கரணம் தப்பினால் மரணம் என்பார்கள்: கரண சூட்சுமம் தெரியுமா?

ஒவ்வொரு ஜோதிட நூல்களில் உள்ள சூட்சுமங்களை அப்படியே ஜாதகத்தில் பொருத்தி நன்கு ஆராய வேண்டும். பதினோரு கரணத்தின் குணங்களையும் ஜாதக அலங்காரத்தில் விளக்கி உள்ளது.
கரணம் தப்பினால் மரணம் என்பார்கள்: கரண சூட்சுமம் தெரியுமா?

ஜோதிடத்தில் முக்கிய அங்கங்களான வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் கொண்டு பஞ்ச பூத தத்துவத்தில் இயக்கப்படுகிறது. இந்த ஐந்து அங்கங்களே பஞ்சாங்கம் ஆகும். இவற்றில் கரணம் திதியில் பாதி. ஒரு திதியின் 12 பாகையில், 6 பாகைக்கு ஒரு கரணமாக 12 பாகைக்கு இரண்டு கரணமாக வரும். அதாவது 30 திதிக்கும் 60 கரணங்களாக வரும். அதிலும் கரணம் அவற்றோடு தொடர்புடைய கரணநாதன் முக்கியமானவர். 

மொத்தமாக 11 கரணங்கள் ஆகும். அவற்றில்   சர கரணங்களான பவ, பாலவ, கெளலவ, தைதுளை, கரசை கரணங்கள் பூரண சுபத்துவம் வாய்ந்தது. மற்ற கரணங்களான பத்திரை(விஷ்டி), சகுனி, நாகவம், கிம்ஸ்துக்ன கரணங்கள் அசுப தன்மை பெற்றது. இவற்றில் சர கரணத்தில் உள்ள வணிசை மற்றும் ஸ்திர கர்ணத்தில் சதுஷ்பாதமும் மத்திம சுப தன்மை கொண்டது. ஒரு உயிர் இயங்க காற்று அவசியம் மற்றும் ஒரு மனிதனின் ஏற்ற தாழ்வு செயலுக்கு கர்ம காரகன் சனி பகவான் நிலை தேவை. அதனால் தான்  கரணத்தின் கிரகம் கர்மகாரகன் சனி என்றும், இது காற்று தத்துவம் கொண்டதாக கூறப்படுகிறது. ஒருவருக்கு கரணநாதன் பலம் பெற வேண்டும். கரணம் தப்பினால் மரணம் என்பதற்கு ஏற்ப கரணம் சூட்சுமம் தெரியவில்லை என்றால் மரணதிற்கு நிகரான கெட்ட சம்பவங்கள் நடைபெறும் என்பது சிறு கூற்று.

ஒவ்வொரு ஜோதிட நூல்களில் உள்ள சூட்சுமங்களை அப்படியே ஜாதகத்தில் பொருத்தி நன்கு ஆராய வேண்டும். பதினோரு கரணத்தின் குணங்களையும் ஜாதக அலங்காரத்தில் விளக்கி உள்ளது. அது கரணாதிபதி நிலையை பொறுத்து குணம், செயல்கள் மாறுபடும். ஜோதிட சூட்சுமத்தில் ஜாதகருக்கு தெய்வ அருள் பெற, திதியின் பாதியாக உள்ள கரண நாதனை வணங்கினால் நன்று. முக்கியமாக கிரகங்கள், அதிதேவதை மற்றும் அவற்றின் தொடர்புள்ள அனைத்தையும் கொண்டு கரணநாதனை இயக்க வேண்டும். ஒருவருக்கு தோஷம் இருந்தால் அந்த தோஷம் பெற்ற வீட்டை கரண நாதன் சுப நிலையில் பார்த்தால் அவரவர் கர்மாவிற்கு ஏற்ப, அவருக்கு  தோஷத்தைக் குறைக்கும் என்பது விதி. அது அசுப நிலையிலிருந்தால் பலன் பெற கொஞ்சம் கடினம். 

