“கொற்றவை”  - ஜெயமோகன் 

சிலப்பதிகாரம் கண்ணகியின் கற்பின் மாண்பைக்  குறித்துப் பேசுவதாகப் புரிந்து கொள்வதைக் காட்டிலும் அதிகார வர்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக பீறிட்டுக் கிளம்பிய ஒரு மாபெரும் சமுதாயப்  புரட்சியை,
“கொற்றவை”  - ஜெயமோகன் 

வாசித்து முடித்ததும் கோசாம்பியின் பண்டைய இந்தியாவை ஜோடனையோடு மீண்டும் ஒருமுறை வாசித்து முடித்த எஃபெக்ட்.

கண்ணகியைப் புரிந்து கொள்ள முடிகிறது, மாதவியையும், நீலியையும் கூடத் தான், ஆனால் கோப்பெருந்தேவியைப் புரிந்து கொள்ள முடியவில்லை. என்ன பெண் இவள்? என்று எரிச்சலாய் இருக்கிறது சிலப்பதிகாரத்திலும் சரி... அதன் நவீன வெர்சனான கொற்றவையிலும் சரி அவள் ஒரு சிக்கலான படைப்பு... மதுரை எரியூட்டப் பட கண்ணகி காரணம் அல்ல இவளே காரணம்!

குறவர், வேளார், வணிகர், ஆயர் உள்ளிட்ட அடக்கி ஒடுக்கப் பட்ட எட்டுக் குடிகளின் ஒட்டு மொத்தக் கோபம் கனலாய் தகிக்கத் தொடங்கிய நெடி கூட அறியாது கேரள பாணர்கள் மற்றும் விரளியறது ஆட்டம் காண விளையும் பாண்டியன் நெடுஞ்செழியன் ரோம் பற்றி எரிகையில் பிடில் வாசித்த நீரோவை நினைவூட்டுகிறான். 

சிலப்பதிகாரம் கண்ணகியின் கற்பின் மாண்பைக்  குறித்துப் பேசுவதாகப் புரிந்து கொள்வதைக் காட்டிலும் அதிகார வர்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக பீறிட்டுக் கிளம்பிய ஒரு மாபெரும் சமுதாயப்  புரட்சியை, கிளர்ச்சியைப் பற்றி மிக விரிவாகப் பேசும் பண்டைய தென்னிந்திய வரலாற்றின் ஆவணமாக இதைப் புரிந்து கொள்ள முயல்வது நலம். 

ஐவகை நிலங்களுக்கான தெய்வங்கள் என்று நம் பாடப் புத்தகங்கள் காட்டிச் சென்றது ;

குறிஞ்சி - முருகன் 
முல்லை - திருமால் அல்லது மாயோன் 
மருதம் - இந்திரன் 
நெய்தல் - வருணன் 
பாலை - கொற்றவை 

ஆனால் கொற்றவையில் கண்ணகி கடந்து செல்லும் நால்வகை நிலங்களுக்கும் தொல் தெய்வங்களாக ஜெமோ வியாபித்துக் கூறுவது பேரன்னை கொற்றவையின் பல்வேறு வடிவங்களான பெண் தெய்வங்களை மட்டுமே. முல்லையில் மாயோனை மட்டுறுத்தி நப்பின்னையை பெரிதாகக் காட்டுகிறார். மருதத்தில் இந்திரனை மருந்துக்கும் காணோம்! ஏன் கண்ணகி கதை என்பதாலா? அதற்காக கிடைக்கும் இடைவெளிகளை எல்லாமும் கொற்றவையால் மட்டுமே நிரப்புவதென்றால் முடிவில்  ஒரே பாலை நெடி மட்டுமே மிஞ்சுகிறது? 

மாதவியிடமிருந்து மீண்ட கோவலன் கண்ணகியை அடைந்து இருவரும்  புகார் விட்டு நீங்கிய நாளின் தொடக்க கணம் முதற்கொண்டே தன் கொழுனனுக்கு நேரப் போகும் அபாயம் பேரன்னையின் பிரதிநிதியாகக் காட்டப் பட்டிருக்கும் கண்ணகிக்கு தெரிந்தே தான் இருந்ததா? பின் ஏன் நாவலில் ஒரு முறை கூட அவள் தன் கணவனுக்கு  எச்சரிக்கை நிமித்தம் எந்தச் சொற்களும் கூற முயற்சிக்கவில்லை?

