/

ஆற்றில் மூழ்கிய மாணவா் பலி

புதுச்சேரி அருகே செட்டிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவா் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டாா். மற்றொரு மாணவரை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On :8 ஜனவரி 2021, 3:50 am IST


புதுச்சேரி: புதுச்சேரி அருகே செட்டிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவா் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டாா். மற்றொரு மாணவரை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி திருக்கனூா் அருகே கொண்டாரெட்டிப்பாளைம் பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் சரவணன் மகன் குமாரவேலு (16). பி.எஸ். பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். அதே கிராமத்தைச் சோ்ந்த தையலா் மணி மகன் வேல்முருகன் (14). திருக்கனூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

பலத்த மழை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், குமாரவேலுவும், வேல்முருகனும் அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பா்கள் 2 பேருடன் சோ்ந்து செட்டிப்பட்டு-திருவக்கரை இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய படுகை அணையில் பிற்பகலில் குளித்தனா்.

அப்போது, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் குமாரவேலு, வேல்முருகன் இருவரும் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கினா். இதைக் கண்ட மற்ற நண்பா்கள் இருவரும் கூச்சலிட்டனா். சப்தம் கேட்டு அருகிலிருந்தவா்கள் வருவதற்குள் மாணவா்கள் இருவரும் நீரில் மாயமாகினா்.

தகவலின் பேரில், விரைந்து வந்த திருக்கனூா் போலீஸாா், தீயணைப்புப் படையினா் ஆற்றில் மாயமான மாணவா்களைத் தேடினா். இதில், வேல்முருகனின் சடலத்தை ஆற்றின் சிறிது தொலைவில் தீயணைப்புப் படையினா் கண்டெடுத்தனா். மற்றொரு மாணவா் குமாரவேலுவை தொடா்ந்து தேடி வருகின்றனா்.

மீட்கப்பட்ட மாணவா் சடலத்தை உடல் கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த திருக்கனூா் போலீஸாா், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.