கேமலின், வின்ஸ்டர், ஹீரோ முதல் பார்க்கர் வரை ஒரு நாஸ்டால்ஜிக் பேனா டூர்!

இழந்து விட்ட தங்க நிற மூடி கொண்ட ஹீரோ பேனா ஞாபகத்தில் வந்து மறித்தாலும் கூட அதை விட காஸ்ட்லியான வெள்ளி நிற பார்க்கர் பேனா கிடைக்கப் போவதை நினைத்து
கேமலின், வின்ஸ்டர், ஹீரோ முதல் பார்க்கர் வரை ஒரு நாஸ்டால்ஜிக் பேனா டூர்!

இப்பொதெல்லாம் பள்ளிப் பிள்ளைகளை 5 ஆம் வகுப்பிலிருந்தே ஜெல் பேனாக்களை கொண்டு எழுத அனுமதித்து விடுகிறார்கள். எங்களது பள்ளி நாட்களில் 6 ஆம் வகுப்புக்கு மேல் தான் இங்க் பேனா கொண்டு எழுத அனுமதிப்பார்கள். நட்ராஜ் பென்சிலில் இருந்து இங்க் பேனாவுக்கு மாறும் வைபவம் இருக்கிறதே... அட, அட, அடடா! அப்பாவுடன் பேனா வாங்க கடைக்குப் போவதே என்னவோ சென்னையின் மையப்பகுதியில் சொந்தமாக ஒரு ஃபிளாட் வாங்கப் போகும் முஸ்தீபுக்கு சற்றும் குறையாமல் இருக்கும். இங்க் பேனாவில் எழுதுவதை என்னவோ தலையில் கிரீடம் வைக்காத குறையாக பெருமையாக உணர வைத்த நாட்கள் அவை.

6 ஆம் வகுப்பில் முதன் முதலாக கேமலின் பேனா வாங்கித் தந்தார்கள். பேனாவின் கழுத்தைத் திருகிக் கழட்டி நேரடியாக இங்க்கை அதன் வயிற்றுக்குள் நிரப்பி எழுதும் பேனா வகை இது. மேக்கிங் நன்றாக அமைந்து, கன்னா, பின்னாவெனக் கையாளாமல் பதவிசாகப் பயன்படுத்தினால் ஓரிரு வருடங்களுக்கு நன்றாகவே உழைக்கக் கூடும். சிலர் வார இறுதி விடுமுறை நாட்களில் பேனாவை பார்ட், பார்ட் ஆகக் கழற்றி தண்ணீரி ஊற்றிக் கழுவிக் காய வைத்து துடைத்து எடுத்து மை ஊற்றி என அந்தப் பேனாவை ஒரு குழந்தை போலக் கூட சீராட்டி பெருமையாக வைத்துக் கொண்டது உண்டு. சிலருக்கோ வாரம் ஒரு கேமலின் பேனா வாங்க வேண்டிய லட்சணத்தில் யோகமிருக்கும். கேமலினோடு சரி சமமாய் அன்று போட்டியில் இருந்த மற்றொரு சாதாரணப் பேனா வகை எனில் அது வின்ஸ்டர். இதையும் கூட கேமலின் போலவே கையாளலாம். இதெல்லாம் பத்தாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் வரை தான். 

பத்தாம் வகுப்பில் அடியெடுத்து வைத்த காலோடு பெரும்பாலானோர் ஸ்ரீஇராமரின் கோதண்டம் போலப் பாவித்துக் கொண்டு கையில் ஹீரோ பேனாவை ஏந்திக் கொண்டு திரிவார்கள். அதிலொரு சுகம். இந்த ஹீரோ பேனா இருக்கிறதே அதற்கு நடுத்தர வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவிகளோடு ஒரு ஆத்மார்த்த பந்தம் இருக்கிறது. பரீட்சையில் முதல் மதிப்பெண் பெற்றால் உடனே பெற்றோர், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களிடமிருந்து எப்படியாவது ஒரு ஹீரோ பேனா நமக்கு பரிசாகக் கிடைக்கும் எனும் உத்தரவாதம் இருந்த காலம் அது. வழக்கமாக ஹீரோ பேனா மூன்றே மூன்று வண்ணங்களில் தான் அப்போது கிடைத்தது. இப்போதும் அப்படித்தான் என்று கேள்விப்பட்டேன். அடிப்பகுதி மட்டுமே கருப்பு, சிவப்பு, பச்சை என வண்ணம் மாறும், ஆனால் எல்லாப் பேனாக்களுக்கும் ஒரே விதமான தங்க நிற மூடி தான் ஸ்பெஷல் அடையாளம். மாணவர்கள் மட்டுமல்ல அப்போது ஆசிரியர்களும் ஹீரோ பேனாக்கள் தான் பயன்படுத்தினர். நான் படித்த பள்ளியில் தலைமை ஆசிரியர் பச்சை இங்குக்கு பச்சை நிற ஹீரோ பேனாவும், சிவப்பு இங்க்குக்கு சிவப்பு ஹீரோ பேனாவும் பயன்படுத்தினார். அந்தக் காலத்தில் அது ஒரு ஸ்டைல் என நினைத்துக் கொள்வோம் நாங்கள்.

