தகவல் தொழில்நுட்பம், கல்வி வாய்ப்புகள், பணி வாய்ப்புகள் என அனைத்தும் வளர்ந்து பெண்களுக்கு முன்னேற்றப் பாதைகளை வகுத்துக் கொடுத்தாலும், பாதுகாப்பு என்ற இடத்தில் சில சறுக்கல்கள் ஏற்படத்தான் செய்கிறது.
பிறந்த குழந்தை, பள்ளிச் சிறுமி, வயதான பாட்டி என யாராக இருந்தாலும், பெண்களுக்கு ஏதோ ஒரு வடிவில் ஒரு அச்சுறுத்தல் வந்து கொண்டுதானிருக்கிறது.
அண்மையில் கூட, பேருந்தில் பயணிக்கும் பெண்களை முறைத்துப் பார்க்கும் ஆண்களை இறக்கிவிடலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இவ்வளவு வளர்ந்து நாகரீகம் அடைந்து வாழ்ந்து வரும் சமூகத்தில் இப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கும் நிலையில்தான் இருக்கிறோம். பேருந்தில் என்றால் சரி.. பேருந்து நிலையத்தில் நிற்கும் பெண்களின் நிலை? இப்படி அனைத்துக்கும் உத்தரவுகள் போட்டுக் கொண்டிருக்க முடியுமா?
பல்வேறு கலைகளைப் பயிலும் பெண்கள் இனி நிச்சயம் தற்காப்புக் கலையையும் பயில வேண்டும். பள்ளிகளில் இதனைக் கட்டாயமாக்கலாம்.
பெண்களின் பாதுகாப்பை பல நேரங்களில் அவர்களே உறுதி செய்து கொள்ளும் சூழல் ஏற்படலாம். அதுபோன்ற வேளைகளில் நம்மை நாம் எப்படி காத்துக் கொள்வது என்று டாக்டர். ஆர். ஸ்டாலின் என்ற ஐபிஎஸ் அதிகாரி, ஒரு விடியோவை பகிர்ந்துள்ளார்.
அதில், பெண்கள், மனிதர்களின் மிக முக்கியமான உடல் அழுத்தப் பாகங்கள் குறித்து அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அச்சுறுத்தல் வரும் போது அதனைப் பயன்படுத்தி தங்களை தற்காத்துக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.