திருப்பாவை - பாடல் 4

நாம் எந்த செயல் செய்தாலும், இறைவனின் திருநாமத்தை
திருப்பாவை - பாடல் 4
Updated on
1 min read

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து
பாழியம் தோளுடை பற்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

திருப்பாவை - பாடியவர் புவனேஸ்வரி விஸ்வநாதன்

பாடியவர் - பவ்யா ஹரி

திருமாலின் அடியார்களாக விளங்குவோர்க்கு, திருமாலின் கட்டளைப்படி நடக்கும் அனைத்து தெய்வங்களும் ஏவல் செய்யும் என்று உணர்த்துவதாக இந்த பாடல் அமைந்து உள்ளது. தாங்கள் மார்கழி நீராட ஏதுவாக, மழை பொழிந்து நீர்நிலைகள் நிரம்பி இருக்க வேண்டும் என்று விரும்பும் இந்த சிறுமிகள், மழை பொழியும் தன்மையில் திருமாலையும் அவனுடன் தொடர்பு கொண்ட பொருட்களையும் காண்கின்றனர். அவர்கள் நோக்கும் இடமெல்லாம் நீக்கமற நந்தலாலன் நிறைந்து இருப்பதையும் நாம் இந்த பாடல் மூலம் புரிந்துகொள்ளலாம். கரத்தல் = மறைத்தல். பற்பநாபன் = பத்மநாபன். நாலாயிர திவ்யபிரபந்த பாசுரங்கள் அனைத்தும் பத்மநாபனை பற்பநாபன் என்றே குறிப்பிடுகின்றன. அதே மரபினை ஆண்டாள் பிராட்டியாரும் பின்பற்றுகின்றார். பாழி = மூங்கில். அம் = அழகிய. ஆழி = சக்கரம்.

நாம் எந்த செயல் செய்தாலும், இறைவனின் திருநாமத்தை சொல்லியவாறு செய்ய வேண்டும் என்று முந்தைய பாடலில் கூறிய ஆண்டாளின் பார்வையில் அனைத்தும் திருமாலுடன் தொடர்புகொண்ட பொருட்களாக தோன்றுவதை நாம் இந்த பாடலில் உணரலாம்,

பொழிப்புரை

பரந்த கடல் போன்று பெருமையினை உடைய மழைக்கு நாயகனாக விளங்குபவனே, நீ ஒன்றினையும் ஒளிக்காமல் மழை பொழிய வேண்டும்; நீ கடலினில் புகுந்து அங்குள்ள நீரினை முகந்து கொண்டு, மிகுந்த ஆரவாரத்துடன் ஆகாயத்தில், ஊழி முதல்வனாக விளங்கும் பரமனின் திருமேனியின் நிறம் போன்று கறுத்து மேலே எழ வேண்டும்; அவ்வாறு எழுந்த பின்னர், மூங்கில் போன்று வலிமையும் அழகும் பொருந்திய தோள்களை உடையவனும், தனது நாபியில் கமலத்தினை வைத்துள்ளவனும் ஆகிய திருமாலின் கையில் காணப்படும் சக்கரம் போன்று மின்னியும், அவன் பயன்படுத்தும் சங்கம் போன்று முழங்கியும், அவனது வில்லாகிய சாரங்கத்திலிருந்து வெளிவரும் அம்புக் கூட்டங்கள் போன்று இடைவிடாமலும், நீ பொழிய வேண்டும். இந்த உலகத்தில் உள்ளவர்கள், தங்களது நிலையிலிருந்து என்றும் தாழாமல் மேன்மேலும் ஓங்கி உலகம் வளமுடன் வாழும் வகையில் நீ மழை பொழிய வேண்டும். இவ்வாறு நீ செயல்பட்டால், நாங்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் மார்கழி நீராட்டத்தினை மேற்கொள்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com