மன நலன் என்பது மோசமான சூழ்நிலைகளைச் சமாளிப்பது மட்டுமல்ல, வாழ்க்கையின் ஒவ்வொரு மகிழ்ச்சியான தருணங்களையும் உணர்ந்து அனுபவிக்க வேண்டும் என்று தெரிவிக்கும் மன நல நிபுணர்கள், உடல் ஆரோக்கியத்தைவிட மன அழுத்தம் சார்ந்த பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை சரிசெய்ய முயற்சி எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.
ஒவ்வொருவரும் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை எடுக்கிறார்கள். நவீன வாழ்க்கைச் சூழலால் ஏற்படும் உடல் பாதிப்புகளைச் சரிசெய்ய மெனக்கெடுகின்றனர்.
உடல் பருமன் உள்ளிட்ட பிரச்னையால் அவதிப்படுவோர் உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி, உணவுப் பழக்கவழக்கங்கள் என வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்கின்றனர்.
இவையெல்லாம் சரிதான், ஆனால் உடலைப் பாதிக்கக்கூடிய மற்றுமொரு முக்கியமான விஷயத்தை நாம் மறந்துவிடுகிறோம். அதுதான் மன நலன்.
முன்னொரு காலத்தில் மன அழுத்தம் என்பது இருந்தாலும் அது பெரிதாக பேசப்படவில்லை, அதனால் பெரிய பாதிப்புகளும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் நகரமயமாக்கல், வெளிநாட்டுப் பயணம், தனிக் குடும்பம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இன்று பலரும் தனித்தே வாழ்கிறார்கள். இந்த தனிமையினால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு நோய்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது மன அழுத்தம் என்றே ஆய்வுகள் பலரும் தெரிவிக்கின்றன.
பதற்றம், தொடர் மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவை வெளிப்படையாக தெரியாததால் அவை உடல்நலப் பிரச்னைகளாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிடப்படுவதால் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் தெரிவதில்லை.
ஆனால் ஒரேயொரு ஆறுதலான விஷயம், முன்பெல்லாம் மன அழுத்தம் என்ற வார்த்தை பயன்பாட்டில் இல்லாத நிலையில் இன்று அதுபற்றி பலரும் பேசுகின்றனர். அதுபோலவே, மன அழுத்தத்தில் இருப்பவர்கள், மன நல ஆலோசகர்களை இன்று எந்தவித தயக்கமுமின்றி மற்ற மருத்துவர்களைப்போல அணுகும் நிலைக்கு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
மன அழுத்தம், பதற்றம் பற்றி பலரும் தங்களுக்கு நெருங்கியவர்களிடம் வெளிப்டையாகப் பேசுகிறார்கள். சமூக ஊடகங்களில்கூட பலரும் இதுபற்றி பேசுகிறார்கள், மனநல ஆலோசகர்கள் தங்களது ஆலோசனைகளை சமூக ஊடகங்களில் வழங்குகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் இது பலருக்கும் உதவியாக இருக்கிறது.
மன அழுத்தம் பற்றி விழிப்புணர்வு இருந்தாலும் உடல் பாதிப்புகளைப்போல அதற்கு தொடர்ச்சியான சிகிச்சைகள் யாரும் எடுப்பதில்லை என்று மன நல மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
"உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்வது, சமச்சீரான உணவுகளைச் சாப்பிடுவது என உடல்நலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல மன நலத்திற்கும் விழிப்புணர்வு உருவாகி வருகிறது. ஆனால், இந்த விழிப்புணர்வு தொடர்ச்சியானதாக இல்லை, மன அழுத்தத்தைக் குறைக்க தொடர்ச்சியான முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை" என்று கொச்சி மெடிக்கல் டிரஸ்ட் மருத்துவமனையின் மூத்த மனநல மருத்துவர் டாக்டர் சி.ஜே. ஜான் கூறுகிறார்.
"பள்ளிகளில் குழந்தைகளுக்கு படிப்பின் மீதான அழுத்தம், பெற்றோர்களுக்கு நிதி சார்ந்த பிரச்னைகள், உணர்ச்சிரீதியான பிரச்னைகள் எல்லாம் மன அழுத்தத்திற்கான எச்சரிக்கை மணி. ஆனால் இவையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படாமல் சாதாரண பிரச்சனைகளாகப் பார்க்கப்படுகின்றன. இவைகள் எல்லோருக்கும் இருக்கும் பிரச்னைகள்தான் என்றாலும் இதன் விளைவுகள் அதிகமாக இருக்கும்பட்சத்தில் கவனம் தேவை.
