மகப்பேறு உலகில் பல நூற்றுக்கணக்கான அனுபவங்களும், பழக்கங்களும் புறையோடிப்போன நம்பிக்கைகளும் இன்றுவரை நீடிக்கிறது. அவற்றின் பின்னயில் சில அறிவியலும் சில வெறும் நம்பிக்கையுமே ஒட்டிக்கொண்டிருக்கின்றன.
உலகம் நவீன மயமாகிக்கொண்டிருக்கும் நிலையில் மகப்பேறு என்பதே எட்டாக்கனியாகிக்கொண்டிருக்கிறது. அதனை பெரும்பாலும் செயற்கை முறையிலேயே அடையும் நிலைக்கு மனித குலம் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது.
ஒரு கேள்விக்கு ஒரே பதில் என்று என்பது இவ்வுலகில் இல்லை. அதுபோலத்தான் எந்தவயது வரை கருவுறலாம் என்பதை பெண்ணின் உடல்நிலை, மருத்துவ நிலை, சமூக மற்றும் பொருளாதார நிலைகளே தீர்மானிக்கின்றன. இவையே இந்த கேள்விக்கான பதிலை சிக்கலுக்குள்ளாக்கின்றன.
ஆரம்பக்காலங்களில் எல்லாம் பல தம்பதியர் திருமணமானதும் வாழ்வில் ஒருநிலையை அடைய வேண்டும் என்பதற்காக குழந்தைப்பேற்றை தள்ளிப்போடுவர். ஆனால், மாறிவரும் வாழ்முறை காரணமாக எத்தனையோ விஷயங்கள் பாதிக்கப்பட்டது போலவே, பெண்ணின் கருவுறுதலும் தப்பவில்லை.
இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உலகில் தாய்மையடையாமல் 30 வயதைக் கடக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதால், 35 வயதுக்குள் தாய்மை அடைந்துவிட வேண்டும் இல்லையென்றால் சில சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதே. 35 வயதுக்கு மேற்பட்டு தாய்மைப்பேறு அடைவதை ஏஎம்ஏ அதாவது அதிகவயதில் தாய்மைப்பேறு என்று அழைக்கிறார்கள்.
மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால், வயதாகும்போது பெண்களுக்கு கருவுறுதல் இயற்கையாகவே குறையும். பெண்களின் கரு முட்டையின் தரம், திறன் 35 வயதுக்கு மேல் குறையத் தொடங்கும். நிச்சயம் அது 40 வயதுக்கு மேல் மோசமாள அளவில் குறையத் தொடங்கிவிடும். வயதாகும்போது, பெண்கள் அவர்களது சொந்த கருமுட்டையைக் கொண்டு கருவுறுதல் என்பதின் விகிதம் குறையத்தொடங்கும் என்பதே.
வயதான தம்பதிற்கு பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் பாதிப்பு ஏற்படலாம், சில குழந்தைகளுக்கு மரபு ரீதியான பிரச்னைகள் கூட ஏற்படுவதாகவும் எச்சரிக்கிறார்கள்.