/

DIN

கீதா ஸாரம் -  பேரா. க. மணி;  பக். 488; ரூ. 600;  அபயம் பப்ளிஷர்ஸ், கோவை - 15; 90956 05546. 

ஸ்ரீமத் பகவத் கீதைக்கு சங்கரரின் காலந்தொட்டு ஏராளமான விளக்கவுரைகள் இருக்கின்றன;  ஒவ்வொருவரும் உணரும் அனுபவம்  சார்ந்து இன்னும் வந்துகொண்டேதான் இருக்கும்.

பகவத் கீதையின் கருத்துப் பிழிவான இந்த நூலில், அத்வைத நெறி மீறிய விளக்கங்களால் ஒரு பயனும் இல்லை என்று குறிப்பிடும் நூலாசிரியர், நானே பிரம்மம் ஜகத்காரணம் என்கிற தெளிந்த அத்வைத ஞானமே முக்தி; முக்திக்கான நெறியைப் புகட்டும் ஸ்மிருதிதான் கீதை என்று அறிமுகப்படுத்துகிறார்.

கீதையின் பதினெட்டு அத்தியாயங்களும் ஒவ்வொன்றாக எடுத்துக்கொள்ளப்பட்டு, நல்ல அறிமுகத்துடன் விரிவாக விளக்கப்படுவதுடன் சாரமான விஷயங்களும் எளிய மொழியில்  (பண்புகளை இழந்து பணம் சேர்ப்பது, கண்களை விற்று டி.வி. வாங்கியது போன்றது) தெளிவுபடுத்தப்படுகிறது.

நூலில் கீதையின் வரிகளில் குறிப்பிட்ட சம்ஸ்கிருத சொற்களைத் தனித்தனியே விளக்குவதுடன்  தேவைப்படுகிற இடங்களில் ஸ்லோகங்களும் அப்படியே தரப்படுகின்றன (கடமைக்கேற்ற பலனை என் நியதிகள் வழங்கியே தீரும் - ந விநாசஸ்த, ந துர்கதிம் 6:40).

ஞானகர்ம ஸந்நியாஸ யோக விளக்கத்தில் கிருஷ்ணரின் சொற்களை வைத்துக் கொண்டு அவதாரம் பற்றிய விவரணம் மிகச் சிறப்பு.  இதேபோல குண விசேஷம், சிரத்தை என முக்கியமான பல விஷயங்களைப் பற்றிய விளக்கங்களும் குறிப்பிடத்தக்கவை.

நூலின் இணைப்பாகப் பின்பகுதியில் பகவத் கீதையின் ஸ்லோகங்கள் முழுமையாகத் தமிழ் எழுத்துகளில் தரப்பட்டிருப்பது வாசகர்களுக்கு உடனுக்குடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் படிக்கவும் உதவியாக இருக்கும்.

தயானந்த சரஸ்வதி, குருபரானந்தர் வழியில், அத்வைத நெறிப்படி பகவத் கீதையை விளங்கிக் கொள்வதற்கான,  கீதையை மேலும் அறிந்துகொள்ள உதவக்கூடிய சிறப்பான நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.