திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை (ஜூலை 11) ஆனி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.
இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையர் சி.குமரதுரை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை (ஜூலை 11) ஆனி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகத்தை தொடர்ந்து கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது.
காலை 9 மணிக்கு விமானங்களுக்கு வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது. அதே போல இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி அம்மனுடன் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் நடைபெறுகிறது.