திருமணப் பொருத்தம் என்பது தேவையான ஒன்றா?

இந்தக் கட்டுரையை முழுவதுமாகப் படித்த பின்னர், படிப்பவர்கள் நீங்களாகவே முடிவு செய்யுங்கள், "திருமணப் பொருத்தம் தேவையான ஒன்றா, இல்லையா" என்று
திருமணப் பொருத்தம் என்பது தேவையான ஒன்றா?
திருமணப் பொருத்தம் என்பது தேவையான ஒன்றா?

இந்தக் கட்டுரையை முழுவதுமாகப் படித்த பின்னர், படிப்பவர்கள் நீங்களாகவே முடிவு செய்யுங்கள், "திருமணப் பொருத்தம் தேவையான ஒன்றா, இல்லையா" என்று

காதலிப்பவர்களுக்கு, திருமணப் பொருத்தம் தேவையா ?

காந்தர்வ திருமணம் எனும், காதல் திருமணத்திற்கு, ஜோதிடத்தில்  திருமணப் பொருத்தம் தேவை இல்லை, மனப்பொருத்தம் மட்டுமே தேவை. அதே சமயம் அவர்களின் ஜாதகத்தில், ஷஷ்ட்டாஷ்டகமாக இருவரின் லக்கினம் மற்றும் ராசி உள்ளதா என காணுதல் அவசியம்.  அதாவது பெண்ணின் ஜாதகத்தின் லக்கினத்தில்  இருந்து, ஆணின் ஜாதகத்தில் உள்ள லக்கினம், 6 ஆகவோ அல்லது 8 ஆகவோ வரக்கூடாது. அப்படி இருப்பின், ஒரு ஜோதிடர் அவர்களுக்கு எச்சரித்தல் அவசியம். அதாவது, காதலிக்கும் இருவரும் மனம்விட்டு பேசுங்கள், ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ளுங்கள் என்று மட்டும் சொல்லிவிடுவது நல்லது இந்த ஷஷ்டாஷ்டகம் இல்லாதவர்களை, சேர்ப்பதில் தவறேதும் இல்லை என்பது, எனது கருத்து. காரணம், அவர்கள் இருவரையும் கடவுளே இணைத்திருப்பதாக கருதுதல் அவசியம் ஆகிறது. 

அதனால், திருமணப்பொருத்தம் காண வரும் ஜாதகங்களுக்கிடையே (ஒரு ஆண், ஒரு பெண் ஜாதகத்தில் ) அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ தனித்தனியாகவோ காதல் வயப்பட்டுள்ளனரா என காணுதல், ஒரு ஜோதிடரின் முதல் கடமை ஆகிறது. இதனை அறிந்து, பின்னரே, பொருத்தம் பார்த்தால் சரி ஆகும். இந்த காலகட்டத்தில், காதல் பல விபரீதங்களை உருவாக்குகிறது.

ஒரு பெரிய அனுபவம் மிக்க ஜோதிடரால் கூட சரியான  தீர்வை உடனடியாக கூறிவிட முடியாத விஷயம். என்னவென்றால், "திருமண பொருத்தம்" ஒன்று மட்டும் தான். கலாசார மாற்றம் அதிகரிக்க அதிகரிக்க,  திருமணப் பொருத்தம் என்பது மிகவும் கடினமானதாக உள்ளது என்பது, ஒரு மறுக்க முடியாத உண்மை ஆகும்.

திருமணப் பொருத்தத்திற்கு முன்பாக ஒரு ஜோதிடர் காண வேண்டியது என்னவென்றால்,

1. பொருத்தம் பார்க்க வந்த ஜாதகத்தில் இருவரும் (பையன் மற்றும் பெண் ) காதலிக்கிறார்களா அல்லது யாரேனும் ஒருவரோ அல்லது இருவருமோ காதல் வயப்பெற்றிருக்கிறாரா? என்பது

2. இவர்களுக்குள் திருமணம் நடக்குமா?

3. நிச்சயம் பண்ணிய பிறகு திருமணம் நின்று போகுமா? என முதலில் பார்க்கவேண்டும்.

ஏன் என்றால், திருமணம் என்பது இரு இதயங்களை, இரு உள்ளங்களை, இரு குடும்பத்தை இணைக்கிறது, என்பதனை யாரும் மறுக்க முடியாது.

பொருத்தம் என்பது மூன்று வகையானது

1. ஜாதக ரீதியான ஆய்வு, கிரக பலம் மற்றும் பாவ பலம் ஆய்வு.

2.  தற்போது நடைபெறுவது, திருமணத்தை நடத்தி வைக்கும் தசாபுத்தியா? அது இருவருக்கும் மகிழ்ச்சியை அளிக்குமா அல்லது கசப்பைத் தருமா !

