ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தில் வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இது 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோயிலாகும்.
மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் சூளைநோயால் அவதியுற்ற போது, இக்கோயிலின் வைத்தியநாதரை வழிபட்டு சூளைநோய் நீங்கப்பெற்றார். இத்தகைய பெருமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை அன்று ஆருத்ரா தரிசன உத்ஸவம் சிறப்பாக நடைபெறும். அது போல் இந்த ஆண்டு இன்று திருவாதிரையை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சந்தனகாப்பு சாத்தப்பட்டு ஆருத்ரா தரிசனம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நடராஜரை மாணிக்கவாசகர் எதிர்கொண்டு திருவெம்பாவை பாடல் பாடும் வைபவமும், அதனைத்தொடர்ந்து வீதி உலாவும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.