்ஸ் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஒருவர் தும்மும்போது அந்த நீர்த்திவலைகள் முகக்கவசத்தை விட்டு வெளியே செல்கின்றனவா என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த முடிவுகள் தெரிய வந்துள்ளன.
உலக அளவில் என்95 அறுவை சிகிச்சை முகக்கவசங்கள் பாதுகாப்பானது என்று கூறப்பட்டு வரும் நிலையில், மூன்று அடுக்கு கொண்ட துணி முகக்கவசங்கள் தான் பாதுகாப்பானவை என்று இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரு நபர் பேசுவது மட்டுமின்றி, இருமும்போது அல்லது தும்மும்போது மூக்கு மற்றும் வாய் வழியாக வெளியேற்றப்படும் நீர்திவலைகளைத் தடுப்பதன் மூலம் நோய் பரவலைக் குறைக்க முகக்கவசங்கள் உதவுகின்றன.
இதில், பொதுவாக கிடைக்கக்கூடிய 17 துணிகளைக் கொண்டு எளிய முகமூடிகளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கினர். ஒவ்வொரு முகமூடியிலும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று அடுக்குகள், ஒரே அல்லது வேறுபட்ட துணி வகைகளைக் கொண்டிருந்தன.
இப்போது தும்மும்போது எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கின்றன என ஆய்வு செய்தபோது சுவாரசியமான முடிவுகள் கிடைத்தன.
மூன்று அடுக்கு கொண்ட என்95 முகக்கவசங்களைக் காட்டிலும் மூன்று அடுக்கு கொண்ட துணி முகக்கவசங்கள் பாதுகாப்பவையாக இருந்தன.
இந்த மூன்று அடுக்குகளில் பருத்தியால் ஆன காட்டன் துணி முதல் அடுக்ககவும், பருத்தி / பாலியஸ்டர் கலவை இரண்டாவது அடுக்காகவும், பாலியஸ்டர் அல்லது நைலான் வெளிப்புற மூன்றாவது அடுக்ககவும் இருக்க வேண்டும். இவ்வாறு இருக்கும் முகக்கவசங்கள் பாதுகாப்பானவை. மேலும் இவற்றை சோப் கொண்டு சுத்தப்படுத்தும்போது அதன் பாதுகாப்பு குறைவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் பொதுக் கலந்தாய்வு! மாணவர்கள் கவனிக்க..

மாரிதாஸ் கைது: முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்







