சப்தஸ்தான விழா சிறப்புகள்

தமிழக கோயில்களில் வருடந்தோறும் நடைபெறும் சிறப்பு வாய்ந்த திருவிழாக்களில் சித்திரை மாதத்தில் திருவையாற்றில் நடைபெறும் சப்த ஸ்தான விழாவும் ஒன்று.
சப்தஸ்தான விழா சிறப்புகள்

தமிழக கோயில்களில் வருடந்தோறும் நடைபெறும் சிறப்பு வாய்ந்த திருவிழாக்களில் சித்திரை மாதத்தில் திருவையாற்றில் நடைபெறும் சப்த ஸ்தான விழாவும் ஒன்று.

சப்தஸ்தானம் என்பது ஏழு இடங்கள் என்று பொருளைக் கொண்டவை ஆகும். அந்த இடமான ஏழு ஊர்களைக் குறிக்க இச்சொல்லைப் பயன்படுத்திக் கொண்டனர். ஏழு ஊர் மக்களும் இணைந்து நடத்தும் விழா இது.

தமிழகத்தில் பல இடங்களில் சப்தஸ்தானம் எனப்படும் ஏழு இடங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. சப்த + ஸ்தானம் என்றால் ஏழு புனித இடங்கள் என்றாகும். பெரும்பாலும் கோயில்களுடன் தொடர்புடைய சொல்லாக இச்சொல் பயன்படுத்தப்பட்டு வந்ததால், இத்தலங்களை புனிதத் தலங்கள் என்றும், சப்தஸ்தானத் தலங்கள், என்றும் குறிப்பிட்டு வருகிறோம்.

நந்தியார்க்கு விழா

சப்தஸ்தான விழாவிற்கு முன்னதாக நடைபெறுவது நந்திதேவர் விழாவாகும். இது மிகவும் முக்கியத்துவம் கொண்டவை. சிலாதமுனிவருக்கு புதல்வராய்த் தோன்றியவர்தான் திருந்தியாராவார். சிலாத முனிவருக்குத் தவப்புதல்வனாகத் தோன்றிய அதிகார நந்திகேச்வரருக்குத்  திருமழபாடியில் தோன்றிய சுயசாம்பிகை என்ற பெண்ணைத் திருமணம் செய்துவைக்கத் திருவையாற்றிலிருந்து ஈசன் ஐயாறப்பரும் ஈஸ்வரி தர்மசம்வர்தனி அம்பிகையும் பங்குனி மாதம் புனர்பூசத்தன்று திருமழபாடிக்குப்  பல்லக்கில் எழுந்தருளுகிறார்கள். அன்று இரவே, புதுமணத் தம்பதியரோடு கொள்ளிடத்தைக் கடந்து, திருவையாற்றை அடைகிறார்கள்.

ஏழு ஊர் மக்களும் ஒருங்கிணைந்து நடத்தும் வைபவம் இது. காவிரியின் வறண்டப் படுகையில் கொதிக்கும் மணலில் கால்கள் சுடுவதையும் பொருட்படுத்தாமல் ஆற்றைக் கடந்து  பல்லக்குகளைச் சுமந்து செல்வார்கள். கரை ஏறும்போது மிகவும் பிரயத்தனம் செய்தால் தான், பல்லக்கை கரை ஏற்ற முடியும். அப்போது, சுடுமணலில் தென்னை ஓலைகளைப் பரப்பி வைத்திருப்பார்கள்.

கரை ஏறியவுடன் வீதிகளில் நீரைத் தெளித்தும், பல்லக்குத் தூக்கி வந்தவர்களுக்கு நீரும், மோரும் பாணக்காரமும் வழங்கி ஊர் மக்கள் தொண்டு செய்வார்கள். புது மணத் தம்பதியரை அழைத்துக் கொண்டு, சித்திரை மாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் விசாகத்தன்று திருவையாற்றை விட்டுக் கண்ணாடிப் பல்லக்கில் புறப்பட்டு, அதைச் சுற்றிலும் உள்ள ஆறு ஊர்களுக்கு எழுந்தருளி அவர்களை ஊர் மக்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதே இவ்விழாவின் அடிப்படை. நோக்கமாக நடைபெறுகிறது.

நந்தீஸ்வரருக்கும் சுயசாம்பிகைக்கும் திருமணம் நடந்த திருமழபாடி வைத்தியநாதர் கோயிலில் இதனைக் குறிக்கும் விதத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நந்திதேவர் விழா பெருவிழாவாக நடைபெற்று வருவது வழக்கம். 

அன்றைய நாளில் திருவையாற்று ஈசன் ஐயாறப்பர் இங்கு எழுந்தருளி அருள்வதும் திருவையாற்றில் நடைபெறும் சப்தஸ்தான விழாவிற்கு திருமழபாடியிலிருந்து நந்திதேவர் புறப்பட்டுச் செல்லுவதும் மரபாக இருந்து வருகின்றது.