இன்னும் அடுத்த கட்டத்தில் ஆராய்ந்தால், கரணத்தை கொண்டு திருமண பொருத்தம் பார்க்க வேண்டும், கரசை கரணத்தில் வாழ்க்கை துவங்குது நன்று, இந்த கரண தம்பதியர்கள்  ஒற்றுமை பலம் பெரும். அசுப கரணத்தில் வாழ்க்கையை துவங்கக்கூடாது, குழந்தைப் பாக்கியம் பெற, கரணாதிபதி மூலம் பரிகாரம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஒருவருக்கு குழந்தைப் பாக்கியம் இல்லை என்றாலும் சுப நிலையில் உள்ள கரணநாதன் பார்வை பெற்றால் புதிய மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் சோதனை குழாய் முறையில் குழந்தை பாக்கியம் உண்டாகும். 

ஒவ்வொருவருக்கும் எது சரியான தொழில், அது வெற்றியின் உச்சத்தை அடையமுடியுமா என்று பார்க்க இது ஒரு சூட்சும விதி. அதுவும் முக்கியமாக ஜாதகர் எந்த காரணத்தில் பிறந்தாரோ அந்த கரணத்துக்குரிய மிருகத்திற்கு துன்பம் கொடுக்கக்கூடாது. எடுத்துக்காட்டாக வன்னிசை கரணம் பிறந்தவர்கள் மாட்டு இறைச்சி  மற்றும் தோல் வியாபாரம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் அது அவரவர் வாழ்க்கையில் அதிக பாதிப்பை தரவல்லது. ஜாதகரின் கரணநாதனை  வழிபாடு செய்தால் வெற்றிக்கு சரியான வழியை படம் போட்டு காட்டிவிடும். ஆனால் கரணநாதன் அவயோகராகவோ, மறைவோ பெறக் கூடாது. கீழே கூறப்படும் கரணத்தின் குணநலன்கள் அனைத்தும் அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது, அவற்றினை நன்கு ஆராய்ந்து சொல்ல வேண்டும். ஜாதகக் கட்டத்தில் கரண நாதன் நிலை பொறுத்து பலன் மாறுபடும். ஒவ்வொரு கரணங்களின் கிரகம், குணம், விலங்கு மற்றும் அவற்றின் வழிப்பாட்டு  பரிகார முறைகளை பார்ப்போம்.

1.பவ கரணம்

பவ கரணத்தில் பிறந்தவர் பயப்படாதவர், சுகவாசி, வேந்தர்களிடம் வெகுமதி பெறுபவன், ஜோதிட சாஸ்திரத்தில் ஆர்வமுள்ளவன், வறுமையாளன், அறிவாளி, அழகன், தன்னம்பிக்கை, தைரியம் மிக்கவன், மிருதுவான தலைமுடியை உடையவன். இந்த கரணம் வீட்டில் திருமண சுப நிகழ்ச்சி செய்ய, நீண்ட தூரப் பயணம் செய்ய, அரசு மற்றும் உயர் பதவி பெற வேலைக்கு விண்ணப்பிக்க சிறந்த கரணம். இக்கரணத்திற்கான விலங்கினம் சிங்கம். இந்த கரணத்தில் பிறந்தவர்கள் சிங்கம் போல் குணநலன் கொண்டவராகவும், ஆளுமை தலைவராகவும் வர வாய்ப்புகள் அதிகம் உண்டு. இதற்கு நம் தமிழ்நாட்டின் பல்வேறு தலைவர்களை உதாரணமாக சொல்லலாம்.

பவகரண அதிபதி செவ்வாய் ஆவார். அவர் சுப தன்மையுடன் எந்த பாவத்தில் அமர்ந்திருக்கிறாரோ அந்த பாவ தொடர்புகொண்டு தொழில் செய்யலாம். பொதுவாக இவர்கள் வீரமிக்க ராணுவம் மற்றும் காவல் துறை, சமையல் துறை, நெருப்பு சம்பந்த தொழில், செங்கல் சூளை வியாபாரம், நில விற்பனை, மருத்துவம், ஆராய்ச்சி முக்கியமாக ஜோதிட ஆராய்ச்சி, நில விற்பனை, கனரக ஓட்டுநர், மற்றும் கடினமான அனைத்து துறையையும் விரும்பி ஏற்பார்.

வழிப்பட வேண்டிய தெய்வங்கள்/பரிகாரங்கள்: ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் மற்றும் சிங்க ரூபினி அம்பாள் வழிபாடு. கோவில் குடமுழுக்கு உங்களால் முடிந்த உதவி செய்வது நன்று. இரத்த தானம் சிறந்த பலன் தரும்.

