திருச்செந்தூர்: திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இத்திருவிழாவின் 10ம் நாளான தேரோட்டம் வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மற்றும் ஆவணி திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. இக்கோயிலில் பிரசித்தி பற்றி ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையட்டி அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடந்தது.
அதிகாலை 5 மணிக்கு அம்மனின் சன்னதிக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றும் வைபவம் துவங்கியது. இதையொட்டி கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு மேளதாளங்கள் முழங்க நடராஜவல்லவராயர் கொடியேற்றினார். கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் கொடிமரம் தர்பபைபுல் மற்றும் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டது. காலை 6.10 மணிக்கு கொடிமரத்திற்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வேதபாராயணம், தேவாரம், திருப்புகழ் பாடப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கோயில் விதாயகர்த்தா சிவசாமி சாஸ்திரிகள், கோயில் திருவிழா கிளார்க் பிச்சையா, சிவன் கோயில் மணியம் மது, அனைத்து வியாபாரிகள் சங்க பொருளாளர் கார்க்கி, வேலாண்டி ஒதுவார், அருணாச்சலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் அம்மன் காலை மற்றும் மாலையில் எழுந்தருளி வீதி உலா வந்து கோயிலை சேருகிறார். விழாவின் 10ம் நாளான(10ம் தேதி) தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் பரஞ்ஜோதி ஆகியோர் செய்தனர்.