உ.வே.சாமிநாதையரின் என் சரித்திரம் (தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்)-அனந்தசாய்ராம் ரங்கராஜன்; பக். 176; ரூ. 200; சுவாசம் பதிப்பகம், சென்னை- 600 127, ✆ 81480 66645.
சிதிலமடைந்த சுவடிகளில் மறைந்திருந்த பழந்தமிழ் நூல்களைத் திரட்டிப் பதிப்பித்து உலகறியச் செய்த சிறந்த ஆராய்ச்சியாளர் உ.வே.சாமிநாதையர்.
தமிழ்த் தாத்தாவின் தன் வரலாறு என்பது ஒரு தனிமனிதனின் வாழ்க்கைச் சம்பவங்களின் தொகுப்பு மட்டுமல்ல. 19-ஆம் நூற்றாண்டுச் சமூக நிலை, உறவு முறைகள், தமிழ்க் கல்வி முறை, திருவாவடுதுறை ஆதீனம் போன்ற சைவத் திருமடங்களின் சமூகத் தொண்டு, தமிழ்த் தொண்டு, மக்களின் பழக்க வழக்கங்கள் இவற்றின் சரித்திரமும்கூட.
மூல நூலின் சுவையும் விவரங்களும் குறையாமல், தொடர்ச்சி குன்றாமல் முக்கியப் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து தொகுத்திருப்பது பாராட்டத்தக்கது.
சுவடிகளைத் தேடிப் பல ஊர்களுக்குப் போகும்போது, 'பல வித்துவான்கள் வீடுகளைப் பார்த்தேன்; வித்துவான்கள் பலர் வறுமையால் வருந்துவதைக் கண்டு மிக வருந்தினேன்' என்று உ.வே.சா. எழுதும்போது அவரது உள்ளமும் அன்றைய தமிழுலகமும் காணக் கிடைக்கின்றன.
அவருடைய தமிழாசான் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை மறைவு குறித்து எழுதியுள்ள அத்தியாயத்தில் அவரது வாழ்வின் இறுதித் தருணங்களை வாசிக்கும்போது எவர் கண்களும் நனைவது நிச்சயம்.
உ.வே.சா. தனது ஆராய்ச்சி தொடங்குவதற்கு முன்பே சீவக சிந்தாமணி குறித்து பல தமிழ் அறிஞர்களுக்குத் தெரிந்திருந்தாலும் பல இடங்களில் கிடைத்த ஓலைச்சுவடிகளை ஒப்புநோக்கி செய்யுட்குறிப்பு, உரை, நூலாசிரியர் வரலாறு முதலியவற்றுடன் செம்பதிப்பாக முதலில் அச்சில் வெளியிட்டது அவர்தான்.
போக்குவரத்து, அச்சு வசதிகள் இல்லாத அந்நாளில், பல மாத அலைச்சல், உழைப்பு கனிந்து, நிறைவாகத் தனது 32-ஆவது வயதில் சீவக சிந்தாமணியைப் பதிப்பித்துள்ளார்.
கடைச்சங்க காலத்தைச் சேர்ந்த எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றின் பல்வேறு ஏட்டுச் சுவடி பிரதிகளையும் ஆராய்ந்து செம்பதிப்பாக அவர் பதிப்பித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