இந்த விழா திருவையாற்றில் வரும் மே மாதம் 1 மற்றும் 2 தேதிகளில் நடைபெறுகிறது. இந்தத் திருமண வைபவிழாவை நேரில் காணும் பாக்கியத்தை, கல்யாணமாகாத வரன் தேடுவோர் உடனடியாக திருமண பிராப்தி உண்டாகும். இக்காரணத்தில்தான் இப்பகுதியில் "நந்தி கல்யாணம் பார்க்க முந்தி கல்யாணம் ஆவர்" என்ற சொல் வழக்கு நிலவுவது உண்மை.

சப்தஸ்தான விழா

சப்தஸ்தான விழாவை ஏழூர்த் திருவிழா என்றும் கூறுவர். ஏழு ஊர்கள் சேர்ந்து கொண்டாடும் திருவிழா இது. இவ்விழா தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறும் புகழ்பெற்ற திருவிழா. இத்திருவிழா பெரும்பாலும் சைவக் கோயில்களோடு தொடர்புடையதாக இருக்கும். இவ்விழாவின் போது ஒரு கோயில் முதன்மைக் கோயிலாக அமைந்திருக்கும்.

விழாவின் முக்கிய நிகழ்வாக அமைவது தொடர்புடைய கோயில்களுக்கு அந்தந்த பல்லக்குகள் சென்றுவரும் நிகழ்வாகும். ஒவ்வொர் ஆண்டும் குறிப்பிட்ட நாளில் முதன்மைக் கோயிலிலிருந்து பல்லக்கு கிளம்பி பிற ஆறு தலங்களுக்கும் சென்றுவிட்டு, நிறைவாக கிளம்பிய தலமான முதன்மைக் கோயிலுக்கே வந்து சேருவது மரபாக இருந்து வருகிறது.

முதன்மைக் கோயிலிருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அக்கோயிலைச் சார்ந்த ஈசனும், ஈஸ்வரியும் உலா வருவர். இங்கிருந்து பிற தலங்களுக்குச் செல்லும்போது அந்தந்த கோயிலிலுள்ள பிற ஈசனும், ஈஸ்வரியும் உள்ள பல்லக்குகள் இதனோடு சேர்ந்து கொள்கின்றன. 

ஊர்மக்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்துகொள்வர். இந்நிகழ்வினைக் காண அருகிலுள்ள ஊர்களிலிருந்தும் மக்கள் வருவதால் ஒரு சமூகப் பண்பாட்டுப் பிணைப்பு உண்டாகிறது. வெளியூரில் இருக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் முன்கூட்டியே அழைப்பு விடுத்து வரச்செய்கின்றனர். அந்தந்த ஊர்களில் தம் வீட்டு விழாவினைப் போல ஈடுபாட்டோடு மக்கள் கொண்டாடுவர்.

திருவையாறு பல்லக்கு முதலில் கும்பகோணம் செல்லும் சாலையில்  சுமார் மூன்று கி.மீ. தொலைவிலுள்ள திருப்பழனத்தை அடைகிறது. இது திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரின் தேவாரப் பாடல்களைப் பெற்ற தலம். இத்தலத்து ஈசுவரரான ஆபத்சகாயர் , அம்பிகையுடன் பல்லக்கில் எழுந்தருளி வீதி வலமாகத் திருவையாற்றுப் பல்லக்குடன் , திருவேதிகுடியை அடைகிறார். 

வேதங்களால் வழிபடப்பெற்ற வேதபுரீஸ்வரரும் தமது பல்லக்கில் மற்ற இரு பல்லக்குகளுடன் சேர்ந்துகொள்கிறார். மூன்று பல்லக்குகளும் திருச்சோற்றுத்துறையை அடைகின்றன. மூவர் பாடலும் கொண்ட இத்தலம், கண்டியூருக்குக் கிழக்கே சுமார் மூன்று கி.மீ. தொலைவில் இருக்கிறது. இக்கோயிலில் அண்மையில் புதியதாகச் செய்யப்பெற்ற கண்ணாடிப்பல்லக்கில், ஒதனவநேச்வரரும், அன்னபூரணி தேவியும் எழுந்தருளிக் கொள்வார்கள்.

இத்தலத்தின் பெயருக்கு ஏற்ப அன்னதானம் செய்யப்படுகிறது. ஊரே விழாக்கோலம் பூண்டு விளங்கும். நான்கு பல்லக்குகளும்  அஷ்ட வீரட்டத்துள் ஒன்றான திருக்கண்டியூரை வந்து அடையும். இங்கு பிரம்ம சிர  கண்டீஸ்வரர் அம்பாளுடன் பல்லக்கில் எழுந்தருளுவார். வீதி வலமாகத் திருப்பூந்துருத்தி என்ற பாடல் பெற்ற தலத்தை  அடைகிறார்.

அப்பர் பெருமான் பல காலம் தங்கி, சிவப்பணி செய்த தலம் இது.  இந்தத் தலத்திலிருந்து ஆறு பல்லக்குகளும் காவிரிக்கரையில் உள்ள திரு நெய்த்தானத்தை வந்து சேர்கின்றன. தில்லைஸ்தானம் என்று தற்காலத்தில் வழங்கப்படும் இப்பாடல் பெற்ற தலத்தில் ஏழு பல்லக்குகளையும்  கோயிலுக்குள் காணமுடியும்.

பாலாம்பிகையும் க்ருதபுரீஸ்வரரும் இங்கு பல்லக்கில் எழுந்தருளி, ஏனைய ஆறு பல்லக்குகளுடன் இணைந்து திருவையாற்றை நோக்கிப் புறப்படும்போது தீபாராதனை, வானவேடிக்கைகள் ஆகியவை விமரிசையாக நடைபெறும். ஏழு பல்லக்குகளும் திருவையாற்று வீதிகளில் எழுந்தருளி, ஐயாறப்பரின் திருக்கோயில் வாயிலை அடைந்தவுடன் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறும். இதன் பின்னர் பிற தலங்களில் இருந்து வந்த பல்லக்குகள் தமது ஊருக்குத் திரும்பிச் செல்கின்றன.

நாமெல்லாம் கண் பெற்ற பயனை கண்ணாடிப் பல்லக்கைத் தரிசிப்பது தான். அது உண்மை என்பதை இவ்விழாவிற்கு  சென்றவர்கள் உணர்ந்திருப்பார்கள். ஒரே நேரத்தில் ஏழு தலத்து மூர்த்திகளையும் தக்ஷிண கயிலாயமான திருவையாற்றில் காணும்போது நம் நெஞ்சம் ஆனந்தித்து கண்கள் நீரை ஒழுக்கும். அப்பர் பெருமானின் வாக்கான *கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்*  என்ற பாடல் வரிகள் நெஞ்சை விட்டு அகலாது. கண்களும் அத்திருவடிகளை விட்டு அகல மறுக்கும்.

ஏழுவூர் தலங்களாவன

1.திருவையாறு ஐயாறப்பர் கோயில்,
2.திருப்பழனம்,
3.திருச்சோற்றுத்துறை,
4.திருவேதிகுடி,
5.திருக்கண்டியூர்,
6.திருப்பூந்துருத்தி
7.திருநெய்த்தானம் ஆகியவை.

பூச்செரியும் நிகழ்வு நடக்கும்போது, திருமுறைகள் ஓதிக்கொண்டு பல்லக்குடன் பக்தர்கள் செல்வது காணக்கிடைக்காத காட்சி. 

குழுமியிருக்கும் இடங்களில் பக்தர்களின் தாகம் தீர்க்க அனேக இடங்களில் தண்ணீர் கொடுப்பார்கள். மேலும், இடையிடையே பக்தர்கள் சோர்வு அடையாமல் இருக்க பானக பானங்களை (கருப்பட்டியும் புளியும் இணைந்த கரைசல்) ஆங்காங்கே வழங்கிக் கொண்டிருப்பார்கள். நிறைய இடங்களில் அன்னதானமும் செய்விப்பார்கள். காலையில் இங்கு வந்து சேர்ந்தால் மறுநாள் காலை வரை இந்த ஈசனோடு உடனிருந்து உலா வரலாம்.

வலம் வரும் இடங்களெல்லாம் பல்லக்கில் உள்ள ஈசனுக்கும், ஈஸ்வரிக்கும் சிறப்புப் பூஜைகளும், கற்பூர ஆராதனைகளும் தொடர்ந்து கொண்டிருக்கும். பல்லக்கு வரும் வழியை எதிர்கொண்டு, வீட்டு வாயிலில் நின்றுகொண்டு பல்லக்குகளை எதிர்கொண்டு அழைப்பர். ஈசனே பகதனைத் தேடி வரும்போது, ஈசனுக்காக பக்தர்கள் அவரவர் வீட்டு வாயிலில் காத்திருப்பர். அவரவர் வீட்டு  முற்றத்திலிருந்தே ஈசனுக்கு வழிபாடு செய்து மனமினித்த வாஞ்சையோடு மக்கள் வழியனுப்புவார்கள்.

மற்ற சப்தஸ்தானங்கள்

திருவையாற்றை மையமாகக் கொண்டு திருவையாறு சப்தஸ்தான விழா நடப்பதைப் போல தமிழகத்தில் பல இடங்களில் சப்தஸ்தான விழா நடைபெறுவதும் வழக்கம்.

அவை, 1.சக்கராப்பள்ளி சப்தஸ்தானம், 2.மயிலாடுதுறை சப்தஸ்தானம், 3.கும்பகோணம் சப்தஸ்தானம், 4.கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம், 5.திருநல்லூர் ஹசப்தஸ்தானம், 6.திருநீலக்குடி சப்தஸ்தானம், 7.கஞ்சனூர் சப்தஸ்தானம், 8.நாகப்பட்டினம் சப்தஸ்தானம் ஆகும்.

- கோவை கு.கருப்பசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com