3. திருமணம் ஆன பிறகு, தம்பதியர் இருவருக்குள், பிரிவினை வருமா? என்பதனை, "தோஷ சாம்யம்" எனும் ஜோதிட ஆய்வு மூலம் அறிவதாகும்.

ஏன் என்றால், ஒருவர் திருமணத்திற்கு முன்பு பெரிய நிலையில் இருக்கிறார். திருமணத்திற்கு பின் மிகவும் தாழ்ந்த நிலைக்கு தள்ளப்படுகிறார்.

அதுவே வேறு ஒருவர், திருமணத்திற்கு முன்பு தாழ்ந்த நிலையில் இருக்கிறார். திருமணத்திற்கு பின்னர் மிக உன்னத நிலையை அடைகிறார்.

இதனை பொதுவாக ஒரு பெண் பானை பிடித்த பாக்கியம் என்று, பெண்ணையே குறி வைத்து சொல்லிவிடுவார்கள்.

இதனை  எப்படி சொல்லவேண்டும் என்றால், இருவரின் சேர்க்கையால் ஏற்பட்ட ஒன்று என்பது மட்டுமே. இது, எனது மட்டும் அல்ல அனைவரின் உள்ளக் கருத்தும் ஆகும்.

ஒரு ஜோதிடர் எந்தத் தகவலையும், தம்மை நாடி வந்தவர்களை காயப்படுத்தாமல் மற்றும் வலிக்காமல் சொல்ல வந்த, அறிவுறுத்த வந்த தகவலை எடுத்து கூற வேண்டும். வந்தவர்கள் ஏற்றுக்கொள்ளாத போதும் தமது  முடிவான கருத்துகளை கூறிவிடுவது மட்டும் தான், ஒரு ஜோதிடரின் கடமை ஆகிறது. இது ஒரு கடுமையான பணி தான் ஏனெனில், வந்திருப்பவர்கள் ஒன்று பழைய வாடிக்கையாளராகவோ அல்லது பெரிய அந்தஸ்த்தில் உள்ளவர்களாகவோ கூட இருக்கலாம்.

நட்சத்திரப் பொருத்தம், கிரக பொருத்தம் எது சிறந்தது ? 

பொதுவாகவே, நட்சத்திரப் பொருத்தம் என்பது ( 10 பொருத்தம் ) 30 % சதவீதம் தான் தகவலை அளிக்கும். கிரகப் பொருத்தம் தான் மீதமுள்ள 70 % சதவீத தகவலை அளிக்கும்.

அதனால், கிரக பொருத்தம் மட்டுமே பார்த்து முடிவை கூறக்கூடாது. அதே போல், வெறுமனே, நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே பார்த்து நிச்சயம்  முடிவெடுக்கக் கூடாது.

10 வித நட்சத்திரப் பொருத்தம் : - 
(இதோடு கிரகப் பொருத்தம் எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்பதைக் காண ஒரு சில துளிகள் மட்டும்) 

1. தினப்பொருத்தம் : 
நட்சத்திரப் பொருத்தம்..  இது வெறும் தாராபலம் தான்.  பெண் நட்சத்திரத்தில் இருந்து 3, 5, 7 ஆக ஆண் நட்சத்திரம்  வரும் பட்சத்தில் பொருத்தக் கூடாது

கிரகப் பொருத்தம்.. இப்படி உள்ள ஒரு ஜாதக பொருத்தத்தில், இருவருக்கும் அல்லது இருவரில் ஒருவருக்காவது அவரின் ஜாதகத்தில் சந்திரனை, குரு பார்த்தல், குணக்கேடு வராது. இந்த ஜாதகத்தை இணைக்கலாம். இல்லையெனில், பிரச்சினையே.

2. கணப்பொருத்தம் :

நட்சத்திரப்பொருத்தம்.. ஒரு தேவ கணத்திற்கு, தேவ கணத்தை சேர்க்கலாம். இது ஒரு ஜோதிட விதி.

கிரகப் பொருத்தம்.. மேற்படி அமைப்புள்ள ஒரு ஜாதகத்தில், ஒருவருக்கு, செவ்வாய் + ராகு , செவ்வாய் + சனி மற்றும் செவ்வாய் + கேது இருப்பின் இந்த கிரக இணைவு கொண்டவர்களை இணைக்கக்கூடாது. ஏன் எனில் இப்படிப்பட்ட கிரக இணைவால் (முரட்டு குணத்தால்)  எப்போதும் தம்பதியருள் சண்டை சச்சரவு தான் வரும்.

