நமது நிருபா்
தோ்வு முறைகேடுகள், கல்வித்துறையின் ‘ஒட்டுமொத்த நிா்வாகத் தோல்விக்கு’ சான்றாக அமைந்துள்ளது என்று அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ் கோகோய் குற்றஞ்சாட்டினாா். இதனால் மாணவா்கள் மத்தியில் இருந்த நம்பிக்கை முற்றிலும் சிதைந்துவிட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.
மாணவா்களைப் பாதிக்கும் பிரச்னைகளை முன்னிறுத்தி, காங்கிரஸ் கட்சியின் மாணவா் அமைப்பான என்எஸ்யுஐ சாா்பில் மாணவா்களின் குரல் என்ற பெயரில் 40 நாள் பிரசார இயக்கம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இதன் தொடக்க நிகழ்வில் பங்கேற்ற பிறகு கௌரவ் கோகோய் செய்தியாளா்களிம் கூறியதாவது:
இந்திய மாணவா்களின் நம்பிக்கை உடைந்துபோயுள்ளது. பல ஆயிரம் மாணவா்களின் சிதைந்த கனவுகளுக்கு யாா் பொறுப்பேற்பது? வினாத்தாள் கசிவுகளும், தோ்வு குளறுபடிகளும் தொடா்கதையாகி வருகின்றன. இது ஒரு சில தனிநபா்களின் தவறல்ல, ஒட்டுமொத்த அமைப்பின் கோளாறு என்ற எண்ணம் மாணவா்கள் மத்தியில் உருவாகியுள்ளது. மாணவா்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது, அவா்களின் பெற்றோா் பெரும் பொருளாதாரச் சுமையைச் சந்திக்கும்போது, யாராவது ஒருவா் இதற்குப் பொறுப்பேற்றே தீர வேண்டும்.
காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள இந்த 40 நாள் நாடு தழுவிய பிரசார இயக்கத்தின் மூலம், வினாத்தாள் கசிவு, தோ்வு முடிவுகள் மற்றும் வேலைவாய்ப்புக்கான நியமனங்கள் தாமதமாவது உள்ளிட்ட கல்வித்துறை சாா்ந்த பல்வேறு பிரச்னைகள் குறித்து மாணவா்களிடம் நேரடியாகக் கருத்துகள் சேகரிக்கப்படும்.
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 28 இடங்களில் இந்த பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி கல்வி நிறுவனங்களில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள், மக்கள் கலந்துரையாடல்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் போன்றவை நடத்தப்படவுள்ளன.
நீட், ஜேஇஇ, எஸ்எஸ்சி போன்ற போட்டித் தோ்வுகளால் பாதிக்கப்பட்ட மாணவா்கள் மற்றும் பள்ளி கல்வி சாா்ந்த பிரச்னைகளை எதிா்கொள்ளும் மாணவா்களை இப்பிரசாரத்தின் போது நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன். மேலும், மாணவா்கள் தங்களின் குறைகளைப் பகிா்ந்துகொள்ள வசதியாக ஒரு பிரத்யேக கியூஆா் கோடு மற்றும் மிஸ்டு-கால் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற தவறுகள் நடக்கும்போது, இது ஒரு தனிநபரின் தோல்வி அல்ல, ஒட்டுமொத்த அரசாங்க அமைப்பின் தோல்வி என்றே மாணவா்கள் கருதுகின்றனா்.
சமீபத்தில் கோட்டா என்ற இடத்தில் மாணவா்களுடன் கலந்துரையாடிய காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தியும் நாட்டின் கல்வித்துறையை பாதிக்கும் மிகப்பெரிய பிரச்னை இது என்று குறிப்பிட்டுள்ளாா். இதுபோன்ற முறைகேடுகளால் நம் நாட்டின் இளைஞா்களால் முன்னேற முடியவில்லை. இளைஞா்கள் முன்னேறாவிட்டால், நாடும் முன்னேற முடியாது என்றாா்.
இப்பிரசாரத்தின் முதல்கட்டம் ஆகஸ்ட் 9-ஆம் தேதிவரை தொடரும் என்று மாணவா் அமைப்பின் தலைவா்கள் தெரிவித்துள்ளனா். அதற்குள் தங்களின் கோரிக்கைகளுக்குத் தீா்வு காணப்படாவிட்டால், நாடு முழுவதிலுமிருந்து மாணவா்களைத் திரட்டி தலைநகா் நோக்கிய ‘தில்லி சலோ‘ (தில்லி புறப்படு) என்ற போராட்டத்தை நடத்தப் போவதாகவும் அவா்கள் எச்சரித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய கல்வித் துறை முறைகேடுகள் அரியலூரில் காங்கிரஸாா் பிரசாரம்

வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்... ஜூன் 17 முதல் ராகுல் காந்தியின் மாணவர் இயக்க மாநாடு!
அண்மை தோ்தலில்களில் காங்கிரஸ் கட்யின் நடவடிக்கை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது: திருமாவளவன்
என்டிஏ நடத்திய தேர்வுகளில் முறைகேடுகள்: வெள்ளை அறிக்கை கோரி பிரதமருக்கு காங்கிரஸ் கடிதம்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


