தேநீர்/டீ யாருக்குத் தான் பிடிக்காது. எந்தவொரு சூழ்நிலையிலும் ஆசுவாசப்படுத்திக்கொள்ள உதவும் ஒரு பானம். நாள் ஒன்றுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட டீ அருந்துவோர் அதிகம். தேநீர் அருந்துவதால் உடல்நலத்திற்கு பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்த ஆய்வுகளும் தொடர்ந்து வருகின்றன.
ஆனால், பால் கலக்காத டீ தான் உடல்நலத்திற்கு நல்லது என்று பெரும்பாலான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிளாக் டீ, க்ரீன் டீ ஆகியவற்றை பரிந்துரைக்கின்றனர்.
அதுபோல வெள்ளைச் சர்க்கரை சேர்க்காமல் தயாராகும் டீயும் உடலுக்கு மிகவும் நல்லது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
இந்நிலையில் வெறுமனே டீ இல்லாமல் அத்துடன் சில பொருள்களை சேர்க்கும்போது அது மிகவும் ஆரோக்கியம் நிறைந்ததாக மாறுகிறது.
அப்படியில் தேநீரில் என்னென்ன பொருள்கள் சேர்க்கலாம்... பார்க்கலாம்...
இதையும் படிக்க | ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுபவரா? செலவைக் குறைப்பது எப்படி?
இஞ்சி
பால் கலந்த/கலக்காத தேநீர் ஆனாலும் அதில் சிறிது இஞ்சி சேர்க்கலாம். இஞ்சி செரிமானத்தில் முதன்மையாகப் பயன்படக்கூடிய ஒரு பொருள். மேலும் உடல் உறுப்புகளில் உள்ள வாயுவை வெளியேற்றுகிறது.
புதினா
நறுமணம் மிக்க புதினாவை தேநீரில் தினமும் சேர்க்கலாம். புதினா இலையை லேசாகக் கசக்கி டீயில் போட்டு குடித்தால் நறுமணத்துடன் உடலுக்கும் நல்லது.
ஏலக்காய்
நறுமணத்திற்கு பயன்படுத்தும் ஒரு பொருள். லேசாக நசுக்கி தேநீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை தேநீர் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கும். இதுவும் உடல் எடை குறைப்புக்கு உதவும். நறுமணமாகவும் இருக்கும்.
துளசி
நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், மன அழுத்தத்தைக் குறைத்தல், சளி, இருமலுக்கு துளசி அதிகம் பயன்படும். தேநீரில் 4-5 துளசி இலைகளை போட்டு கொதிக்க வைத்து குடியுங்கள்.
இதையும் படிக்க | டயட் இருப்பவர்களுக்கு... விழா நாள்களில் செய்ய வேண்டியது என்ன?