தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

அர்ச்சகர்கள் இல்லாததால் ஏரிகாத்த ராமர் கோயில் சந்நிதிகள் மூடல்

மதுராந்தகம் நகரின் முக்கிய வைணவ திருக்கோயிலான ஏரிகாத்த ராமர் கோயிலில் திருப்பணிகளை செய்ய உரிய அர்ச்சகர்கள் இல்லாததால், பெரும்பாலான சந்நிதிகள் மூடியே இருக்கின்றன.

Updated On :27 ஏப்ரல் 2014, 10:51 pm

மதுராந்தகம் நகரின் முக்கிய வைணவ திருக்கோயிலான ஏரிகாத்த ராமர் கோயிலில் திருப்பணிகளை செய்ய உரிய அர்ச்சகர்கள் இல்லாததால், பெரும்பாலான சந்நிதிகள் மூடியே இருக்கின்றன.

வரலாற்றிலும், புராணங்களிலும் சிறப்பிடம் பெற்ற மதுராந்தகத்துக்கு இன்னும் பல வரலாறுகள் உள்ளன.

இங்கு அருள்பாலித்து வருகிற பகவான் கோதண்டராமருக்கு ஏரிகாத்தராமர் என்றொரு பெயர் உண்டு. வைணவ ஆச்சாரியரான ஸ்ரீராமானுஜருக்கு இந்த மதுராந்தகத்தில்தான், அவரது குருஸ்ரீ பெரிய நம்பிகள் மூலமாக பஞ்ச சமஸ்கார உபதேசம் பெற்றார்.

அவரது உபதேசத்தில் அஷ்டாச்சரம், த்வயம் சரமஸ்லோகம் போன்றவை தெரிவிக்கப்பட்டு இருந்தது.

த்வயம் என்ற மந்திரம் சிறப்புடன் உபதேசிக்கப்பட்டதால், த்வயம் விளைந்த திருப்பதி என்றும், சதுர்வேதி மங்கலம், வகுளாரண்யம் போன்ற சிறப்பு பெயர்களால் மதுராந்தகம் நகரம் அழைக்கப்படுகிறது.

சோழ மண்டலத்தை, ராஜராஜ சோழனுக்கு முன்னால் ஆண்ட, உத்தம் சோழன் என அழைக்கப்படுகிற மதுராந்தக சோழனால், வேதம் ஓதும் அந்தண பெருமக்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட நகரமே மதுராந்தகம். இதற்கு சதுர்வேதிமங்கலம் என்ற பெயர் வழங்கப்படலாயிற்று.

இக் கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில், இயங்கி வருகிறது.

எங்கும் இல்லாத, விபண்டக மகரிஷி வேண்டிக் கொண்டதன்பேரில், ஸ்ரீ ராமபிரான் சீதாதேவியின் கையைப் பிடித்துக் கொண்டு, திருக்கல்யாணக் கோலத்தில் இக்கோயிலின் கருவறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

ஆங்கிலேயர் காலத்தில் செங்கை ஆட்சியரான பிளேஸ்துரையிடம் ஊர்மக்கள் "ஆண்டுதோறும், இவ்வூர் ஏரி நீர் நிறைந்து உடைப்பெடுத்து, ஊருக்கு சேதம் விளைவிக்கிறது. பராமரிப்பு செய்து அதைச் சரி செய்ய வேண்டும்.

அதேபோல இங்குள்ள ஜனகவல்லி தாயார் சந்நிதியும் சேதம் அடைந்து உள்ளது. தாயாரின் கோபத்தினால் கூட இதுமாதிரி சம்பவங்கள் நடந்து இருக்கலாம்' என முறையிட்டனர்.

அதற்கு பிளேஸ்துரை, "இங்கு கோயில் கொண்டுள்ள ஸ்ரீராமபிரானும், ஜனகவல்லி தாயாரும் சக்தி உடையவர்களாக இருந்தால், ஏரி உடையாமல் பெரும் ஆபத்தில் இருந்து மக்களை காப்பாற்றட்டும்.