2.பாலவ கரணம் 

இந்த கரணத்தில் பிறந்தவர் நித்தமும் தான தருமம் செய்யும் கொடையாளி, மிகுதியான இன்ப நுகர்வுகளை அனுபவிப்பான், பெரும் பணக்காரன், அழகன், வெகு சாதாரணமான  அல்லது சிறு தொழிலையோ செய்வான், பெண்ணாசை மிக்கவர், மேலான பண்புகளை கொண்டவர், உறவினர் மீது அதிக அன்பு ஆசை கொண்டவர் என்று ஜோதிட நூலில் கூறப்படுகிறது. இந்த கரணத்தில் கோவில் திருவிழா மற்றும் அனைத்து சுப காரியங்கள் செய்யலாம். இவர்களின் மிருகம் புலி. இந்த கரணத்தில் பிறந்தவர்கள் வேண்டிய நேரத்தில் யோசித்து, பதுங்கி பாயும் புலியாக வேலை செய்வார்கள்.

இவர்களின் கரண நாதன் ராகு பகவான். ஜாதக கட்டத்தில் ராகுவுடன் சேர்ந்த கிரகம் பாவம் பலம் கொண்டு இருந்தால் பல்வேறு தொழில்கள் செய்து உயர்வார். பொதுவாக இவர்கள் விமானம் கப்பல் துறையில் வேலை, கணினி மின்னணுவியல், அறுவை சிகிச்சை நிபுணர், தகவல் தொடர்பு துறை, நிதித் துறை, மல்யுத்த வீரர், சிஐடி, உளவுத்துறை, புதிய கண்டுபிடிப்பு, பல்வேறு புதிய தொழில்கள் செய்ய ஆர்வம் மிக்கவர், நிகழ்வு மேலாண்மை (event) தொடர்பு உடைய வேலை இவர்களுக்கு பிடிக்கும்.

வழிப்பட வேண்டிய தெய்வங்கள்/ பரிகாரங்கள்: புலித்தோல் உடுத்திய சிவன், ஐயப்பன், திருப்பட்டூர் பிரம்மா, கிராம தேவதை, குலத்தைக் காக்கும் காவல் தெய்வத்தை வணங்குவது நன்று. இறைவனுக்கு சந்தனக்காப்பு செய்வது நன்று. இவர்கள் தினமும் மூச்சுப் பயிற்சிகள் மற்றும் தியானம் செய்வது நன்று.

3.கௌலவ கரணம் 

கௌலவ கரணத்தில் பிறந்தவன் மன்னவர்களின் மனதிற்கு பிடித்தமானவன், வாழ்வியல் ஒழுக்கங்களை தவறாது கடைப்பிடிப்பான், மேன்மைமிக்க பெற்றோர் மீது மட்டற்ற அன்பு, மதிப்பு மரியாதை மிக்கவன். நிலபுலன்களை அதிகம் சேர்த்துக்கொள்வான். அறிவாளியாக, பல்வேறு  செயல்திறன் கொண்டவராக, யானைகளையும் குதிரைகளையும், தனக்கு வேண்டிய பல்வேறு சொகுசு வாகனங்களையும் சொந்தமாக வைத்திருப்பான். இந்த கரணத்தில் சில செய்ய முடியாத விஷயங்கள் துவங்க, சேமிப்பு தொடங்க சிறந்த சுப கரணம். இக்கரணத்தின் மிருகம் பன்றி ஆகும். 

கௌலவ கரணத்தில் அதிபதி சனி நல்ல நிலையில் இருந்தால் எந்த தொழில் செய்தாலும் பிரகாசமாக திகழ்வார். முக்கியமாக மண்ணைத் தோண்டி செய்யக்கூடிய தொழில்கள், இரும்பு, ஜோதிடம், அரசியல், நம்பகமிக்க துணை அதிகாரியாக, சொல்லிக்கொடுக்கும் ஆசானாக, ஒழுக்கம்,  சட்டம், நீதி சார்ந்த துறை, தார் / கருங்கற்கள் வியாபாரம், கட்டுமான பணி, பெட்ரோல், நிலக்கரி  சார்ந்த துறை, நான்காம் அதிபதி தொடர்பு கொண்டால் பழைய வீடு, வாகனம் கொண்டு பொருள் ஈட்டுவார்.

