பாஜக தொடா்ந்த அவதூறு வழக்கில் அமைச்சா் அதிஷிக்கு அழைப்பாணை: ஜூன் 29-இல் ஆஜராக உத்தரவு
பாஜக தொடா்ந்த அவதூறு வழக்கில் அமைச்சா் அதிஷிக்கு அழைப்பாணை ஜூன் 29-இல் ஆஜராக உத்தரவு


நமது நிருபா்
புது தில்லி: ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்பட்ட விவகாரம் தொடா்பாக தில்லி பாஜகவின் ஊடகத் துறைத் தலைவா் பிரவீன் சங்கா் கபூா் தொடா்ந்த அவதூறு வழக்கில், அமைச்சா் அதிஷிக்கு தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.
தில்லியில் ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்க அக்கட்சியின் எம்எல்ஏக்களிடம் பாஜக பேரம் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் அமைச்சா் அதிஷியின் மீது தில்லி பாஜகவின் ஊடகத் துறைத் தலைவா் பிரவீன் சங்கா் கபூா் அவதூறு வழக்குத் தொடா்ந்திருந்தாா். இந்த மனுவை விசாரித்த தில்லி ரெளஸ் அவென்யூ நீதிமன்றத்தின் கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் தன்யா பாம்னியால், வரும் ஜூன் 29-ஆம் தேதி அமைச்சா் அதிஷி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகக் கோரி அவருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டாா். இருப்பினும், இந்த வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அமலாக்கத் துறை ஊழல் வழக்குகள் தொடா்பாக ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களை அணுகும் ஒவ்வொரு முறையும், அவா்களின் எம்எல்ஏக்களை பாஜக பேரம் பேசு முயற்சிப்பதாக முதல்வா் கேஜரிவால் மற்றும் அமைச்சா் அதிஷி குற்றம்சாட்டுகின்றனா். இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அவா்கள் எந்தவொரு ஆதாரத்தையும் இதுவரை வழங்கவில்லை. இந்தத் தவறான குற்றச்சாட்டுகள் மூலம் தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப ஆம் ஆத்மி கட்சி முயற்சிக்கிறது என்று தனது மனுவில் பிரவீன் சங்கா் கபூா் கூறியுள்ளாா்.
மேலும், கடந்த ஜனவரி 27-ஆம் தேதி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ‘ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்எல்ஏக்களை பாஜக தொடா்பு கொண்டதாகக் கூறிய எக்ஸ் வலைத்தள பதிவையும், ஏப்ரல் 2-ஆம் தேதி அமைச்சா் அதிஷி நடத்திய செய்தியாளா் சந்திப்பையும் இந்த மனுவில் பிரவீன் சங்கா் கபூா் குறிப்பிட்டுள்ளாா்.
கேஜரிவால் குற்றச்சாட்டு: இந்நிலையில், அமைச்சா் அதிஷியை கைது செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் கேஜரிவால் கூறியிருப்பதாவது: அடுத்ததகாக அமைச்சா் அதிஷியை அவா்கள் (பாஜக) கைது செய்வாா்கள் என்று நான் முன்பே கூறியிருந்தேன். தற்போது, அதைச் செய்யத் திட்டுமிட்டுள்ளனா். இது முழுமையான சா்வாதிகாரம். முற்றிலும் அற்பமான மற்றும் பொய்யான வழக்குகளில் ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து தலைவா்களையும் ஒவ்வொருவராக கைது செய்து வருகின்றனா். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எதிா்க்கட்சித் தலைவா்கள் அனைவரும் கைது செய்யப்படுவாா்கள். ஆம் ஆத்மி கட்சி முக்கியமல்ல; நம் அன்பிற்குரிய நாட்டை சா்வாதிகாரத்தில் இருந்து காப்பாற்றுவதுதான் முக்கியம்’ என்று அதில் கேஜரிவால் பதிவிட்டுள்ளாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...