

காலத்திற்கேற்ற சரியான தீர்ப்பு!
டெல்லியைச் சேர்ந்த வயதான தம்பதியர் தங்களது வீட்டில் இருந்து கொண்டு தங்களுடன் சுமூகமான உறவைப் பேணாத மகனையும், மருமகளையும் வீட்டை விட்டுக் காலி செய்யுமாறு கூறியுள்ளனர். பெற்றோரின் வேண்டுகோளை மகன் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனையடுத்து இரு தரப்பினரிடையே முடிவின்றித் தொடர்ந்த மனஸ்தாபங்களின் பின் அந்த பெற்றோர் டெல்லி உயர்நீதி மன்றத்தில் ‘தங்களுடன் பேச்சு வார்த்தைகளை முறித்துக் கொண்ட மகனையும், மருமகளையும் தங்களுக்குச் சொந்தமான வீட்டிலிருந்து வெளியேற்றுமாறு கூறி மனு தாக்கல் செய்தனர். பெற்றோரின் மனுவை எதிர்த்து மகனும், மருமகளும் அந்த வீட்டைக் கட்டியதில் பொருளாதார ரீதியாக தங்களது பங்கும் இருப்பதால் தங்களால் வீட்டைக் காலி செய்ய முடியாது என்றும், தங்களையும் அந்த வீட்டின் சம உரிமையாளர்களாகக் கருதி உயர்நீதிமன்றம் அந்த வீட்டில் பங்கிருப்பதாக உத்தரவிட வேண்டும் என்றும் கோரி எதிர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்ற நீதிபதி 'ஜஸ்டிஸ் பிரதிபா ராணி' வழக்கில் சம்பந்தப் பட்ட வீட்டைப் பொறுத்த வரை வீடு பெற்றோரின் சுய சம்பாத்தியத்தில் வாங்கப் பட்டது, என்பதற்குப் போதுமான சான்றுகள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப் பட்டுள்ளன. எனவே பெற்றோர் தரப்பில் எந்தத் தடையும் இல்லை. ஆனால் மகனும், மருமகளும் தாங்களும் அந்த வீட்டின் கட்டுமானத்திற்கு பொருளாதார ரீதியாக உதவியதற்கு போதுமான ஆதாரங்கள் சமர்பிக்கப் படவில்லை என்பதால் இந்த வழக்கில் பெற்றோருக்கு சாதகமாக தீர்ப்பளிப்பதாக வழக்கை முடித்தார்.
மேலும் இந்த வழக்கின் மூலம் வயதான பெற்றோரைக் கவனிக்காமல், அவர்களுடன் சுமுகமான உறவைப் பேணாமல், அவர்களுக்குச் சொந்தமான வீட்டில் வாழ நினைக்கும் மகன் அல்லது வாரிசுகளுக்கு பெற்றோர் அனுமதியும், கருணையும் இன்றி தொடர்ந்து அங்கு வாழ அனுமதி இல்லை எனவும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.