வழிப்பட வேண்டிய தெய்வங்கள்/ பரிகாரங்கள்: பூவராக பெருமாள், வராகர், தஞ்சை மகா வராகி அம்மன், ஸ்ரீவாஞ்சியம், திருநள்ளாறு சனீஸ்வரன், சூரியன் ஒளி பெற்ற கோவில்களுக்குச் சென்று வணங்குவது நன்று. முடிந்தளவுக்கு ஏழை தொழிலாளிக்கு உணவு, உடை, செருப்பு வாங்கி கொடுப்பது நன்று.

4.தைதுலை கரணம்

தைதுலை கரணத்தில் பிறந்தவர்கள் வேந்தர்களிடத்து வேலை பார்ப்பவர்கள், பணக்காரனாக, இளகிய மனம், பெருஞ் சுகவாசி, முரடனாக, மனஉறுதி மிக்கவர், கஞ்சன், கடின உழைப்பை மட்டும் நம்புபவன், வசீகரமானவர், தர்ம நெறியிலிருந்து பிறழ்ந்து நடப்பான். பெண்களாக இருந்தால் ஆண்களை மயக்கும் வல்லமை மிக்கவர்.  அதுவே ஆண்களாக இருந்தால், விஷம் போன்ற தீய எண்ணங்கள் நிறைந்த பெண்ணிடம் மோகம் கொண்டிருப்பான் என்று ஜாதக அலங்காரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த கரணத்தில் புதிய பொருள்களை வாங்குவது, விற்பது, கிணறு வெட்டுவது, பெண்கள் செய்யும் புதிய முயற்சிக்கு ஏற்ற நல்ல நாள். இவர்களின் மிருகம் கழுதை ஆகும்.

இவர்களின் கரணாதிபதி சுக்கிரன் ஆவார்.  சுக்கிரன் பலம் பெற்ற தைதுலை கரணம் பிறந்தவர்களை தங்களுடன் வைத்திருந்தால் உயர்வு பெறுவார்கள். முக்கியமாக இவர்களால் வாழ்க்கையில் மற்றும் புதிய முயற்சியில் வெற்றியும் பொருளும் ஈட்டுவார். இவர்களின் பொதுவான தொழில் கலைத் துறை, பேஷன் டிசைனிங், திரைத் துறை, அழகு நிலையம், கட்டடத் தொழில், வைர வியாபாரம், டிராவல் ஏஜென்சி, நகை ஜவுளிக் கடை, உணவகம் என்று பல்வேறு தொழிலில் ஈடுபாடு இருக்கும்.

வழிப்பட வேண்டிய தெய்வங்கள்/பரிகாரங்கள்:  ஸ்ரீரெங்கநாதன், மஹாலக்ஷ்மி, ஜேஷ்டா தேவி வழிபாடு. நலிவுற்ற கலைத் துறையினருக்கு மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு தொழில் கொடுத்து உதவுதல் நன்று.

5.கரசை கரணம் 

கரசை கரணத்தில் பிறந்தவர்கள்  விலைமகள் மீது மோகம், அரசாரல் அதிக ஆதாயம் பெறுபவன். தன் விரோதிகளைத் தோற்கடித்து துன்புற வைக்கும் ஆற்றல் கொண்டவர், மேகத்தைப் போன்ற கொடையாளி. கரசை கரணத்தில் பூமி பூஜை செய்வது, நிலம் வாங்குவது, விவசாயம் செய்வது, புதுமனை புகுவிழா, திருமணம், சாந்தி முகூர்த்தம் செய்வது நன்று. 

இந்த கரணத்தின் கரணநாதன் சந்திரன் ஆவார். இவர்களுக்கு வேத வித்துவான், பொருளாதார நிபுணர்கள், வங்கி மேலாளர், வாக்கு பலிதம் ஜோதிட வித்துவான், குழந்தை மருத்துவர் முக்கியமாக டெஸ்ட் டியூப் /புதிய மருத்துவ சிகிச்சை துறையில் இருப்பார்கள், நீதித் துறை, கோவில் தர்ம கர்த்தா, மத தொடர்பு கொண்ட அனைத்து  துறைகளில் இருப்பார்கள். கரசை கரணம் பலம் முக்கியம்.

வழிப்பட வேண்டிய தெய்வங்கள்/பரிகாரங்கள்: பிள்ளையார்பட்டி, திருப்பதி, இந்திரன், விநாயகர் வழிபாடு. யானைக்கு உணவு வழங்குவது, அவற்றிடம் ஆசீர்வாதம் வாங்குவது. குழந்தைகளுக்கு யானை பொம்மை வாங்கி தருவது நன்று.
  
