திருமலையில் பக்தர்களுக்கு ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க, இனி திருப்பதியில் தரிசன டிக்கெட் ஸ்கேனிங் மற்றும் தங்கும் வசதியை ஏற்படுத்த தேவஸ்தானம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் பக்தர்களின் எண்ணிக்கை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதற்கு ஏற்ப தேவஸ்தானமும் ஆன்லைன் முன்பதிவு, நேர ஒதுக்கீடு முறை, மூத்த குடிமக்கள், கைக் குழந்தைகளின் பெற்றோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர்களுக்கான சிறப்பு தரிசனம் உள்ளிட்டவற்றை அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தேவஸ்தான செயல் இணை அதிகாரி அலுவலகத்தில் விஐபி பிரேக் தரிசனத்திற்கான பரிந்துரை கடிதங்களின் நெரிசலை குறைக்க மேலும் சில நடவடிக்கைகளையும் தேவஸ்தானம் மேற்கொள்ளவுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, கடந்த வெள்ளிக்கிழமை திருமலையில் தேவஸ்தான ஊழியர்களின் குடும்பத்துக்கு சம்பந்தப்பட்ட தரிசனங்கள், லட்டு பிரசாதம், விரைவு தரிசன டிக்கெட் உள்ளிட்டவற்றை பெற, எம்.பி.சி. 34 அருகில் தனி பிரிவை தேவஸ்தானம் தொடங்கியது. அதேபோல் விரைவில் ஊடகங்களுக்கான தரிசனங்கள், லட்டு பிரசாதம், பரிந்துரை கடிதங்களுக்கென தனிப் பிரிவை தேவஸ்தானம் தொடங்க உள்ளது.
அதன்பின்னர் திருமலைக்கு வரும் சாதாரண பக்தர்களை திருப்பதியில் தங்க வைத்து அங்கு அவர்களுக்கு தேவையான நேர ஒதுக்கீடு டோக்கன், விரைவு தரிசன ஸ்கேனிங், லட்டு டோக்கன் உள்ளிட்டவற்றை அளிக்க, தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இதற்காக திருப்பதி, திருமலையில், நேர ஒதுக்கீட்டு கவுன்ட்டர்களை தேவஸ்தானம் விரைவாக ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு செய்வதால் திருமலையில் பக்தர்களுக்கு கூட்ட நெரிசலை குறையும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.
இன்னும் ஓரிரு நாள்களில் தேவஸ்தான அறங்காவலர் குழு நியமனம் செய்யப்படவிருக்கிறது. அதன் பின்னர், குழு உறுப்பினர்களுடன் இதுகுறித்து ஆலோசித்து நடைமுறைப்படுத்த உள்ளதாக தேவஸ்தான அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.