
முன்பெல்லாம் தெருவுக்கு ஒரு அழகு நிலையங்கள் இருந்த காலம் மலையேறி, தற்போது தெருவுக்கு ஒரு நவீன சலூன் கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.
ஏன்.. அழகு பெண்களுக்கானது மட்டுமல்ல என்பதற்காகவா இல்லை, தங்களை சீர்படுத்திக் கொள்ள சலூன்கள் தேவை என்பதை ஆண்கள் தற்போது உணர்ந்திருப்பதாலா என்பதெல்லாம் விவாதிக்கப்பட வேண்டியதில்லை. காலம் மாறிவிட்டது. அவ்வளவுதான்.
பெண்களுக்குப் போட்டியாக தங்களை அழகுப் படுத்திக் கொள்வதில் ஆண்களும் களம் இறங்கிவிட்டார்கள் என்பதே உண்மை. ப்ளீச்சிங், ஃபேஷியல், புதுவிதமான ஹேர்ஹட், ட்ரெஸ்ஸிங் என்று ஆண்கள் தங்கள் தோற்றப் பொலிவை மேம்படுத்திக் கொள்ளவே விரும்புகிறார்கள்.
எங்குச் சென்றாலும் தனித்துவமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக சருமப் பராமரிப்பு மற்றும் தலைமுறை பராமரிப்பில் சிறிது கவனம் செலுத்தினால் தன்னம்பிக்கை அதிகரிப்பதும் இதற்கு ஒரு காரணம்.
அழகு பொருள்கள் விற்பனைக் கடைகளில் ஒரே பெண்கள் கூட்டமாக இருக்கும் நிலை மாறி, ஆண்களும் கணிசமாக வந்து செல்கிறார்கள். பெண்களைப் போல அனைத்தையும் ஆராயாமல், தங்களுக்குத் தேவையானதை சரியாக தேர்வு செய்து வந்து வாங்கிச் செல்வதை அண்மைக் காலங்களில் காண நேர்கிறது.
முன்பெல்லாம் க்ரீம்கள் அதிகம் விற்பனையாகிவந்த நிலையில், தற்போது சீரம்கள் அதிகம் வந்துவிட்டன. அவை பயன்படுத்த மிகவும் வசதியாகவும் உள்ளன.
சில எளிய முறைகளில் ஆண்கள் முகத்தை பொலிவுடன் வைத்திருக்க சில டிப்ஸ்
ஆண்களின் சருமம் கடினமானதாக இருக்கும் அதனை சற்று மென்மையாக்க சந்தனப் பொடியுடன் சிறிது பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசிக் கொள்ளலாம். சுத்தமான தெளிவான சருமமே ஆரோக்கியமான சருமம். முகம் வறட்சியாக இருந்தால் ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சைச்சாறு கலந்து, முகத்தில் தடவி வர சரும வறட்சி நீங்கும்.
வெயிலில் முகம் வாட்டமடையாமல் இருக்க, சருமத்தை உரிய வகையில் பாதுகாக்க வேண்டும். வெயிலில் செல்லும் முன்பு, முகம், கைகள், கழுத்துப் பகுதிகளில் தரமான சன் ஸ்க்ரீன் லோஷன்களை பயன்படுத்த வேண்டும். வெயிலில் செல்லும்போது மறக்காமல் சன் ஸ்கிரீன் அடங்கியஃபேர்னெஸ் க்ரீம் பயன்படுத்துங்கள்.
சூரியக் கதிர் தாக்கத்திலிருந்து கண்களைப் பாதுகாக்க சன் க்ளாஸ் அணிந்து கொள்ளுங்கள்.கண்ணுக்கு கீழ் கருவளையம் இருந்தால் அதற்கு ஸ்பெஷல் பராமரிப்பு அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் பார்லருக்குச் சென்று ஐமசாஜ் எடுத்துக் கொள்ளுங்கள்.
இரவில் நீண்ட நேரம் விழித்திருக்காமல் சீக்கிரம் தூங்கி காலையில் சீக்கிரம் எழுந்திருந்தால் உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் மிகவும் நல்லது. மனம் ஆரோக்கியமாக இருந்தால் அது முகத்தில் பிரதிபலிக்கும். சிலருக்கு முகப்பரு பிரச்னை இருக்கலாம். அதற்கான தீர்வு வீட்டிலேயே உள்ளது. சந்தனம், சாதிக்காய், மிளகு இவை மூன்றையும் சேர்த்தரைத்த விழுதை பருக்களின் மீது தடவிவரவும்.
தினமும் படுக்கச் செல்லும் முன் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். அன்றைய தினத்தின் அலைச்சலால் முகத்தில் சேர்ந்திருக்கும் அழுக்குகள் மாசுக்கள் நீக்க வேண்டும். சருமத்தின் இன்ஃபெக்ஷன் ஏற்படாமல் போதிய கவனத்துடன் இருக்க வேண்டும். சருமத்தில் நீர்ச்சத்து சமமாக இருக்க அடிக்கடி ஜூஸ், இளநீர் குடிக்கலாம். தண்ணீர் போதிய அளவுக்குக் குடிப்பது முக்கியம்.
கை மற்றும் கால்களில் நகங்களை ஒட்ட வெட்டி சீராக வைத்திருக்க வேண்டும். நகங்களில் அழுக்கும் கறையும் படிந்து உடைந்திருந்தால் அது தோல் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். இப்போது நிறமற்ற நெயில் பாலிஷ்கள் வந்துவிட்டன. அதையும் பயன்படுத்தலாம்.
தலைமுடிப் பராமரிப்பு
வெளியில் செல்வது, வியர்வை போன்ற காரணங்களால் தலைமுடி அதிகமாக உதிரக் கூடும். தினமும் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணைய் மற்றும் நல்லெண்ணெய் ஆகிய மூன்றையும் சம அளவில் கலந்து உபயோகப்படுத்தி மறுநாள் தலைக்கு குளித்தால் முடி உதிர்வது குறையும். உடலும் குளிர்ச்சியாக இருக்கும்.
உடைத் தேர்வு இதுதான் முக்கியம்
ஸ்டைலிஷாக ட்ரெஸ் போடுவதைவிட உங்களுக்கு ஏற்ற ஆடைகளைத் தேர்வு செய்து அணிய வேண்டும். ஆண்களுக்கு பெரும்பாலும் சில நிறங்கள் மட்டும் என்று ஒதுக்கி வைத்திருந்த காலம் போல் இப்போதில்லை. அனைத்து நிறங்களிலும் ஆடைகள் வந்துவிட்டன. உங்களுக்கு நல்ல தோற்றத்தைக் கொடுக்கும், ஏற்ற நிறங்கள் பொருத்தமாக இருப்பதை உறுதி செய்துகொண்டு உடையை தேர்ந்தெடுக்கலாம்.
உடையை அடுத்து செருப்பு, ஷு போன்றவற்றையும் சரியாக தேர்வு செய்யுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.