6.வன்னிசை கரணம்  

வன்னிசை கரணத்தில் பிறந்தவர்கள் கடுமையான சுபாவம் கொண்டவர்கள், தன்னை தேடி வந்தடைந்தவர்களுக்கு எதுவும் கொடுக்க மாட்டார்கள், கரும்பை போல இனிய மொழி பேசுவான், பெண் பித்தன், உள்ளதை உள்ளபடி சொல்லாமல் இல்லாததும் பொல்லாததுமாக இரட்டித்து பொய் சொல்லுவார். சமூக ஒழுக்கத்திற்கு மாறான சிந்தனை உடையவர், கற்பனையாக பேசுவதில் வல்லவர். இவர்களுக்கு உடலில் குறைபாடு இருந்துகொண்டே இருக்கும் அல்லது வாழ்வில் குறைபாடு இருக்கும் என்று நூலில் கூறப்படுகிறது. இவர்கள் மிருகம் காளை/பசு ஆகும். 

வன்னிசை கரணத்தில் பிறந்தவர்களுக்கு கரணநாதன் சூரியன். இவர்கள் புகழ் கொடுக்கும் துறைகள், கலைத் துறை, அரசியல், அதிகாரம் மிக்க துறை, தந்தை தொழில், கோதுமை வியாபாரம், அரசு தொடர்பான கம்பெனி, மருத்துவமனை, புகழ் உச்சியில் உள்ள தொழில் அனைத்திலும் சிறந்து விளங்குவார்கள்.

வழிப்பட வேண்டிய தெய்வங்கள்/பரிகாரங்கள்: சிவலிங்கம், நந்திஸ்வரன், சிதைந்த பழம் பெரும் கோவிலுக்குப் பிரதோஷ காலங்களில் நைவேத்திய / அபிஷேக பொருள்கள், நல்லெண்ணெய்,  மலர் மாலைகள் வாங்கி  கொடுப்பது நன்று. சாலையோர மக்களுக்கு கம்பளி, போர்வை தருவது நன்மை பைக்கும்.

7.பத்திரை கரணம் 

இந்த கரணத்தில் பிறந்தவர் வலிமை மிக்கவன், சுந்தரன், பேச்சில் மனதில் சஞ்சலம், சிக்கனம் கடைப்பிடிப்பான், பாவ செயல் செய்வார்கள், கொடியவன், ஆண்கள் கெடுதல் மற்றும் ஒழுக்கம் தவறி கேடுக்கட்ட செயல் செய்ய நடக்க தோணும், விரக்தியுள்ளவன், செயல் திறன் இல்லாதவன், ஆளுக்கேற்றபடி பேசும் திறன் கொண்டவர். இவற்றின் பறவை கோழி, சேவல் ஆகும். இவர்கள் முடிந்தவரை கோழி இறைச்சி உண்ணக்கூடாது. கோழி குணம் கொண்டு இவர்கள் ஒரு செயலை பிரித்துப் பார்த்து அலசும் தன்மை கொண்டவர். இதனால் ஒரு சிலர் ஆராய்ச்சி துறையில் இருப்பார்.

பத்திரை கரண பகவான் கேது ஆவார். இவர் ஒரு ஆன்மிகவாதியாக, மருத்துவம், ருத்ராட்சம் மற்றும் பூஜை பொருள் விற்பனை செய்பவராக, மாந்திரீகம், மதப்பிரசாரம், அறிவியல் ஆராய்ச்சி, மருந்தகம், விஷ தன்மை முறிக்கும் நாட்டு வைத்தியராக, வக்கீல் மற்றும் சட்ட தொடர்பு உடைய துறையில் வேலை செய்வது நன்று.

வழிப்பட வேண்டிய தெய்வங்கள் /பரிகாரங்கள்: உங்களால் முடிந்த அளவு மக்களுக்கு நல்ல நீர், மோர் தருவது மற்றும் பறவைக்கு தானியம் தருவது நன்று. ஹனுமான், திருச்செந்தூர் முருகர், மற்றும் நீர் நிலை உள்ள கோவிலுக்குச் செல்வது நல்ல பலனைக் கொடுக்கும். 

