பலவிதமான வழிபாடுகளுள் விரைவாக பலன் தருவதில் ஒன்று தான், அபிஷேகம். ஒவ்வொரு திரவியங்களுக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது. ஆனால் பொதுவாக எல்லோரும் பால் அபிஷேகம் செய்வதைத்தான் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
இறைவனுக்கு அந்தந்த பிரச்சனைகளுக்கு அந்தந்த திரவியங்களால் அபிஷேகம் செய்தால் நம் விருப்பங்கள் அதிசீக்கிரம் நிறைவேறும். பிரச்னைகளும் தீரும். அறிந்து கொள்வோம்
• இறைவனை நெய்யால் அபிஷேகம் செய்ய மனம் அமைதி பெற்று முக்தி கிடைக்க வழி வகுக்கும்.
• சுத்தமான பசும்பாலினால் அபிஷேகம் செய்ய ஆயுள் அதிகரிக்கும்.
• குடும்ப ஒற்றுமைக்கும், குதூகலத்திற்கும் இறைவனை இளநீரினால் அபிஷேகம் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
• நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்ய பிரச்னை தலையெடுக்காது
• அரிசி மாவினால் அபிஷேகம் செய்தால் கடன் தொல்லை தீரும்.
• சுத்தமான தண்ணீரால் அபிஷேகம் செய்ய காரிய சித்தி உண்டாகும்.
• கரும்புச்சாறு அபிஷேகம் பிணிகளை அகற்றி ஆரோக்கியம் நல்கும்.
• நல்ல பசுந்தயிரினால் அபிஷேகம் செய்ய குழந்தை பாக்கியம் உண்டாகும்.
• மனதில் தோன்றும் இனம் புரியா பயத்தை நீக்க எலும்பிச்சை சாற்றால் அபிஷேகம் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
• இறைவனுக்கு தேனாபிஷேகம் செய்தால் வாழ்வும் இனிமையாகும். குரலும் தேன் குரலாகும்.
• பஞ்சாமிருதத்தால் அபிஷேகம் செய்ய உடல் நலம் மட்டுமல்லாமல் செல்வமும் பெருகும். அதேபோல சந்தனத்தால் அபிஷேகம் செய்ய எட்டுவித செல்வங்களையும் அடையலாம்.
• பஞ்சகவ்யத்தால் அதாவது பசுவின் ஐந்து உப உற்பத்தியான பால், நெய், தயிர், சாணம், கோமியம் சேர்த்து அபிஷேகம் செய்ய பாவங்கள் கரைய உதவும்.
• நம்மை காக்கும் கடவுளுக்கு முதலில் தூய நீர், மஞ்சள் நீர், ஆகியவற்றில் நீராடிய பின் பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், பன்னீர், விபூதி ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெறுகிறது. இவைகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தத்துவம் இருக்கிறது
• தூய வாழ்கை வாழ வேண்டும் என்ற நமது எண்ணத்தை நீர் அபிஷேகத்தால் இறைவனிடம் வெளிப்படுத்துகிறோம்.
• மங்களமும், ஆரோக்கியம் பெருக வளம் கொண்ட வாழ்வைப் பெற மஞ்சள் அபிஷேகம் செய்யப்படுகிறது.
• களங்கமற்ற மனம் வேண்டி செய்யப்படும் அபிஷேகம் பாலாபிஷேகம்.
• தேயத்தேய சந்தனம் மணப்பது போல் பிறருக்காக உழைத்து, வாழ்க்கையில் தியாகம் புரிவதைக் குறிக்கும்.
• பன்னீரால் அபிஷேகம் செய்தால் பன்னீர் போன்ற தெளிவு பிறக்கும் என்பதைக் குறிக்கும்.
• விபூதி அபிஷேகம் செய்வது எதற்காக தெரியுமா? அதன் மூலம் நல்லதொரு தத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகில் என்னதான் அனுபவித்தாலும் இறுதியில் எல்லாம் ஒரு பிடி சாம்பல்தான் என்பதை விபூதி அபிஷேகம் உணர்த்துகிறது.
ஆகையால் நாம் என்ன செய்கிறோம்? எதற்காக செய்கிறோம் என்பதை புரிந்து கொண்டு செய்வது சாலச் சிறந்தது.
தொகுப்பு - மாலதி சந்திரசேகரன்