காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள குமரகோட்டத்தில் பக்தர்கள் அகல் விளக்கு ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதால், அணையா விளக்கில் ஊற்ற நெய் விற்பனை செய்யப்படுகிறது.
முக்தி தரும் தலங்கள் ஏழினுள் முக்கியமானதும், புராண சரித்திரப் பெருமைகள் நிறைந்ததும் கோயில் நகரமான காஞ்சியில் அமைந்த குமரக்கோட்டம் தான். கந்தபுராணம் இத்தலத்தில் அரங்கேறியது.
எண்ணற்ற பெருமைகளை கொண்ட குமரகோட்டம் முருகன் கோயிலில் பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்காக ஏற்றப்படும் விளக்குகளால், அவ்வவ்போது சில விபத்துகள் ஏற்படுகின்றன. கோயில்களில் தீ விபத்துகளை தடுக்க அனைத்து கோயில்களிலும் அணையா விளக்கு வைக்க அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள கோயில்களில் அணையா விளக்கு அமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் காஞ்சிபுரம் குமரகோட்டம் கோயிலில் அகல் விளக்கு ஏற்ற கோயிலின் வடமேற்கு திசையில் தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக அகல் விளக்கு ஏற்ற கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதைத்தொடர்ந்து அணையா விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் விளக்கு விற்பனை நிறுத்தப்பட்டதால் அதற்கு பதில் ஒரு சிறிய பாட்டியில் ரூ.4-க்கு நெய் விற்பனை துவங்கியுள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்றை பெற்றுள்ளது.