ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்... ஜூன் 17 முதல் ராகுல் காந்தியின் மாணவர் இயக்க மாநாடு!

தேர்வு முறைகேடுகள், வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக ராகுல் காந்தி தொடங்கும் மாணவர்களுக்கான இயக்கம் பற்றி....

Rahul Gandhi will conduct a series of large student conventions starting with Kota June 17

கேரளத்தில் மாணவிகளுடன் ராகுல் காந்தி (கோப்புப் படம்) - ANI

Published On :

வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள், வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்கள், தேர்வர்கள் மற்றும் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களை ஒன்றுதிரட்டி மிகப்பெரிய போராட்ட இயக்கத்தை முன்னெடுக்க உள்ளார்.

நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டு வருகிற ஜூன் 21 ஆம் தேதி நீட் மறுதேர்வு நடைபெற உள்ளது. இதேபோல நாடு முழுவதும் பல்வேறு அரசு மற்றும் மேற்படிப்புக்கான பொதுத் தேர்வுகளில் முறைகேடுகள் நடக்கின்றன. அதேபோல நாட்டில் வேலைவாய்ப்பின்மையும் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

எனவே, வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள், வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்கள், தேர்வர்கள் மற்றும் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களைத் திரட்டி ஜூன் 17 முதல் மிகப்பெரிய இயக்கத்தை முன்னெடுக்கிறார். இதற்காக நாடு முழுவதும் அவர் பல்வேறு பகுதிகளில் மாநாடுகளை நடத்த உள்ளார்.

நீட் தேர்வு பயிற்சி மையம் அதிகமுள்ள ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஜூன் 17-ல் முதல் மாணவர் மாநாடு நடக்க உள்ளது.

தொடர்ந்து ஜூலை 10ல் உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் (பிரயாக்ராஜ்)

ஜூலை 11 - பிகார் மாநிலம் பாட்னா  

ஜூலை 14 - தேசியத் தலைநகர் தில்லியில் ராகுல் காந்தி தலைமையில் மிகப்பெரிய மாநாடு நடைபெற உள்ளது. இதில் தேர்வர்கள், இளைஞர்கள் அனைவரும் பெருவாரியாக கலந்துகொள்வார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அமைப்புச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வழிகாட்டுதலின் கீழும், ராகுல் காந்தியின் ஊக்கமளிக்கும் தலைமையின் கீழும், கேள்வித்தாள் கசிவுகள், தேர்வு முறைகேடுகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் இந்திய இளைஞர்களை மோடி அரசு முறையாக ஏமாற்றி வரும் நிலைக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெறவுள்ள முதல் கட்டப் போராட்ட இயக்கத்தை இந்திய தேசிய காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இந்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளுக்காக மிகவும் தொடர்ந்து, நம்பகத்தன்மையுடன் குரல் கொடுத்து வரும் தலைவராக உருவெடுத்துள்ள ராகுல் காந்தி, மாணவர்களுக்கான மாபெரும் மாநாடுகளை நடத்த உள்ளார்.

இம்மாநாடுகள் கோட்டாவில் (ஜூன் 17) அலகாபாத்தில் (ஜூலை 10), பாட்னாவில் (ஜூலை 11) மற்றும் தில்லியில் (ஜூலை 14) நடைபெறவுள்ளன.

இதில் மாணவர்கள், போட்டித் தேர்வு எழுதும் இளைஞர்கள், இளைஞர் அமைப்புகள், கல்வியாளர்கள் மற்றும் தேர்வு முறைகேடுகளால் நேரடியாக பாதிக்கப்பட்ட அனைவரும் பங்கேற்பார்கள்.

கேள்வித்தாள் கசிவுகள், அதிகரித்து வரும் தேர்வுக் கட்டணங்கள் மற்றும் நியாயமான, வெளிப்படையான ஆட்சேர்ப்பு மற்றும் கல்வி அமைப்பை உறுதி செய்ய அரசாங்கம் தவறியதன் காரணமாக, கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதை இந்த இயக்கம் எடுத்துக்காட்டும்.

இந்த நாடு தழுவிய இயக்கத்தின் ஒரு பகுதியாக, மாணவர்களை பெருமளவில் திரட்ட வேண்டும் என்றராகுல் காந்தியின் அழைப்பை காங்கிரஸ் கட்சி மீண்டும் வலியுறுத்தும்.

இதற்காக தேசிய மாணவர் சங்கம், இந்திய இளைஞர் காங்கிரஸ், மாநில காங்கிரஸ் கமிட்டிகள் , மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் மற்றும் உள்ளூர் அமைப்புகள் மூலமாக விரிவான மக்கள் சேர்க்கைப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

நேரடி மற்றும் டிஜிட்டல் அழைப்புகள், கல்லூரி வளாகப் பிரசாரங்கள், பயிற்சி மையங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் மற்றும் இளைஞர்கள் அதிகம் கூடும் இடங்களில் கலந்துரையாடல்கள், சமூக ஊடக இயக்கங்கள், நேரலை ஒளிபரப்புகள் மற்றும் மாணவர்களுடன் நேரடி தொடர்புகள் ஆகியவை மிகப்பெரிய அளவில் மேற்கொள்ளப்படும்.

இந்திய இளைஞர்களின் கனவுகளும் ஆசைகளும் ஊழல், திறமையின்மை அல்லது அரசியல் அலட்சியத்தால் பலியாகக் கூடாது என்ற ராகுல் காந்தியின் உறுதியை பிரதிபலிக்கும் வகையில், இந்த இயக்கம் அரசியல் சார்புகளைத் தாண்டி மாணவர்களை ஒன்றிணைத்து, தேர்வு முறைகேடுகள் மற்றும் கேள்வித்தாள் கசிவு விவகாரங்களால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், மீண்டும் மீண்டும் நடைபெறும் இத்தகைய தோல்விகளுக்குப் பொறுப்பேற்க வலியுறுத்தவும் ஒரு தளத்தை உருவாக்கும்.

இந்த இயக்கம், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த கோரிக்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும்.

அவை:

• நீட் தேர்வை மையமற்ற முறையில் நடத்துதல்

• தேர்வுக் கட்டணங்களை முழுமையாக ரத்து செய்தல்

• கேள்வித்தாள் கசிவு கும்பல்களில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பது

• அரசின் உயர்மட்ட அதிகாரிகள் வரை பொறுப்பேற்கச் செய்வது

• மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பதற்கான கோரிக்கை

இந்த பிரச்னைகளை தொடர்ந்து எழுப்பி வந்துள்ள ராகுல் காந்தி , திறமை, நியாயம் மற்றும் இளைஞர்களுக்கான சம வாய்ப்புகளைப் பாதுகாப்பதை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அவசரமான பிரச்சினையாக மாற்றியுள்ளார்.

எனவே, இந்திய இளைஞர்கள் எதிர்கொண்டு வரும் இந்த நெருக்கடியைப் பற்றி நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தும்.

மேலும், இளைஞர்களின் நலன், உரிமைகள் மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாக்க தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Story image

Summary

Rahul Gandhi will conduct a series of large student conventions starting with Kota June 17

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.