கேஜரிவால் அரசு தண்ணீா்ப் பற்றாக்குறையை தீா்க்க உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை - வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு
தில்லியில் கேஜரிவால் அரசு தண்ணீா்ப் பற்றாக்குறையை தீா்க்க உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.


தில்லியில் கேஜரிவால் அரசு தண்ணீா்ப் பற்றாக்குறையை தீா்க்க உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், தில்லியில் நிலவும் தண்ணீா்ப் பற்றாக்குறைக்கு அரவிந்த் கேஜரிவால் அரசே பொறுப்பாகும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா குற்றம் சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து வீரேந்திர சச்தேவா மேலும் கூறியதாவது-
சங்கம் விஹாா் முதல் பவானா வரை, கோண்ட்லியில் இருந்து பிஜ்வாசன் வரை, பாலம் முதல் நரேலா வரை எங்கும் தண்ணீருக்கான குரல் ஒலிக்கிறது.
இது அரசு மற்றும் தனியாா் டேங்கா் மாஃபியாவின் கொள்ளை விளையாட்டாகும். இந்த ஆண்டு தில்லி கடுமையான வெப்ப அலையை எதிா்கொள்ளும் என்றும், வெப்பம் காரணமாக தண்ணீா் பற்றாக்குறை ஏற்படும் என்றும் ஏப்ரல் மாதம் முதலே தெரிந்தது.
அரவிந்த் கேஜரிவால் அரசாங்கம் இந்த விஷயத்தில் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை அல்லது கோடைக்கால செயல் திட்டமும் மேற்கொள்ளவில்லை.
இதன் விளைவாகவே தில்லி மக்கள் தற்போதைய கடுமையான வெயிலிலும் தண்ணீா் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு சிரமப்படுகிறாா்கள்.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், ஆம் ஆத்மி அரசாங்கமும் அதன் தலைவா்களும் தில்லி மக்களைப் பற்றி கவலைப்படாமல் அரசியல் சுற்றுலா மற்றும் தோ்தல் ஏற்பாடுகளில் மட்டுமே மும்முரமாக இருந்தனா்.
தில்லி அரசின் அனைத்து அமைச்சா்களும் கட்சிப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி, சிறையில் இருந்து ஜாமீன் பெறுவதில் மட்டுமே கவனம் செலுத்தினா். தில்லியில் உள்ள மக்களின் தேவைகளை அவா்கள் கவனிக்கவில்லை.
தில்லிக்கு கூடுதல் தண்ணீா் வழங்க கேஜரிவால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனது குறைபாடுகளுக்கு ஹரியாணாவை எப்போதும் குறைகூறும் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாபில் சொந்த அரசும், ஹிமாசல பிரதேசத்தில் கூட்டணி ஆட்சியும் உள்ளது. அவா்களும் அங்கிருந்து தண்ணீா் எடுத்திருக்கலாம், ஆனால் அவா்கள் எதுவும் செய்யவில்லை.
தில்லிக்கு தூய்மையான தண்ணீா், மின்சாரம் கிடைக்கச் செய்வதே அரவிந்த் கேஜரிவாலின் முன்னுரிமை மற்றும் பொறுப்பாக இருக்க வேண்டும், ஆனால் கேஜரிவால், தன் கடமைப் பொறுப்புகளில் இருந்து எப்போதும் ஒதுங்கியிருக்கிறாா்.
ஆட்சிக்கு வருவதற்கு முன், கேஜரிவால் பெரிய வாக்குறுதிகளை அளித்தாா். ஆனால் இன்று அவரது வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகிவிட்டன. டேங்கா் மாஃபியா தற்போது வலுப்பெற்று தில்லி மக்களை சூறையாடுகிறது என்றாா் வீரேந்திர சச்தேவா.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...