3. ரச்சு பொருத்தம் :

பொருத்தங்களில், இது இல்லை எனில் நிச்சயம் பொருத்தி வைக்கக்கூடாது. இது ஒரு பெண் தீர்க்க சுமங்கலியாக இருப்பதை தீர்மானிக்கும். பொதுவாக இருவரின் ரச்சுவும் ஒரே ரச்சுவாக இருக்கக்கூடாது. அவைகள், சிரசு ரச்சுவில் இருவரும்  இருப்பின், புருஷன் மரணம். அதே சமயம், இருவரின் ரச்சுவும் கண்ட எனும் கழுத்து ரச்சுவானால், பெண் மரணம். தொடை ரச்சுவானால்.. திரவியம் நாசம் ஆகும். பாத ரச்சுவானால், பிரயாணத்தால்  தீங்கு உண்டாகும். இதனை உணர்ந்து, முடிவெடுத்தல் அவசியம் 

4. நாடிப்பொருத்தம் : 

நெருங்கிய உறவினர்களில் மற்றும் ரத்த சம்பந்தம் உள்ளவர்களாக இருப்பின் இந்த நாடிப்பொருத்தம் நிச்சயம் தேவைப்படுகிறது. மொத்த நாடிகள், 3 வகைப்படும் வாதம், பித்தம் மற்றும் சிலேத்துமம் ஆகும். அதனால் தான் அந்த காலங்களில், ஜோதிடரே  ஒரு நல்ல மருத்துவராகவும் இருந்தார். 

5.  மாகேந்திரப் பொருத்தம் :

இது இருவருக்குமான புத்திர பாக்கியத்தை தெரியப்படுத்தும்.
கிரக பொருத்தம் : மாகேந்திரப் பொருத்தம் இருந்தாலும், கிரகப்பொருத்தம் நிச்சயம் பார்க்கணும். குழந்தைப் பிறந்தவுடன் குழந்தையின் கர்மாவினால், பெற்றோர் பிரிவதற்கு வாய்ப்பு உள்ளது. குழந்தையின் கர்மா ஏற்பட்டதற்கு, பெற்றோரே  காரணம் ஆகும்.

குரு + சனி இணைவு அல்லது குரு, சனி பார்வை ஒருவரின் ஜாதகத்தில் இருந்தாலும், குழந்தை உருவானதிலிருந்து, குழந்தை பிறக்கும் நாள் வரை, எப்போது வேண்டுமானாலும்  குடும்பத்தில்,  சண்டை சச்சரவு வரலாம்.

நட்சத்திரப் பொருத்தம் 10ம் இருந்தாலும், இந்த கிரக இணைவு இருப்பின், கணவனுக்கும், அவன் வீட்டு பெற்றோர்க்கு,  அறிவுரை கூறி அந்த பெண்ணை எந்த விதத்திலும், கஷ்டப்படுத்த வேண்டாம் என அறிவுரை செய்திடல் வேண்டும்.

ஏன் எனில் ஹார்மோன் மாற்றம் என்பது பெண்ணுக்குத்தான் நிகழும். அதனை அவள் மட்டும் தான் அனுபவிக்கிறாள், அதனால், எந்த வித பாதிப்பும் இல்லாமல் அவள் குழந்தையை பெற்றெடுக்க இது உதவும்.

இது போல் இருவருக்கும், நட்சத்திரப் பொருத்தத்துடன், கிரகப் பொருத்தமும் காணுதல், அவசியம்.

இருவருக்குமே அல்லது இருவருள் ஒருவருக்கு மட்டும் "புணர்ப்பு தோஷம்" இருந்தாலும் எந்த நேரத்திலும் திருமண தடை வரும். இதற்கு, இருவருக்கும் இடையே வார்த்தை சுத்தம் மிக முக்கியம் ஆகிறது. இதற்கு தோஷ பரிகாரம் உண்டு. அதனை, தோஷ பரிகாரம் எனும் தனியாக ஒரு கட்டுரையில் காணலாம்.

பொருத்தம் பார்க்கையில், ஒருவரின் ஜாதகத்தில் சூரியன், சந்திரன் பலம் கொண்டும், மற்றவர் ஜாதகத்தில், பலம் குறைந்தும் காணப்பட்டால், நிச்சயம் சம்பந்திகளுக்கிடையே பொருத்தம் இருக்காது. வீண் வாதங்கள், விவாதங்கள் வர வாய்ப்புண்டு.

அதே போல் இருவரின் கோச்சாரமும், தசாபுத்தியும் எப்படி எடுத்துட்டு போகும் எனவும் பார்க்கணும்.

அதே போல் இருவேறு குணம் கொண்ட ஜாதகர்களை இணைக்கவே கூடாது அது தவறாகும்.

