தில்லி அரசின் புதிய மின்வாகன (இவி) கொள்கையின் கீழ் பதிவு செய்யப்படும் முதல் 1,000 மின்சார நடுத்தர ரக (என்2 பிரிவு) லாரிகளுக்கு, தில்லியின் ‘நோ என்ட்ரி‘ (எல்லைக்குள் நுழையும் அனுமதி) நேரக் கட்டுப்பாடுகளில் இருந்து 10 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்படவுள்ளது. வணிகப் போக்குவரத்தைப் புகையில்லா தூய்மையான வாகன அமைப்புக்கு விரைவாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய கொள்கையின்படி, இந்த மின்வாகனக் கொள்கை அறிவிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் வாங்கப்படும் முதல் 1,000 ’என்2’ ரக மின்சார லாரிகளுக்கு மட்டுமே இந்தச் சிறப்புச் சலுகை பொருந்தும்.
இந்த விலக்கின் மூலம், போக்குவரத்து நெரிசல் மேலாண்மை, முக்கிய நிகழ்வுகள் அல்லது மாசுப்பாட்டைக் கட்டுப்படுத்தும் அவசரகாலக் கட்டுப்பாடுகள் காரணமாகப் பிற சரக்கு வாகனங்கள் நகருக்குள் நுழையத் தடை விதிக்கப்படும் நேரங்களிலும், இந்த மின்சார லாரிகள் எவ்வித தடையுமின்றி தில்லிக்குள் இயங்க அனுமதிக்கப்படும்.
என்2 ரக வாகனங்கள்? இந்த ரக வாகனங்கள் என்பது 3.5 டன் முதல் 12 டன் வரையிலான மொத்த எடையைக் கொண்ட நடுத்தர ரக சரக்கு வாகனங்கள் ஆகும். இவை பொதுவாக தில்லி நகருக்குள்ளும், அதன் அருகிலுள்ள பகுதிகளுக்கும் வணிகப் பொருட்கள், தொழிற்சாலைப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் மற்றும் பிற சரக்குகளை ஏற்றிச் செல்லப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
அரசு அறிவித்துள்ள இந்தச் சிறப்புச் சலுகை, தற்போதைய டீசல் லாரிகளுக்குப் பதிலாக மின்சார லாரிகளைப் பயன்படுத்த லாரி உரிமையாளா்களையும் நிறுவனங்களையும் பெருமளவில் ஊக்குவிக்கும் என்று தில்லி அரசு எதிா்பாா்க்கிறது.
இது குறித்து முதல்வா் ரேகா குப்தா கூறுகையில், தில்லி அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட இப்புதிய கொள்கை, துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்குப் பிறகு வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்றாா். மேலும், வரும் 2030 மாா்ச் 31-க்குள் தில்லி நகரை முற்றிலும் மாசு இல்லாத நகரமாக மாற்றுவதற்கான மிக முக்கியப் அடியாக இது இருக்கும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விதிகளை மீறி இயக்கப்பட்ட கனிமவள லாரிகளுக்கு அபராதம்

அக்டோபருக்குள் தடையற்ற சுங்கவரி வசூல் முறை: கூடுதல் அதிகாரம் கேட்டு மாநகராட்சி கூட்டத்தில் தீா்மானம்






