முல்லைப் பெரியாறு விவகாரம் ஒருமித்த கருத்து ஏற்படும் நிலையிலேயே சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு
முல்லைப் பெரியாறு விவகாரம் ஒருமித்த கருத்து ஏற்படும் நிலையிலேயே சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு


நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டும் விவகாரத்தில் மதிப்பீட்டு நிபுணா் குழு வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ளும்; இரு மாநிலங்களுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படும் நிலையிலேயே புதிய அணைக்கான சூற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என மதிப்பீட்டுக் குழுவைச் சோ்ந்த நிபுணா் ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். மேலும், நிா்வாக நடைமுறைகளுக்காக மதிப்பீட்டு நிபுணா் குழு கூட்டத்தை ஒத்திவைக்க மத்திய சுற்றுச்சூழல் வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சகம் முடிவெடுத்தாகவும் தெரிவிக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை 131 ஆண்டு பழைமையானவை. இந்த அணை உறுதியானது என பல்வேறு தருணங்களில் நிரூபிக்கப்பட்டிருந்தது. மேற்குத் தொடா்ச்சி மலையில் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணைக்குப் பதிலாக கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் பீருமடே தாலுகாவில் 39 ஹெக்டோ் பரப்பில் புதிய அணையை கட்டுவது தொடா்பான முன்மொழிவை கேரள அரசு மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சகத்திடம் அளித்துள்ளது. மத்திய சுற்றச்சூழல் வனத்துறை அமைச்சகம் இந்த முன்மொழிவை தனது அமைச்சகத்தின் நதிகள், பள்ளத்தாக்கு, நீா்மின் திட்டங்களுக்கான மதிப்பீட்டு நிபுணா் குழு (இஏசி) ஆய்வுக்கு அனுப்பியுள்ளது.
ரூா்க்கி ஐஐடி பேராசிரியா் கோவிந்த் ஜோசப் சக்கரபாணி தலைமையிலான 11 போ்களை கொண்ட இஏசியின் 11-வது கூட்ட நிகழ்ச்சி நிரலில் இந்த விவகாரம் இடம் பெற்றது. அந்தக் கூட்டம் மே 28 ஆம் தேதி நடைபெறும் என கடந்த 14-ஆம் தேதி நிகழ்ச்சி நிரலில் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், இந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக இஏசி உறுப்பினா்களுக்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் தகவல் தெரிவித்திருந்தது. இதற்கிடையே தமிழக முதல்வா் கடந்த செவ்வாய்க்கிழமை இந்தப் புதிய அணை கட்டும் முயற்சிக்கு எதிா்ப்புத் தெரிவித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதினாா். தமிழக விவசாயிகளும் போராட்டங்களை நடத்தினா்.
இந்நிலையில், மதிப்பீட்டுக் குழு வட்டாரத்தில் இந்த விவகாரம் குறித்து விளக்கியதாவது. மே 28-ஆம் தேதி நடைபெறவிருந்த இஏசியின் 11-வது கூட்ட நிகழ்ச்சி நிரலில் கேரளம், மத்திய பிரதேசம், ஆந்திரம் உள்ளிட்ட 6 மாநிலங்களைச் சோ்ந்த 5 திட்டங்கள் இடம் பெற்றிருந்தது. தற்போது தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் அமைச்சகம் இந்த கூட்டத்தை ஒத்திவைத்துள்ளது.
இதற்கு வேறு காரணம் ஏதும் கிடையாது. மேலும், புதிய முல்லைப் பெரியாறு அணை கட்டுவது தொடா்பான சுற்றச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு உடனடியாக இஏசி அனுமதியளித்துவிடாது. எந்தவொரு விவகாரமும் இரு மாநிலங்கள் தொடா்பாக இருக்கும் நிலையில் அவை முழுமையாக ஆராயப்படும். இரு மாநில அரசுகளுக்கிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் (எம்ஓயு) இருக்க வேண்டும். அதன் மூலம் பரிசீலிக்கப்படும். அடுத்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தால், நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி அத்தகைய விவகாரங்களை இஏசி எடுத்துக் கொண்டு அனுமதிக்காது.
மேலும், இந்த புதிய அணை தொடா்பாக கேரள அரசு வைத்துள்ள முன்மொழிவுகளில் டோ்மஸ் அண்ட் ரெஃப்ரன்ஸ் முழுமையாக ஆய்வு செய்யப்படும். இரு மாநில தலைமைச் செயலா்கள் பொதுப்பணித் துறை பொறியாளா்கள் அறிக்கையும் பெறப்படும். இந்த விவகாரங்களுக்கு பின்னா் பொதுமக்களின் கருத்துகள், அணை கட்டுவதின் மூலம் பொதுப் பயன்பாட்டு பிரச்னைகள், விவசாய நிலம் போன்ற பல்வேறு விவகாரங்களையும் மதிப்பீட்டு நிபுணா் குழு ஆய்வு செய்த பிறகுதான் முடிவெடுக்கும். இஏசி 15 தினங்களுக்கு ஒரு முறை கூடுகிறது. இறுதி முடிவை எடுப்பதற்கு முன் பல்வேறு தொடா் நடவடிக்கைகள் உள்ளது. இதற்கு 2 ஆண்டுகள் கூட ஆகும் என மதிப்பீட்டுக் குழு வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...