வீட்டில் பிரச்னை, பணியிடத்தில் பிரச்னை, உறவுகளில் சண்டை என பலரும் அந்த பிரச்னைகள் முற்றி அதனால் பாதிப்பு ஏற்படும்வரை கவனம் செலுத்துவதில்லை. இது தீவிரமாக இருக்கும்பட்சத்தில் மன நலத்தை பலவீனப்படுத்துகிறது. மனநலப் பிரச்னைகளை இந்த சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். மன நலம் இல்லாமல் உடல் ஆரோக்கியம் இல்லை," என்று விளக்குகிறார் டாக்டர் ஜான்.
உடல் பாதிப்புகள் ஏதும் இல்லாதவர்கள்கூட தங்களைச் சுற்றி நடக்கும் பிரச்னைகளால் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கலாம் என்றும் கூறுகிறார்.
அதனால் மன அழுத்தம் முற்றும்வரை காத்திருக்காமல் ஆரம்ப நிலையிலேயே அதனைக் கண்டறிந்து சரிசெய்ய முயற்சிக்க வேண்டும், மன நலத்தை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டியது பல்வேறு உடல்பாதிப்புகளில் இருந்தும் தப்பிக்க உதவும் என்றும் என மனநல நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். மன அழுத்தத்தை நிர்வகிக்கவும், உணர்ச்சியை சமநிலையில் வைத்துகொள்ளவும் இந்த கால இளைஞர்களுக்கு இப்போதிலிருந்தே பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் அது அவர்களின் பிற்கால வாழ்க்கைக்கு பெரிதும் உதவும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.
மன நலம் என்பது கடினமான, மோசமான தருணங்களில் இருந்து தப்பிப்பது மட்டுமல்ல, வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்க வேண்டும் என்பதும்தான். “மன நலன் என்பது நெருக்கடிகளைச் சமாளிப்பது மட்டுமல்ல. மகிழ்ச்சியாக வாழ்வதும் மன நலனே. ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழும் திறனே மன நலத்தின் உண்மையான அளவுகோல்" என்கிறார் டாக்டர் ஜான்.
மன நலன் குறித்த உரையாடல்கள் அதிகரித்து வரும் நிலையில் அவை சரியான மாற்றங்களுக்கு வழிவகுக்க வேண்டும். மன நலன் சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர் சரியான உதவியை நாடுவதற்கும் மன உளைச்சலை ஆரம்பத்திலேயே கையாள்வதற்கும், உடல் ஆரோக்கியத்தைப்போல உணர்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதிலேயே உண்மையான சவால் இருக்கிறது. நாம் தினமும் எவ்வளவு நேரம் நடக்கிறோம் என்பதைவிட நம்முடைய மன நலன் எப்படி இருக்கிறது என்று ஒவ்வொருவரும் தினமும் சரிபார்த்துக்கொள்வது நிம்மதியான ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
மன அழுத்தம் வர காரணங்கள் என்ன?
உயிரியல், உளவியல், சமூகம் ஆகிய காரணங்களால் ஏற்படுகிறது.
கல்வி தொடர்பான அழுத்தம், வேலை தொடர்பான மன அழுத்தம், திடீரென அதிக நிதி இழப்பு, உறவில் கருத்து வேறுபாடுகள், தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப்பெரிய இழப்பு, ஆதரவு இல்லாதது, விபத்து, ஏமாற்றம், துரோகம், திடீர் நோய் போன்றவை காரணமாக இருக்கலாம்.
மோசமான வேலை - வாழ்க்கை சமநிலை, தூக்கமின்மை, சமூத்தில் தனிமை போன்றவையும் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.
மரபணுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. சிலர் மிகச்சிறிய தோல்விக்கே கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். சிலர் எவ்வளவு பெரிய கடினமான சூழ்நிலைகள் வந்தாலும் தைரியமாக சமாளிப்பார்கள்.
சிகிச்சைகள்
மனநல சிகிச்சையைப் பொருத்தவரை ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இதில் மருந்துகள், உளவியல் சிகிச்சைகள், தேவைப்படும் இடங்களில் சமூக தலையீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முன்பைவிட இப்போதுள்ள மருந்துகள் பெரிதாக மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிப்பதில்லை. பக்க விளைவுகளும் கணிசமாக குறைந்திருக்கிறது.
அறிவாற்றல் நடத்தை சிகிச்சை, இருமுனை நடத்தை சிகிச்சை, நினைவாற்றல் அடிப்படையிலான சிகிச்சைகள் போன்ற உளவியல் சிகிச்சைகள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கின்றன. ஓசிடி போன்ற நிலைகளுக்கு மருந்துகளுடன் உளவியல் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவது நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்துகின்றன.
காந்தத் தூண்டுதல், மின்சாரம் மூலமாக அதிர்ச்சியளிக்கும் சிகிச்சைகளும் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.