அதாவது அறிவு சொல்படி கேட்பவரா அல்லது ஆத்மா சொல்படி கேட்பவரா என அறிதல் அவசியமாகிறது. அறிவு சொல்படி கேட்பவர் எடுக்கும் முடிவில் நியாயம் இருக்காது. அதுவே ஆத்மா சொல்படி கேட்பவர் எடுக்கும் முடிவில் நியாயம் இருக்கும். இதனை சர்வாஷ்டக முறையில் காணலாம். இதனை, பொருத்தம் பார்க்கும் போதே கூறிவிடுதலும் சரியான ஒன்றாகும்

அதேபோல், இருவருக்குமோ அல்லது ஒருவருக்கோ, இரண்டு திருமணம் ஆகும், நிலை உள்ளதா என ஆய்வு செய்தல் அவசியமாகிறது. பிறகு, சர்ப தோஷம், களத்திர தோஷம் போன்றவை உள்ளதா என ஆய்வு செய்தல் அவசியம். இதனை, தோஷ பரிகாரங்களால் சரி செய்ய முடியும்.

செவ்வாய் தோஷம் :
இது, அனைவராலும் தவறாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனை, கிரக இணைவுகளாலும், கிரக தொடர்புகளாலும் சரியாக  காண முடியும். செவ்வாய், தோஷ விதி விலக்குகள் நிறைய உள்ளன. அவைகளை அவ்வளவாகக் காணுவதில்லை என்பது எனக்கு, சற்று மன வருத்தமே

இந்த செவ்வாய் தோஷத்தை சரியாக புரிதல் இல்லாமையால், பல திருமணங்கள் ஆகாமல் தட்டிக் கழிக்கவும் செய்வதை என்னென்று சொல்வது. முதலில் செவ்வாய் தோஷம் என்பது ஒருவரின் உடலில் உள்ள அதிக பட்ச சக்தியைக் சொல்வது தான். இதனை சர்வாஷ்டக பரல்கள் மூலமும் வழி காண முடியும். அதாவது ஒருவரின் லக்கின பரல்களை விட, 6 ஆம் இடத்து பரல்கள் அதிகமாக இருப்பின் அவருக்கு செவ்வாய் தோஷம் இருப்பினும் (அதிக சக்தி ) அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு எனும் காரணத்தால், அவரை செவ்வாய் (உடல் ) வலுவான ஜாதகர் என கருதி விட முடியாது.
 
இருவரின் வாழ்க்கை துவங்கும் போது குறைந்தது 1 1/2 வருடங்களாவது ஆபத்தான தசை சந்திப்பு  இருக்கிறதா என காணுதல் அவசியம். இது கூட பிரிவினையை தர காரணமாகும். உதாரணமாக, ஒருவருக்கு அஷ்டமாதிபதியின் தசை, இன்னொருவருக்கு பாதகாதிபதியின் தசை திருமணத்தின்போது நடப்பில் இருப்பது.

புத்திர தோஷம் :
திருமணத்திற்கு அடுத்ததாக பார்த்துக்கொள்வோம் என இதனை சரியாக காணுவதில்லை  உயிர் அணுவில் கோளாறு, கருமுட்டை வளர்ச்சி குறைவு என அனைத்தையும்,  பீஜ ஸ்புடம், க்ஷேத்ர ஸ்புடம் என பலவித ஜோதிட கணக்குகள் மூலம் திருமணத்திற்கு முன்பே கூட அறிந்து சேர்த்து வைத்தால் நலம் உண்டாகும்.

முக்கியமான ஒன்றை இங்கே நான் சொல்லியே ஆகவேண்டும், பலர் பலவித கட்டுரைகளை படித்து உடனடியாக இவர்களே தீர்மானிப்பதோடு அல்லாமல், ஜோதிடர்கள் கூறும் போது, இவர்கள் எங்கோ படித்ததை கேட்டு குழப்புவார்கள்..

இதனை தவிர்க்கவேண்டும். இந்த கட்டுரையில் கூட அதிக தகவல்களை கொடுக்க முடியவில்லை. ஏனெனில், இரண்டு காரணம் ஒன்று கட்டுரையின் நீட்சி மற்றொன்று, முழுமையாக தர இயலாது. இதுவே ஒரு ஜோதிட வகுப்பாகிவிடும். தனியாக படித்தால் நல்லது. இது ஒரு விழிப்புணர்வு கட்டுரையே எனபதனை கருத்தில் கொள்ளவேண்டும்

ஜோதிடத்தில் இல்லாதது ஏதும் இல்லை.  ஜோதிடத்தின் விதிகளில் எந்த தவறும் இல்லை. அதனை புரிந்து பயன்படுத்தும், ஜோதிடர்களின் கணிப்புகளில்   வேண்டுமானால், தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எல்லோரும், எல்லாமும் பெறவேண்டும் இல்லாமை நிலை இங்கு வரவேண்டும்..

தொடர்புக்கு :     
"ஜோதிட ரத்னா" தையூர். சி. வே. லோகநாதன்
98407 17857  ( வாட்ஸ் ஆப் மட்டும் )    /   91502  75369   ( அழைப்புக்கு மட்டும் )
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com