பிரபல சமூக வலைவளங்களில் ஒன்றான டிவிட்டர் விரைவில் ‘எடிட்’ வசதியை அறிமுகப்படுத்த இருக்கிறது.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஒரு பதிவைப் பதிந்த பின் அதில் பிழை திருத்தும்(எடிட்) வசதி இருக்கிறது. இதன் மூலம், பதிவில் சில மாற்றங்களை செய்துகொள்ளலாம். எடுத்துக்காட்டாக, பதியப்படும் வாக்கியத்தில் பிழைகள் ஏதேனும் நிகழ்ந்தால் அதை பதிவிட்ட பிறகும் திருத்திக் கொள்ளலாம்.
இது பதிவர்களுக்கு மிகத் தேவையான வசதியாக இருந்தாலும் இதுவரை டிவிட்டரில் இந்த வசதி இல்லை.
முன்னதாக, இதுகுறித்து டிவிட்டர் தரப்பில், பதிவை திரும்ப மாற்றும் வசதி இருந்தால் பதிவில் நம்பகத்தன்மை இருக்காது தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி ‘எடிட்’ வசதியை அறிமுகப்படுத்துவதாக டிவிட்டர் அறிவித்தது. இருப்பினும், முட்டாள் தினமான அந்நாளில் இது பொய் என செய்திகள் வெளியான நிலையில், டிவிட்டர் நிறுவனம் உண்மையிலேயே அந்த வசதியை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் விரைவில் இந்த வசதி ‘புளூ டிக்’ பயனர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.