திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் சித்ரா பெளர்ணமி விழா வரும் 29-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் இருந்து திருவண்ணாமலைக்கு சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு வரும் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு 640 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் பல்வேறு ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் 28, 29, 30-ம் தேதிகளில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு 500, தாம்பரத்தில் இருந்து 100, அடையாறு, பூந்தமல்லி பேருந்து நிலையங்களில் இருந்து தலா 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
மக்கள் கூட்டத்துக்கு ஏற்ப கூடுதலாகவும் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறினர்.