சாக்கிய புத்தனின் அடியவளான காவுந்தியை நீலியாக்கி ஜெமோ  கதை நகர்த்திச் செல்வது சுவாரஸ்யம் கருதியா? அல்லது மூலமான சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும் இப்படித் தான் சொல்லி இருக்கிறாரா?

இவை தவிர சாருவாகப் பிராமணர்கள் என்றொரு பிரிவினர் அவர் தம் நெறிகள், ஆறலைக் கள்வர் நெறிகள், மறவர் நெறி, உமணர் நெறி, வணிகர் நெறி என்றெலாம் கதை விரிகையில் கற்பில், குழந்தை வளர்ப்பில், பொருள் தேடலில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கான பூரண சரி நிகர் சமானம் இருப்பதாகக் காட்டப் படுவது சாருவாகப் பிராமணர்களின் நெறியில் மட்டுமே. இப்படி ஒரு பிரிவினர் இருந்தனர் என்று இந்த நாவலில் தான் முதல் முறையாக வாசிக்கக் கிடைத்தது. 
 
ஆஹா... நான் சொல்ல நினைத்தது இதில்லையே !

இப்படிப் புதிது புதிதாகத் தெரிந்து கொள்ள பழைய விவரங்கள் பல இந்த நாவலில் நிறைய இருப்பதென்னவோ வாஸ்தவம் தான், வாசிக்கப் பொறுமை இருப்பவர்கள்  வாங்கி வாசித்துத் தெரிந்து கொள்ளலாம். 

கொற்றவை நிறையவே சிந்திக்க வைத்தாலும் எனக்கென்ன ஆதங்கமென்றால், தீவிர முருக பக்தையான என் அம்மாவிடம் போய் முருகன், தெய்வானை, வள்ளி எல்லாம் கடவுள்கள் இல்லை, பண்டைத் தென்னிலத்தின் வாழ்ந்து மறைந்த பழங்குடி அரச பரம்பரையினராம் என்று சொல்ல வேண்டியதாக ஆயிற்று. அம்மா அதை நம்பவில்லை. இன்ஃபாக்ட் வாசித்து சில மாதங்களின் பின் நானும் கூட அதை நம்பவில்லை என்று சொல்வதைக் காட்டிலும், அப்படி நம்புவதை விரும்பவில்லை என்று சொல்வது சரியாக இருக்கலாம். ஏனென்றால் நம்பிக்கை வைக்க நமக்கொரு இடம் அல்லது பிரதிமை தொடர்ந்து தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும் கட்டாயமிருப்பதால் இன்னின்ன விசயங்களையெல்லாம் இப்படியும் இருக்கலாம் என்ற அனுமானங்கள் மற்றும் யூகங்களைக் கடந்தும் நமக்கான நம்பிக்கைகளை நாம் கைவிடாமலிருப்பது மனதளவில் பாதுகாப்பானதே. இல்லாவிட்டால் கணவர் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்து சேரும் வழக்கப்படியான நேரம் தாண்டி கால் மணி தாமதமானாலோ அல்லது குழந்தையின் பள்ளி வேன் வழக்கத்தை விட சற்றுக் கூடுதலாகவே தாமதமானாலோ உடனே கோபி கிருஷ்ணனின் "உள்ளே  இருந்து கேட்கும் சில குரல்கள் "ரேஞ்சில்  ஐயோ என்னாச்சோ ஏதாச்சோ என அவ்வப்போது சதாய்க்கும் நெகட்டிவ் சிந்தனைகள் எல்லாம் நம்மை ரொம்பவும் படுத்தாமல் எப்படித்தான் டபாய்த்து சமாளிப்பதாம்?!

வாசிக்கையில் இப்படி ஒரு விமர்சனம் மனதில் ஓடிக் கொண்டிருந்தாலும், நீங்கள் தீவிர இலக்கிய வாசகர்களாயிருப்பீர்களானால் உங்களது புத்தக அலமாரியில் கொற்றவைக்கும் ஓரிடம் தாராளமாகத் தரலாம். அது தரும் வாசிப்பனுபவம் அலாதியானது என்கிறேன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com