8.சகுனி கரணம்

அன்னம் போல் அழகாய் நடக்கும் சகுனி கரணத்தில் பெரும் கௌரவம் மிக்க பணக்காரன், புத்திசாலி, மக்கள் பலமிக்கவர், தானிய சம்பத்துக்கள் கொண்டவன். மந்தம், முன்கோவம், பிரச்னை இருக்கும் இடத்தில் தீர்வு கொடுப்பார். இவர்களின் பறவை சனியின் வாகனம் காகம்.

இவர்களுக்கு சனி கிரகம் துணை நிற்கும். கறுப்பு நிறம் கொண்டவர். இவர்கள் உழைப்புக்கு ஏற்ப உயர்வார்கள். கூட்டுத் தொழில், இறைச்சிக் கடை, பாரம் தூக்குதல், சர்வர், சலூன், எண்ணெய் வியாபாரம், இரும்பு வியாபாரம், கட்டடம் கட்டுபவராக இருப்பார்கள், விவசாயம், தொண்டு நிறுவனம், மரவேலை, மண்பாண்டத் தொழில், சொந்த பந்தங்களோடு உழைக்க விரும்புவார்.

வழிப்பட வேண்டிய தெய்வங்கள்/ பரிகாரம்: திருநள்ளாறு சனீஸ்வர வழிபாடு அவசியம். காகத்திற்கு உணவு, ஏழை மற்றும் உடல் ஊனமிக்கவர்க்கு  உதவுதல் நன்று.

9.சதுஷ்பாத கரணம் 

சதுஷ்பாத கரணத்தில் பிறந்தவர்கள் முன்பு பேசிய வார்த்தையைப் பின்பு மாற்றிப் பேசுபவர்கள், தரித்திரம் கொஞ்சம் இருக்கும், சிலர் விலை மகளிர் மீது அளவு கடந்த ஆசை, இழிவானவன், ஆத்திரமிக்கவர், தீயவர்,  தத்துவம் மற்றும் சாஸ்திரத்தில்  ஆர்வம் கொண்டவர் என்று நூலில் கூறப்பட்டது. சிலருக்கு ஆரோக்கியம் குறைவு, வறுமை காரணத்தால் சொன்ன சொல்லை காப்பாற்றுவது கடினம். இந்த கரணத்தின்போது தானம், மந்திரம் ஓதுதல் நன்று. இந்த கரணத்தில் சுப காரியம் தவிர்ப்பது நல்லது. சதுஷ்பாத கரணத்தின் வீட்டுவிலங்கு நாய்.

இந்த கரணத்தின் கிரகம் குரு ஆவார். இவர்கள் குறைவான வருமானத்திற்கு கடுமையான உழைப்பார்கள். வங்கி மேலாளர், பொருளாதார வல்லுநர், வழக்குரைஞர், நீதிபதி, தர்மகர்த்தா, பேராசிரியர், ஜோதிட தொழில், பொற்கொல்லர், கால்நடை வளர்ப்பு, ஆன்மிகப் பணி, மந்திரி பதவி, மதப் பிரசாரம், வைதீகம், ஆன்மிக தொடர்பான புத்தகம், பூஜை பொருள் விற்பனை செய்வது நன்று. குரு பகவான் ஆட்சி, உச்சம் பெற்று இருப்பவர்கள் இவற்றில் ஏதேனும் ஒரு தொழில் ஈடுபட்டால், நிச்சயம் வெற்றி பெறலாம்.

வழிப்பட வேண்டிய தெய்வங்கள்/ பரிகாரம்:  ஆலங்குடி, பைரவர் வழிபாடு, மிருகத்திற்கு உணவு அளிப்பது, குரு மற்றும்  சித்தர்களை  நமஸ்கரிப்பது மிகுந்த நற்பலனைத்தரும்.

10. நாகவ கரணம்

நாகவத்தில் பிறந்தவர்கள் அடிக்கடி நோயின் பிணிக்கு உள்ளாவர்கள் ஆத்திரக்காரன், உணர்ச்சியினால் முன்கோபம், பெண் பித்தன், தெளிவற்ற புத்தியுள்ளவன். சிறந்த உணவு வகைகளை உண்பான். துன்பத்தை எதிர்த்து வெல்பவர்கள். உத்தம குணம் கொண்டவர். இவருக்குரிய ஊர்வனம் பாம்பு.

