குளிர்காலத்தில் சருமம் வறண்டு போவதைப் போல தலைமுடியும் வறண்டு போகும். குளிர்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைவதால் இந்த பிரச்னை ஏற்படுகிறது.
குளிர்காலத்தில் தண்ணீர் அதிகம் குடிக்காததனால் உடலில் நீர்ச்சத்து குறைவதுபோலவே, தலைமுடியின் வேர்க்கால்களும் வறண்டு முடி உதிர்தலுக்கு காரணமாகிறது.
எனவே முக்கியமாக குளிர்காலத்தில் தலைமுடியை அதிக கவனத்துடன் பராமரிப்பது அவசியமாகும்.
முடி உதிர்தலுக்கு உடல் ரீதியான மன அழுத்தம் முதல் தலைமுடி சரியாக பராமரிப்பின்மை வரை பல காரணங்கள் கூறப்படுகின்றன.
தலைமுடி வறட்சி அல்லது முடி உதிர்தலைக் கட்டுப்படுத்த வீட்டிலிருந்தே செய்யக்கூடிய இயற்கையான சில எளிய முறைகளைக் காணலாம்.
தீர்வுகள்
► முட்டையின் வெள்ளைக்கரு முடி உதிர்தலைக் குறைப்பதற்கு பெரிதும் பயன்படுகிறது. வாரத்திற்கு ஒருமுறை முட்டையின் வெள்ளைக்கரு திரவத்தை முடியின் வேர்க்காலில் படும்படி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசவும்.
► அதுபோல தலைமுடியை பாதுகாப்பதில் வெந்தயத்திற்கு முக்கிய பங்கு உண்டு. வெந்தயத்தை ஊற வைத்து அரைத்த கலவையுடன் சிறிது தயிர் சேர்த்து தலையில் மாசாஜ் செய்து சிறிது நேரம் ஊற வைத்து அலசி விடவும்.
► வாரம் ஒருமுறை நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து தலையில் மசாஜ் செய்து லேசான வெந்நீரில் குளிக்கவும். முடி பளபளப்பாகவும் இருக்கும், உதிர்தலையும் படிப்படியாக கட்டுப்படுத்தும்.
இதையும் படிக்க | தலைமுடி உதிர்கிறதா? இதெல்லாம்தான் காரணங்கள்! தெரிந்துகொள்ளுங்கள்!
► கற்றாழைச் சாறையும் தலையில் தடவி வர முடி உதிர்வது கட்டுப்பட்டு முடி பளபளப்பாக இருக்கும். தலைமுடிக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும்.
► செம்பருத்தி இலையும் முடியின் உறுதித்தன்மையை பாதுகாக்கும்.
► பொடுகினைப் போக்க ஆப்பிள் சீடர் வினிகர் பெரிதும் பயன்படுகிறது. தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து ஸ்கால்ப்பில் படும்படி தெளிக்கவும் அல்லது பஞ்சு கொண்டு ஸ்கால்ப்பில் படும்படி தடவலாம்.
மேலும்....
♦ தலைக்கு குளிப்பதற்கு முன்பு கண்டிப்பாக எண்ணெய் கொண்டு லேசாக மசாஜ் செய்ய வேண்டும். முடி வறட்சியாக இருக்கக்கூடாது. ஏனெனில் வறட்சியுடன் மீண்டும் ஷாம்பூ பயன்படுத்தினால் முடி பாழாகிவிடும்.
♦அடுத்ததாக, ஷாம்பூ பயன்படுத்திய பிறகு கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும் அல்லது ஷாம்பூக்கு பதிலாக அவ்வப்போது சிகைக்காய் பயன்படுத்தலாம்.
♦ ஷாம்பூ போட்டபின்பு தலையை நன்றாக அலச வேண்டும்.
♦ குளிப்பதற்கு வெதுவெதுப்பான நீரையே பயன்படுத்த வேண்டும். மிகவும் சூடான நீர் வேண்டாம்.
♦ குளித்தபின் முடியை டவல் கொண்டு அழுத்தமாக துடைக்கக் கூடாது. அதுபோன்று நன்கு உலர வைக்க வேண்டும்.
♦ ஏற்கெனவே முடி வறட்சியாக உள்ளவர்கள் தலையில் எண்ணெய் பதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
♦ வாரத்திற்கு 2-3 முறை மட்டும் தலைமுடியை அலசுங்கள்.
இதையும் படிக்க | ஏபிசி ஜூஸ் தெரியும்! அதென்ன 'க்ரீன் ஜூஸ்'?