சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

திருப்பாவை - பாடல் 10

இந்த பாடல் கண்ணன் வசித்து வந்த திருமாளிகைக்கு

Updated On :24 டிசம்பர் 2016, 6:30 pm

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்


பாடியவர் பவ்யா ஹரி

விளக்கம்

இந்த பாடல் கண்ணன் வசித்து வந்த திருமாளிகைக்கு அடுத்த மாளிகையில் வாழும் சிறுமியை, நீராடலுக்கு அழைத்துச் செல்ல வந்த சிறுமியர்கள் பாடும் பாட்டாக கருதப்படுகின்றது. சென்ற பிறவியில் செய்த நல்வினைகளின் பயனாக, கண்ணனுக்கு அடுத்த வீட்டில் இருக்கும் பாக்கியத்தை பெற்றவளாக கருதப்படும் சிறுமியை அழைத்துச் செல்ல முனையும் பாடல்.

பொழிப்புரை

சென்ற பிறவியில் செய்த நல்வினைகளின் பயனாக இப்போது கண்ணனுக்கு மிகவும் அருகிலிருக்கும் வாய்ப்பினைப் பெற்ற பெண்ணே, நாங்கள் உனது இல்லத்து வாசலில் வந்து காத்திருக்கையில், வீட்டுக் கதவினைத் திறந்து எங்களை வரவேற்காமல் இருப்பதை நாங்கள் பொருட்படுத்தவில்லை; ஆனால் மறுமொழிகூட சொல்லாமல் இருக்கின்றாயே, ஏன் இந்த நிலை; நறுமணம் வீசும் துளசி மாலையை அணிந்துள்ள திருமுடியை உடைய நாராயணன், நாம் அவனைப் போற்றிப் பாடும் பாடல்களை கருத்தில் கொண்டு, நமக்கு அனைத்து விதமான செல்வங்களையும் அளிக்கின்றான். அந்த நாராயணன், ராமபிரானாக திருவவதாரம் எடுத்த போது, அவனிடம் தோற்று, கூற்றுவனின் வாயில் விழுந்த கும்பகர்ணன், உறக்கப் போட்டியில் உன்னிடம் தோற்று, தான் வரமாகப் பெற்ற தூக்கத்தினை உனக்கு தந்துவிட்டான் போலும்; அதனால் தான் நீ பொழுது விடிந்த பின்னரும் உறக்கத்தில் ஆழ்ந்துள்ளே போலும்; பெண்ணே, எங்களுக்கு கிடைத்த கரிய மாணிக்கமே, நீ தூக்கத்திலிருந்து விடுபட்டு, படுக்கையில் புரண்டுபடுத்ததால் கலைந்துபோன ஆடைகளை சரிசெய்துகொண்டு எங்களுடன் வந்து இணைவாயாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.