இவர்களின் கரணநாதன் ராகு ஆவார். நாகவ கரணத்தில் பிறந்தவர்கள் பல்வேறு தொழில் செய்து பொருள் ஈட்டுவார் தொழில்நுட்ப அறிவு, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் தொடர்புடைய தொழில்கள், துப்பறியும் முகவர், ஸ்கேன் சென்டர், மதுபான கடை, உரம் தயாரிக்கும் நிறுவனம், விமான துறை, வேதியியல் ரசாயனங்கள்/ மருந்து தயாரித்தல், கமிஷன் வியாபாரம் ஆகியவற்றில் ஈடுபட்டால் நல்ல லாபம் பெறலாம்.

வழிப்பட வேண்டிய தெய்வங்கள்/ பரிகாரம்: சர்ப்ப வாகனம் கொண்ட அனைத்து தெய்வங்கள், நாகத்தம்மன்,  திருவேற்காடு கருமாரி, திருமால், நாகர்கோவிலில் உள்ள நாகராஜா. பல்வேறு மதத்தினருக்கு ஈமச்சடங்கிற்கு தங்களால் முடிந்த அளவு உதவுதல் நன்று.

11. கிம்ஸ்துக்ன கரணம்

கிம்ஸ்துகினத்தில் பிறந்தவர்கள் சண்டை இருந்து கொண்டே இருக்கும், பெரியவர்கள், மாதா பிதாக்களுடன் அன்பு பாராட்டி மகிழ்வான். ஒரு சிலர் பெரும் காமாந்துக்காரன், விலைமகளிடம் விருப்பம் கொண்டு களிப்பான். மேன்மையுடையவன் உலகியல் வாழ்க்கையின் நடைமுறையெல்லாம் அறிந்திருப்பான், யோக சாஸ்திரப்பயிற்சி உடையவர். நண்பர்கள் பெற்றோர்கள் மீது பற்று கொண்டவர்கள் என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த கரணத்தில் பிறந்தவர்க்கு எதாவது ஆவண பிரச்சனை இருக்கும்.  இவர்களின் ஊர்வன விலங்கு  புழு, அட்டை ஆகும் 

இந்த கரணத்தில் ஆதிக்கம் செலுத்துபவர் புதன் பகவான். இந்த கரணத்தில் பிறந்தவர்கள் நோயைக் குணப்படுத்தும் வைத்தியர், பட்டு வளர்த்தல், மூலிகை மருத்துவர், கலை, கணித மேதை, ஸ்டேஷனரி கடை, அச்சு பொறியாளர்,  ஜோதிடம், பத்திரிகை/எழுத்து /தகவல் தொடர்பு துறை, விளம்பரம், தரகு வேலை, பங்குச் சந்தை என்று தொழில் உயர்வைக் கொடுக்கும்.

வழிப்பட வேண்டிய தெய்வங்கள்/ பரிகாரம்:  வைதீஸ்வரன் கோவிலில் வீற்றிருக்கும் தன்வந்தரி, குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி வழிபாடு. மனநிலை குன்றியவர், திருநங்கைக்கு உதவுவது நன்று.

கரணநாதனை எப்படிச் செயல்படுத்துவது:ஒவ்வொருவருக்கும் ஒரு கரண நாதன் உண்டு, அந்த கரணநாதன் நல்ல நிலையில் இருக்கிறாரா என்று பார்க்க வேண்டும். ஒருவேளை ஜாதகரின் கரணநாதன் சரியில்லை என்றால் அவரை நன்கு செயல்பட தானம் மற்றும் அதற்குரிய பரிகாரம் செய்து,  துர் செயல் வராமல் தடுக்க முடியும். கரணநாதன் நன்றாக பலம் பெற்றால் வெற்றி மேல் வெற்றி கிட்டும் என்பது விதி. கரணம் பற்றிய மேலே கூறப்பட்டுள்ள அனைத்து அவரவர் ஜாதகத்தில் கரணநாதன் ஆட்சி உச்சம் பெற்று பலமாக இருந்து, அவரவர் தொழிலில் ஈடுபட்டால், நிச்சயம் வெற்றி பெறலாம். கரணத்துக்கு உரிய மிருகம், கண்ணில் படும்மாதிரி படங்களாகவோ, உருவமாகவோ, பொம்மையாக அல்லது அந்த மிருகத்திற்கு உணவு கொடுப்பதன் மூலமாக கரணநாதனை செயல்படுத்தலாம். எடுத்துக்காட்டாக வீட்டு விலங்கு என்றால் அதனை துன்ப படுத்தாமல் அதற்கு உணவு கொடுக்கலாம். 

Whatsapp message: 8939115647
Email : vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com