நவீனத்தின் ஒரு விளைவாக இன்று மக்கள் மத்தியில் பரந்து விரிந்து கிடக்கும் ஒரு பிரச்னை உடல் பருமன்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உடல் பருமனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
நவீனத்தின் வளர்ச்சியால் உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றம், உடல் உழைப்பு குறைவு, பரம்பரை பிரச்னைகள் என உடல் பருமன் ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன.
உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சிக் கூடங்களுக்கும் அதிகபட்சமாக மருத்துவ சிகிச்சை முறைகள் வரை பலரும் முயற்சிக்கின்றனர்.
உடற்பயிற்சி செய்தும் உடல் எடை குறையவில்லை என்று வருத்தப்படுவோரும் அதிகம். ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவதால் உடல் எடை குறைவதில்லை. மாறாக, உணவு, உடற்பயிற்சி, தூக்கம் என அனைத்திலும் சரிசமமாக கவனம் செலுத்த வேண்டும்.
காலையில் சில பழக்கவழக்கங்களை மாற்றுவதன் மூலமாக உடல் எடையை எளிதில் குறைக்க முடியும்.
உணவு
உடல் எடையைக் குறைக்க முதல் ஆயுதம் டயட் தான். இரண்டாவதுதான் உடற்பயிற்சி. எனவே, உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் உணவில் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். கார்போஹைட்ரேட் உணவுகளைத் தவிர்த்து அளவாக புரோட்டீன் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உணவின் அளவை 5 வேளையாக பிரித்து உண்ணலாம்.
தூக்கம், சீக்கிரம் எழுதல்
காலையில் சீக்கிரம் எழுவதை வழக்கமாகக்கொள்ள வேண்டும். அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்யும்போது அந்த சுற்றுச்சூழல் உடலுக்கும் மனதுக்கும் இதம் தரும். அடுத்ததாக 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். அனைத்தும் செய்து சரியாக தூங்கவில்லை எனில் உடல் எடைக் குறைப்பில் பெரிய மாற்றத்தைக் காண முடியாது.
யோகா
உடல் பருமன் ஏற்பட சில ஹார்மோன் பிரச்னைகளும் காரணமாகின்றன. காலையில் எழுந்து உங்களுக்குத் தெரிந்த யோகா செய்வது உடலையும் மனதையும் புத்துணர்வுடன் வைக்கும். மன அழுத்தம், மனச்சோர்வு, பயம் உள்ளிட்டவற்றை நீக்கும்.
தண்ணீர் குடித்தல்
காலை எழுந்ததும் ஒரு தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கிறது. செரிமானத்தை சீர்செய்கிறது. வெதுவெதுப்பான நீர், நரம்பு மண்டலத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
உடற்பயிற்சி
உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைக்க உடற்பயிற்சி அவசியமான ஒன்று. அதிலும் காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்வது அதிக பயனைத் தரும். உங்கள் தூக்கத்தை சீர்செய்யும். அந்த நாளை புத்துணர்ச்சி ஆக்கும். குறைந்தது அரை மணி நேர நடைப்பயிற்சி போதுமானது. மாலை உடற்பயிற்சி செய்ய நேர்ந்தால் வெறும் வயிற்றில் செய்வதை உறுதி செய்துகொள்ளுங்கள். ஏனெனில் வெறும் வயிற்றில் செய்யும்போதுதான் உடலில் கொழுப்புகள் கரையும்.
இந்தியாவில் மொத்த மக்கள்தொகையில் 13.5 கோடி பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வறிக்கை கூறுகிறது.
இதையும் படிக்க | இரவு உணவைத் தவிர்ப்பது சரியா?