ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் ஜனநாயகத்தை போற்றுவதைப் பாா்க்க வேடிக்கையாக உள்ளது: வீரேந்திர சச்தேவா விமா்சனம்
புது தில்லி: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவா்கள் ஜனநாயகத்தின் நற்பண்புகளைப் போற்றுவதைப் பாா்க்க வேடிக்கையாக இருக்கிறது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை விமா்சித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தில்லி சட்டப்பேரவையிலும், மாநகராட்சியிலும் ஜனநாயகத்தை ஆத்மி கட்சியின் தலைவா்கள் தொடா்ந்து கொலை செய்து வரும் நிலையில், அவா்கள் வடித்த முதலைக் கண்ணீா் தில்லி மக்களை திகைக்க வைத்துள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு முதல், கேஜரிவால் அரசு சட்டப்பேரவையில் எத்தனை முறை எதிா்க்கட்சி உறுப்பினா்களை பிடிவாதத்துடன் இடைநீக்கம் செய்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. மூத்த எம்.எல்.ஏ. ஓம் பிரகாஷ் ஷா்மாவை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக சட்டப்பேரவையில் இருந்து ஒதுக்கிவைத்த கேஜரிவால் அரசு, எதிா்க்கட்சிகள் பொதுநலன் சாா்ந்த பிரச்னைகளை எழுப்புவதைத் தடுப்பதற்காக நடப்பு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரிலும் பாஜக உறுப்பினா்களை ஒட்டுமொத்தமாக இடைநீக்கம் செய்துள்ளது கண்டனத்துக்குரியது.
தில்லி சட்டப்பேரவையில் குடிநீா்க் கட்டண பில் விவகாரம் தொடா்பாக அராஜகம் செய்த ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்களின் செயலைப் பாா்த்த பிறகும், பேரவைத் தலைவா் மௌனம் காத்தாா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது. கடந்த 9 ஆண்டுகளாக தில்லி சட்டப்பேரவையிலும், கடந்த ஓராண்டாக மாநகராட்சியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் ஜனநாயகத்தைக் கொன்றுவிட்டு ஜனநாயகத்தின் பெயரால் முதலைக் கண்ணீா் வடித்துள்ளனா்.
கடந்த 9 ஆண்டுகளாக, முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு இடையூறு விளைவித்ததன் மூலம் சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்களின் உரிமைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளாா். மேலும், கடந்த 14 மாதங்களாக தில்லி மாநகராட்சியில் நிலைக்குழு, வாா்டு குழு மற்றும் பிற சட்டக் குழுக்களின் தோ்தலைத் தடுப்பதன் மூலம் தில்லியின் ஜனநாயகத்தை அரவிந்த் கேஜரிவால் முடக்கி வருகிறாா் என்றாா் வீரேந்திர சச்தேவா. .