என்னிடம் கருப்பு நிற அடிப்பாகமும் தங்க நிற மூடியும் கொண்ட ஒரு ஹீரோ பேனா இருந்தது. பரீட்சைகளுக்கு மட்டுமே அதைப் பயன்படுத்துவேன். பத்தாம் வகுப்பு என்பதால் பரீட்சைகளுக்குத் தான் பஞ்சமே இருக்காதே! தனியார் பள்ளி என்பதால் வருடம் முழுக்க பரீட்சைகள் தான். அந்தோ பரிதாபம் கடைசியில் என்ன ஆனது தெரியுமா? பொதுப் பரீட்சை அன்று காலையில் எனது ஹீரோ பேனா காணாமல் போனது. எப்படிக் காணாமல் போனது என்றெல்லாம் தெரியாது. ஆனால் போயும், போயும் பரீட்சை அன்று தானா என் பேனா தொலைந்து போக வேண்டும்? அதிலும் எனக்கு மிகவும் பிடித்தமான என்னுடைய அதிர்ஷ்டப் பேனாவைக் காணோமென்றால் எப்படி இருக்கும் மனநிலை? இப்போதிருக்கும் குழந்தைகளைப் போலவா அன்று நாங்கள் வளர்க்கப்பட்டோம்? ஓவர் செல்லம் கொஞ்சலுக்கும், முரண்டு பிடித்து பொருட்களை வாங்குவதும் அன்றெல்லாம் இயலாத காரியம். பேனாவைக் காணோமென்றால் அப்பா என்ன சொல்வாரோ என்ற பயம் தான் முதலில் வந்தது. அப்பாவைக் கூட சமாளித்து விடலாம். கூடப் படிக்கும் பிள்ளைகள் எல்லாம் ஹீரோ பேனாவில் பரீட்சை எழுதுவார்கள். நான் மட்டும் ஏப்பை, சாப்பையாக ஏதோவொரு கேமலினிலோ, வின்ஸ்டரிலோ பரீட்சை எழுதுவதா? அதுவும் என் எதிர்கால வாழ்வைத் தீர்மாணிக்கப் போகும் உயர்கல்வி (+2) பிரிவை தேர்ந்தெடுக்க உதவும் மதிப்பெண்களை அள்ளி வழங்கப் போகும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை சாதாரணப் பேனாவில் எழுதி தேர்வின் மரியாதையையே கெடுத்து விடுவதா? என்று சகட்டு மேனிக்கு கழிவிரக்கம் பின்னி எடுக்க பரீட்சைக்கு முதல் நாள் பள்ளிக்கு கிளம்பும் நேரத்தில் ஓவென்று அழுது கொண்டு நின்றேன். 

அவரவர்க்கு அவரவர் பிரச்னை. அம்மா ஆசிரியர் என்பதால் அவருக்கும் பள்ளிக்கு கிளம்பும் காலை நேர அவசரம் இருந்தது. அப்படியே வேறு பேனா வாங்கித் தருவதாக இருந்தாலும் நிச்சயமாக அவர்கள் ஹீரோ பேனா வாங்கித் தர மாட்டார்கள். கேமலினோ, வின்ஸ்டரோ தான் கிடைக்கும். அது எனக்குத் தேவையே இல்லை. அப்பா வேறு வீட்டில் இல்லை. இப்போது உடனே பள்ளிக்குச் சென்றாக வேண்டும். பரீட்சை ஹாலுக்குள் நுழையும் முன் தேர்வைப் பற்றி பிரத்யேக குறிப்புகள் வேறு வழங்கித் தொலைவார்கள். எங்கள் பள்ளி ரொம்பவே ஸ்ட்ரிக்ட். எனக்கோ என்னை நினைத்து சுய ஆதூரம் தாங்கவில்லை. அம்மாவிடம் சொல்லி விசும்பி அழுது கொண்டிருந்தேன். நிம்மதியாக அழக்கூட விடாமல் யாரோ அந்நேரத்தில் சரியாக காலிங் பெல் அடித்தார்கள். நாம் அழும் போது பிறர் பார்க்கக் கூடாது என்று நினைக்கும் இன்றைய நாகரீகப் பிள்ளைகளைப் போல இல்லை அன்றெலாம்... யாரோ வந்து விட்டுப் போகட்டும், எனக்கென்ன? எனக்கு இப்போது என் ஹீரோ பேனா வேண்டும். அவ்வளவு தான். ஆனால் அதென்னவோ கிடைக்கப் போவதில்லை. அதில்லாமல் எப்படி நான் பரீட்சை எழுத முடியும்? என்று என் போக்கில் வந்தவர்களைக் கவனிக்காமல் என் பாட்டில் நான் அழுது கொண்டிருந்தேன். அம்மா என்னை சமாதானப் படுத்திக் கொண்டே கதவைத் திறந்தார். 