அதன் பிறகு, இந்த கோயிலின் திருப்பணிக்கு பெரும் உதவியை செய்து தருகிறேன்' என்றார்.

வில், அம்புடன் ஏரியை காத்த ராமர்: அதேபோல, அந்த ஆண்டு மழைக்காலத்தில் ஏரி நிரம்பி வழிந்தோடியது. எந்நேரமும் ஏரிக்கரை உடையலாம் என்ற பதற்றமான சூழ்நிலையில், பலத்த மழை, இடிமின்னல் பொருட்படுத்தாமல், அன்று இரவு ஏரியின் நிலைமையை அறிய பிளேஸ்துரை நேரில் சென்று பார்வையிட்டார்.

ஏரிக்கரையின் மீது நடந்து வந்த பிளேஸ்துரை, ஸ்ரீராமபிரான், தனது தம்பி லட்சுமணனுடன் ஏரிக்கரை உடையாமல், வில், அம்பு ஏந்தியபடி காத்து நிற்கும் அதிசயக் காட்சியை கண்டார்.

இந்த அதிசயம் அடங்கிய, பிளேஸ்துரை எழுதிய குறிப்புகளை, சென்னை ஆவணக் காப்பகத்தில் இன்றும் காணலாம்.

இவ்விதம் ஸ்ரீராமபிரான் ஊரை காப்பாற்றியதால், பிளேஸ்துரை, கோயிலுக்கு வந்து ஊர் மக்களுக்கு உறுதியளித்தபடி, ஜனகவல்லி தாயார் சந்நிதியைப் புதுப்பித்து திருப்பணி செய்தார்.

அர்ச்சகர்கள் இல்லை: இத்திருக்கோயிலில் கருடாழ்வார் சந்நிதி, கருவறை சந்நிதி, ஸ்ரீ ஆஞ்சநேயர் சந்நிதி, ஆண்டாள் சந்நிதி, ஸ்ரீராமானுஜர் சந்நிதி போன்ற சந்நிதிகள் உள்ளன.

இங்கு மொத்தம் 5 அர்ச்சகர்கள் உள்ளனர். அவர்களில் 2 பேர் வேறு கோயில் பணி கிடைத்ததால் சென்றுவிட்டனர்.

கடந்த ஆண்டு மே மாதம் சேஷாத்ரி என்ற அர்ச்சகர் பணி ஓய்வு பெற்றார். இருந்தபோதிலும், அவர் தினக்கூலி அடிப்படையில் தற்சமயம் பணியாற்றி வருகிறார். இவர் தவிர 2 அர்ச்சகர்களே உள்ளதால் இங்குள்ள அனைத்து சந்நிதிகளையுமே திறந்து வைக்க முடியவில்லை.

சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றம்: தற்சமயம் கோடை விடுமுறைக்காக, சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து முழுமையாக அனைத்து சந்நிதிகளையும் தரிசிக்க முடியவில்லை.

இக்கோயிலுக்கு வருகிற பக்தர்கள் அங்குள்ள கோயில் செயல்அலுவலரிடம் முறையிட்டுள்ளனர்.

இதற்கு அவர் இதுவரை எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. அர்ச்சகர்கள் மட்டும் இங்கு குறைபாடு இல்லை.

நிரந்தர செயல் அலுவலரும் இல்லை: கடந்த 3 ஆண்டுகளாக அங்கு நிரந்தர செயல் அலுவலர் இல்லாமல், மாற்றுப் பணி செயல் அலுவலரைக் கொண்டு கோயில் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

அவர் இத்திருக்கோயிலுக்கு எப்போது வருவார் என்றே தெரியாத நிலை உள்ளது.

இது குறித்து கோயிலின் செயல்அலுவலர் பொறுப்பு வகிக்கும் வேதமூர்த்தியிடம் கேட்டபோது, "தேர்தல் பணி முடிந்த பின் அர்ச்சகர்கள் தேவை என நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டு, அந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது குறித்து மேல் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.