கண்களின் கீழ் இருக்கும் பகுதி மிகவும் சென்சிடிவ் என்பதால் கண்களைக் காட்டிலும் கண்ணின் கீழ் பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
கண்களின் கீழ் வரும் கருவளையம் பெண்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்னை. இது முகத்தின் பொலிவைக் குறைத்து காட்டுகிறது, கண்களை மிகவும் சோர்வாகக் காட்டுகிறது.
பொதுவாக, கருவளையம் ஏற்படக் காரணம் கண்களுக்கு அதிக வேலை கொடுப்பது, தூக்கமின்மை, உணவு பழக்கவழக்கம், வைட்டமின் குறைபாடு, உடல் வறட்சி.
இதுதவிர, இரவு நேரத்தில் இருட்டில் மின்னணு சாதனங்களின் பயன்பாடு, இரவில் தூங்கச் செல்லும்முன் கண்ணில் போடப்பட்டுள்ள மை, மஸ்காரா ஆகியவற்றை நீக்காமல் இருப்பது, கண்கள் அதிகளவில் ஒளியை வாங்குவது உள்ளிட்டவை காரணமாக இருக்கும்.
எனவே, கண்களுக்கு முடிந்தவரை ஓய்வளியுங்கள். எண்ணெய் கொண்டு கண்களுக்கு அவ்வப்போது லேசாக மசாஜ் கொடுங்கள். கண்களை அவ்வப்போது கழுவுங்கள்.
கருவளையத்தைப் போக்கும் இயற்கை வழிமுறைகள்
கருவளையத்தைப் போக்குவதில் முதன்மையான தீர்வு பாதாம் எண்ணெய். இரவு தூங்கச் செல்லும் முன்பாக பாதாம் எண்ணெயை கண்களைச் சுற்றி தடவி வர ஓரிரு வாரங்களில் கருவளையம் நீங்கி விடும்.
கற்றாழை ஜெல் கண்களுக்கு குளிர்ச்சி தரக்கூடியது என்பதால் அவற்றைக்கொண்டு மசாஜ் செய்யலாம்.
கண்களை சுற்றி கருவளையம் உள்ள இடத்தில் தோல் நீக்கிய உருளைக்கிழங்கை அரைத்து பூசி வர கரு வளையங்கள் மறைந்துவிடும்.
காபித்தூளுடன் சிறிது தேன் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து கண்களைச் சுற்றி தடவி பின்னர் சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.
வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி கண்களின் மேல் மற்றும் கீழ் பகுதி படும்படி வைக்கலாம். நாள் ஒன்றுக்கு இருமுறை இவ்வாறு செய்துவர விரைவில் கருவளையம் மறைந்துவிடும்.