வந்தது அம்மாவின் இளைய சகோதரரான எனது மாமா. மதுரை சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவர் அவ்வப்போது அக்கா வீடு பக்கம் தானே என்று எங்கள் வீட்டுக்கு வந்து ஓரிரு நாட்கள் தங்கிச் செல்வது உண்டு. அப்படித் தான் வந்திருந்தார். நான் அழுவதைப் பார்த்ததும். இன்னைக்குத் தானே பரீட்சை ஆரம்பம்... போகாமல் ஏன் அழுது கொண்டிருக்கிறாய் என்றார். பதில் சொல்லும் நிலையில் நான் இல்லாததால் அம்மா அவரிடம். என் ஆருயிர் ஹீரோ பேனா தொலைந்த கதையைக் கூறினார். கதை கேட்டவர்; சரி அதனால என்ன இப்போ? வேற பேனா வாங்கிட்டுப் போய் பரீட்சை எழுதலாமே. நேரமாச்சு பார் என்றார். 

அதெல்லாம் இல்லை. எனக்கு ஹீரோ பேனாவே தான் வேண்டும். அதில்லாமல் நான் பரீட்சை எழுத முடியாது. சாதாரணப் பரீட்சைகளுக்கு எல்லாம் ஹீரோ பேனா வைத்து எழுதி விட்டு, இன்றைக்கு முழுப் பரீட்சை... இன்றைக்குப் போய் என் ஹீரோ பேனா தொலைந்து போனால் நான் என்ன செய்வேன்? எனக்கு ஹீரோ பேனாவே தான் வேண்டும் என ஒற்றைக் காலில் அழுது கொண்டு நின்றேன். அதென்னவோ அத்தனை பிடிவாதம் அப்போது எப்படி வந்தது எனத் தெரியவில்லை. பரீட்சைக்கு வேறு நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. ‘எந்தப் பேனாவில் எழுதினா என்ன? பரீட்சை எழுதறது தான் முக்கியம், கேமலின் பேனா வாங்கிட்டு கிளம்பும்மா ஸ்கூலுக்கு’ என அம்மா எரிச்சலடையத் தொடங்கி இருந்தார். எனக்கு ஹீரோ பேனாவை விட்டு விட மனமே இல்லை. எனவே என்ன செய்வதெனத் தெரியாமல் பதட்டத்தில் இன்னமும் அழுகை கூடியது.

மாமா ஒரு நிமிடம் யோசித்தார். பிறகு சின்னப் புன்னகையுடன் அவரது சட்டைப் பாக்கெட்டில் இருந்து ஒரு வெள்ளி நிறப் பேனாவை எடுத்து என் கையில் கொடுத்தார். அட இது ஹீரோ பேனாவை விட அழகா இருக்கே?! என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே; இது பார்க்கர் பேனா. உன்னோட ஹீரோ பேனாவை விட இது காஸ்ட்லி. இப்ப உன் பரீட்சையை இதுல எழுது போ. இந்தப் பேனா உனக்கு என்னோட பரீட்சை கிஃப்டா இருக்கட்டும். எல்லாப் பரீட்சையும் நீ இதுலயே எழுதலாம் என்றார். ஒரு சில நொடிகளுக்கு இழந்து விட்ட தங்க நிற மூடி கொண்ட ஹீரோ பேனா ஞாபகத்தில் வந்து மறித்தாலும் கூட அதை விட காஸ்ட்லியான வெள்ளி நிற பார்க்கர் பேனா கிடைக்கப் போவதை நினைத்து சந்தோசமாகவே இருந்ததால் நான் அழுகையைப் படிப்படியாக குறைத்துக் கொண்டு கைக்குழந்தையைத் தொடுவதைப் போல ஆசையாக அந்தப் பேனாவை வாங்கிக் கொண்டேன்.

அதை முதல் முறை கையில் தொடும் அந்த நிமிடம் வரை எனக்கு பார்க்கர் என்றொரு காஸ்ட்லி பேனா இருப்பதே தெரியாது. ஹீரோ பேனா தான் காஸ்ட்லி என்று நினைத்த அப்பாவி கடைசித் தலைமுறை பள்ளி மாணவப் பருவம் என்னுடையது. ஆனால் இன்று பாருங்கள்; என் மகள் கூறுகிறாள், அவளது வகுப்பில் பல மாணவர்களிடம் மூன்றுக்கும் மேற்பட்ட பார்க்கர் பேனாக்கள் இருக்கிறதாம். ஹீரோ பேனா எல்லாம் தண்ணீர் பட்ட பாடு. அதெல்லாம் இப்போ சாதாரணம் அம்மா என்கிறாள். சரி தான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com