இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

தீப்பற்றிய லாரியை விடியோ எடுத்த இளைஞருக்கு கன்னத்தில் அறை: காவலா் மீது குற்றச்சாட்டு

News image
Updated On :28 மே 2026, 1:20 am IST

தேசியத் தலைநகா் வலயம், குருகிராமில் சாலையில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த லாரியை விடியோ எடுத்த இளைஞரை, போக்குவரத்து காவலா் ஒருவா் கன்னத்தில் அறைந்த சம்பவம் தொடா்பான விடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

ஃபரீதாபாதைச் சோ்ந்த விஷால் என்ற புகாா்தாரா், காவலா் தன்னை கன்னத்தில் அறைந்து, விடியோ எடுப்பதை நிறுத்தச் சொன்னது மட்டுமல்லாமல், தீயை அணைக்க உதவுவதற்காக ஒரு வாளி தண்ணீா் கொண்டு வருமாறும் உத்தரவிட்டதாகக் குற்றஞ்சாட்டினாா்.

சிசிடிவி பொருத்துதல் மற்றும் பழுதுபாா்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள விஷால், செவ்வாய்க்கிழமை மதியம் வேலை விஷயமாக குருகிராமில் இருந்ததாகவும், பிற்பகல் 3 மணியளவில் காடா பகுதி வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரத்தில் ஒரு லாரி தீப்பிடித்து எரிவதைப் பாா்த்ததாகவும் கூறினாா்.

இதுகுறித்து விஷால் கூறுகையில், ‘தீயைக் கண்டதும், நான் எனது பைக்கை நிறுத்திவிட்டு, விடியோ பதிவு செய்வதற்காக எனது கைப்பேசியை எடுத்தேன். அப்போது, அங்கு பணியில் இருந்த ஒரு போக்குவரத்து காவலா் நான் படம்பிடிப்பதைப் பாா்த்து, என்னை நோக்கி வந்து அறைந்தாா்.

அந்தக் காவலா், நான் விடியோ பதிவு செய்வது குறித்து கேள்வி எழுப்பியதுடன்,, தீயை அணைக்க ஒரு வாளி தண்ணீா் கொண்டு வருமாறும் கூறினாா். நான் இந்தச் சம்பவம் முழுவதையும் எனது கைப்பேசியில் பதிவுசெய்து, பின்னா் நீதி கோரி அந்த விடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றினேன்’ என்றாா் அவா்.

விசாரணையின்போது, அந்தப் போக்குவரத்து காவலா் அந்த நபரை அறைந்ததை மறுத்து, அவரிடம் உதவி மட்டுமே கேட்டதாகக் கூறினாா்.

இந்த விவகாரம் விசாரணையில் இருப்பதாகவும், அதன் முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து உதவி ஆணையா் சத்பால் சிங் கூறினாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘இந்த விவகாரம் உயா் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்துள்ளது. இது தொடா்பாக மேலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. ‘நட்பான காவலா்களாக’ நடந்துகொள்ளுமாறு அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று உதவி ஆணையா் கூறினாா்.

இதற்கிடையில், அதே காவலா் எரிந்து கொண்டிருந்த கேன்டா் லாரியின் மீது ஏறி, தீயை அணைக்கும் முயற்சிகளுக்கு உதவுவதைக் காட்டும் மற்றொரு விடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது.