ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் எது என்று ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது பிரசித்தி பெற்றதாகும். இங்குள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை வலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீ உண்ணாமுலையம்மனை தரிசித்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். எனவே, ஒவ்வொரு மாதமும் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில், ஐப்பசி மாதத்துக்கான பௌர்ணமியையொட்டி, செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 23) இரவு 10.02 மணி முதல் புதன்கிழமை (அக்டோபர் 24) இரவு 11.00 மணி வரை கிரிவலம் வரலாம் எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, அடுத்த இரண்டு நாட்களுக்கு அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.