மொழியின் நிழலில்- முனைவர் மலையமான்; பக். 256; ரூ. 300; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-600 021, ✆ 93805 30884.
இந்த ஆய்வு நூல், உலகின் முதன்மொழி தொடங்கி, இலக்கணத்தை எளிமை நிலையில் கற்பித்தல் ஈறாக மொத்தம் 36 தலைப்புகளில் தமிழின் பெருமைகள், வளமை, பழைமை, அது உயர்தனிச் செம்மொழியாக நிலைத்த தன்மைகள் என விரிவாக கூறப்பட்டுள்ளது.
தமிழ் மொழியை எட்டாம் அதிசயம் என்கிறார் கவிக்கோ அப்துல் ரகுமான். தமிழ்மொழி, ஒளி தரும் சூரியனை ஒத்த மொழி. இது அறிவியல் அடிப்படையில் அமைந்த மொழி. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றினாலும் இளமையோடு இருக்கும் மொழி. பக்தி இலக்கியப் பட்டியலில் தலைமை வகிக்கும் மொழியாக விளங்குகிறது.
உலகின் முதல் மொழியாகவும் ஆதி மொழியாகவும் தமிழ்மொழி விளங்கியதை தரவுகளுடன் எழுதியுள்ளார். பல்வேறு ஆய்வு அறிஞர்களின் மேற்கோள்களும் காட்டப்பட்டுள்ளன.
'வையம் ஈன்ற தொன்மக்கள் உளத்தினைக் கையினால் உரைகாலம் இரிந்திடப் பைய நாவை அசைத்த பழந்தமிழ் ஐயை தாள்தலைக் கொண்டு பணிகுவாம்' மேற்சொல்லப்பட்ட பாடல் தமிழ் மிகமிகத் தொன்மையான மொழி, அது உலக முதல்மொழி என்ற கருத்தை நிலைநிறுத்துகிறது.
இயற்கை மொழியாக இருந்து அது செவ்வியல் மொழியாக வளர்ந்த தன்மைகள், இந்தியா முழுவதும் தமிழ் பரவி இருக்கும் விதம், உலகமொழியாக நிறுவுவதற்கு தமிழ் கொண்டிருக்கிற தனித் தகுதிகள், புதிய திராவிட மொழிகள், அயலகத்தில் தமிழ், மராத்தி மொழியில் தமிழ் சொற்கள், கிரேக்கமும் தமிழும், தொல்காப்பியத்தில் சொல்லப்பட்ட 'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' குறித்த விளக்கங்கள், திருவள்ளுவர் படைத்த புதிய சொற்கள், சொல் ஆராய்ச்சியில் விளைந்த புதிய கண்டுபிடிப்புகள், தமிழுடன் பிற செவ்வியல் மொழிகளுடனான ஒப்பீடு ஆய்வுகள் என இந்த நூலை மிகச் சிறந்த மொழி ஆய்வு நூலாக ஆக்கித்தந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









